தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.2 தமிழ் உலகில் கவிஞர்

  • 1.2 தமிழ் உலகில் கவிஞர்

    E


    சி.பங்காரு பத்தர்

    பெரியசாமிப்பிள்ளை

    கல்வே கல்லூரியின் தமிழாசிரியராக இருந்தவர் சி. பங்காரு பத்தர் என்பவர். இவர் அன்று புதுவையில் வெளியான 'கலைமகள்' என்ற இலக்கிய இதழுக்கு ஆசிரியர். அதனோடு புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் ஆவார். பங்காரு பத்தரிடம் பாரதிதாசன் உயர்நிலைக் கல்வி பெற்றார். வகுப்பில் தம்மோடு பயின்ற நாற்பது மாணவர்களில் முதலாமவராகத் திகழ்ந்தார். அரசு தகுதிமிக்க மாணவருக்கு வழங்கும் படிப்புதவித்தொகை பெற்றார். இக்கல்லூரியில் கவிஞர் ஓரளவு பிரெஞ்சு மொழியும், பிரான்சு நாட்டு வரலாறும் பயின்றார். பதினேழாம் வயதிற்குள் இவ்வுயர் கல்வியைப் பாரதிதாசன் முடித்து வெற்றி பெற்றார். பாரதிதாசன் ஓர் ஆசிரியராக இருந்து கற்பிக்கும் தகுதி பெற்றார். இந்தத் தகுதியோடு அமையாது பாரதிதாசன் சிறந்த தமிழ்க் கல்வி பெறவேண்டுமென்று விரும்பிய அவருடைய தந்தையார் அவரைச் சாரம் மகாவித்துவான் பு.அ.பெரியசாமிப்பிள்ளை என்ற தமிழாசிரியரிடம் கல்வி பயில அனுப்பினார். இக்கல்வியே பாரதிதாசனாரைத் தமிழ் உலகில் நிலை பெற வைத்தது.

    1.2.1 தமிழ்க்கல்வி

    சாரம் மகாவித்துவான் பெரியசாமிப் பிள்ளையிடம் பாரதிதாசன் கற்ற கல்வி அவருக்கு அழுத்தமான புலமையைத் தந்தது. இக்கல்வி அவருக்குப் புராண இலக்கியங்களிலும் ஓர் ஆழ்ந்த பயிற்சியைத் தந்தது. கவிஞரின் மகன் மன்னர் மன்னன் குறிப்பிடும் கீழ்க்காணும் நிகழ்ச்சி இதற்குச் சான்று அளிக்கின்றது.

    கவிஞரின் மகன் மன்னர் மன்னன்

    "ஒருநாள் விசுவலிங்கம் பிள்ளை உரை நிகழ்த்தி வரும்போது”, 'அல்லை ஈது அல்லை ஈது என நான்மறைகளும்' என்று தொடங்கும் அவையடக்கச் செய்யுளின் 'ஆசை என் சொல்வழி கேளாய்' என்று கடைசி வரியைச் சொல்லி முடித்தார். அப்பாடல் வரியை மனதால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த இளந்தமிழாசிரியர் சுப்புரத்தினம் எழுந்து நின்று 'கேளாய் என்பதில்லைங்க, கேளா என்பதுதான் பாடல் என்றார்.

    'நீ சின்ன பையன், உனக்கென்ன தெரியும்? சும்மா உட்காரப்பா, என ஆணவத்தோடு மீண்டும் கூறினார் பிள்ளை.

    'அப்படியில்லைங்க! நீங்கள் கூறியது பிழை! என்று அழுத்தந்திருத்தமாகப் பேசினார் சுப்புரத்தினம். . .

    திருவிளையாடற் புராண நூல் ஒன்று எடுத்துவரப்பட்டது. முதுபெரும்புலவர் கூனிக் குறுகிப் போனார்.

    'மூலச்செய்யுளையே பிழையாகப் பாடும்படி என் ஆசிரியர் என்னைப் பயிற்றுவிக்கவில்லை. . . . "

    என்பதே அந்த நிகழ்ச்சி. இதிலிருந்து கவிஞர், பெரியசாமிப்பிள்ளையிடம் கற்ற கல்விப் பெருமை விளங்கும். பெரியபுராணம், தாயுமானவர் பாடல்கள், இராமலிங்க சுவாமிகளின் அருட்பா, திருக்குறள், நிகண்டுகள், சதகங்கள், அந்தாதிகள் ஆகியனவற்றில் பலப்பல பகுதிகள் அவரால் மனனம் (மனப்பாடம்) செய்யப்பட்டிருந்தன. பதினேழு வயதிற்குள் தகுதிவாய்ந்த தமிழறிஞராகக் கவிஞர் உருவானார்.
     

