தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-4:6-பொறியியல் (Engineering)

  • 4.6 பொறியியல் (Engineering)

    இது இயந்திரம் முதலியவற்றை உருவாக்குதல், பராமரித்தல் முதலியவற்றைக் குறிக்கும். ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் விளைவால் புதுப்புது இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனால் மேலை நாடுகளில் பெரிய தொழிற்சாலைகள் தோன்றின. தொழில் வளம் பெருகியது. அது போல் இந்தியாவும் தொழிலில் முன்னேறும் என்ற நம்பிக்கை பாரதிக்கு இருந்தது. இந்தியர் ஏதும் அறியாதவர் என வெள்ளைக்காரர் நினைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பெரிய தொழில் முதல் குடிசைத் தொழில் வரை இந்திய நாட்டு மக்கள் செய்வார்கள் என்பதை,
     


     

    ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
         ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்


    குடைகள் செய்வோம் உழுபடைகள் செய்வோம்
         கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்
    நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
         ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

    (பாரத தேசம் - 9,10)

     

    (உழுபடை = உழுவதற்குப் பயன்படும் கருவிகள், நடையும் = சாலையில் செல்லும் சக்கர வண்டி, பறப்பும் = வானவெளியில் செல்லும் விமானம் போன்றவை, ஞாலம் = உலகம்)

    என்று பாடியிருக்கின்றார்.

    அக்காலத்தில் விஞ்ஞானக் கதைகளில் கூறப்பட்ட பல கருவிகள் இக்காலத்தில் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் கற்பனை செய்த ‘மந்திரக் கண்ணாடி’ இன்றைய தொலைக்காட்சி, ‘புஷ்ப விமானம்’ தான் ஆகாய விமானம். எதிரொலியின் பிரதிபலிப்புத்தான் வானொலி. பாரதியின் உழுபடை இப்போதுள்ள டிராக்டர் எனக் கொள்ளலாம்.

    இதுபோல் பாரதியும் தொலைதூரத்தில் ஒருவர் பேசுவதைக் கேட்கும் வகையில் கருவி கண்டுபிடிக்கப்பட வேண்டுமென்று பாடுகிறார்.
     

    காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான்
         காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்

    (பாரத தேசம் - 7)
     

    மேலும் பாரதியார்,
     

    பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
    பண்ணி மலைகளென வீதி குவிப்போம்

    (பாரத தேசம் - 8)
     

    என்ற பாடலில் பட்டாடை, பருத்தி ஆடை முதலியன செய்வதில் பாரதநாடு புகழ்பெற்றது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:38:31(இந்திய நேரம்)