Primary tabs
-
1.0 பாட முன்னுரை
அன்பர்களே! இதோ புதுச்சேரி நகரைக் காணுங்கள்! கடலலைகள் தாலாட்டக் கவின் மிகுந்த கட்டடங்களும், பெருவீதிகளும் அமைந்த இந்த அழகுக்கோலத் தலைநகர் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியில் இருந்த காலம். தோப்பும் துரவுமாய் (துரவு - பாசனத்துக்கு உதவும் பெருங்கிணறு) இருந்த இந்தப் புதுச்சேரியில் ஒரு குயில் தோன்றிற்று. வையகத்து வாழ்க்கையையே மாற்றும்படியாக அக்குயில் புரட்சிக் குரல் கொடுத்தது.
கடலலைகளும், கட்டிடங்களும்,
பெருவீதிகளும் அமைந்த புதுச்சேரி நகரம்காட்சி (164kb)
தொட்டாலும் கைம்மணக்கும்; சொன்னாலும்
வாய்மணக்கும்; துய்ய சேற்றில் நட்டாலும்
தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே!
என்று கவிஞர் ஒருவருடைய கவிதையைப் பற்றிப் பழங்காலப் புலவர் ஒருவர் பாடினார். உண்மையில் புதுச்சேரியில் பிறந்த அந்தப் புரட்சிக் குயிலின் பாட்டிற்கு முற்றிலும் இது பொருந்தும். இதோ! அந்தக் குயிலின் செம்மாந்த தோற்றத்தைக் காணுங்கள்!
பாரதிதாசன்
புதுச்சேரியின் புரட்சிக் குயில்
வாரிப்படிந்த தலை! வண்டு மீசை! சுடர் எரிக்கும் கண்கள்! நிமிர்ந்த மார்பு! எவர்க்கும் அஞ்சாத பீடு (பெருமை) காட்டும் தோற்றம்! ஆம்! இந்தக் குயில்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இவர் காலம் எவ்வாறு இருந்தது? அக்காலத்தில் கவிதையின் உள்ளுறை கருத்து எவ்வாறு இருந்தது? என்பவற்றைக் காண்போமா?