    தமிழ் இலக்கணம் தமிழ் இலக்கியம்
    எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் புதுவைத்
    திருப்புளிசாமி ஐயா, செந்தமிழ்
    இருப்பே என்னும் பங்காரு பத்தர்
    புலவர்க்குப் புலமை ஈந்து, நிலவு
    பெரும்புகழ்ப் பெரியசாமிப் பிள்ளை
    என்பவர் ஆவர். இவர்களின் அருளினால்
    பதினேழாண்டும் பற்றா இளையேன்
    நாற்பது புலவர் தேர்வில் முதலாத்
    தேர்வு பெற்றேன் . . .

    என்று அவரே தாம்பெற்ற தமிழ்க்கல்வியைக் குறிப்பிடுகின்றார்.
     

    1.2.2 பக்திப் பாடல்கள்
     

    பாரதிதாசன் முப்பது வயது வரையில் பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். 'கடவுள் அருள் இதோ' என்று சொல்லும்படியான பாடல்களைத் தாம் பாடிக்கொண்டிருந்தாலும் அடிமனத்தில் கடவுள் உருவங்களைப் பற்றி ஆராய்ச்சி இருந்ததென்று அவர் கூறுகின்றார்.
     

    இந்தப் பாட்டைத் திரும்பப் படித்துப் பாருங்கள்! இதுபோல நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடினார் கவிஞர். முருகன், பிள்ளையார், சிவபெருமான், திருமால், கலைமகள் ஆகிய பல தெய்வங்களைக் கவிஞர் பாடியுள்ளார். பசுவைத் தெய்வமென்று வணங்க வேண்டுமென்று பாடியுள்ளார். முப்பது வயதிற்குப் பிறகு இந்தப் போக்கு மாறியது. புரட்சிக் கவிஞராவதற்குரிய தொடக்கம் முப்பது வயதிற்குப்பின் நிகழ்ந்தது.
     

    1.2.3 ஆசிரியப்பணி
     

    கவிஞர் தம் பதினேழாம் வயதில் 26.7.1909இல் நிரவி என்ற ஊரில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மெலிந்த உடலோடும் குறைந்த வயதோடும் புகுந்த 'இவரா ஆசிரியர்' என்று முதலில் எண்ணியவர்கள், பின்னர் பாராட்டும் படியாகப் பணி செய்தார். நிரவியிலே தொடங்கிய இவரது ஆசிரியப்பணி நிலையாக
     

    ஓர் ஊரில் பல ஆண்டுகள் நீடிக்கவில்லை. அரசியல்வாதிகளால் அவ்வப்போது தொல்லைக்கு உள்ளானார்; ஊர்விட்டு ஊர் மாற்றப்பட்டார். தம் பணிக்காலத்தில் அவர் பதினாறு பள்ளிக் கூடங்களைப் பார்த்து விட்டார். ஏறத்தாழ இரண்டாண்டுக் காலம் பணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். மாணவர்கள் நலம் காக்கவும், ஊர்மக்கள் நலம் பேணவும் தாம் சென்ற இடமெல்லாம் போரிட்டார். செல்வர்களாகவும் அரசியல் துறையில் வலிமை படைத்தவர்களாகவும் இருந்தோர் ஊர்மக்களை இவருக்கு எதிராக இயங்கச் செய்தார்கள். இவருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாதென்று கட்டுப்பாடு விதித்தனர். ஒருமுறை இவருடைய இறந்த கைக்குழந்தையை இவரே கையில் எடுத்துக் கொண்டுபோய் அடக்கம் செய்ய நேரிட்டது.

    தன் இறந்த குழந்தையை அடக்கம் செய்யும் காட்சி

    ஆசிரியப் பணி செய்த காலத்திலே பாரதிதாசன் பல மாற்றங்களைச் செய்தார். பெரும்பாலும் தொடக்க வகுப்புக்குப் பாடம் கற்பிப்பதிலேயே அவர் காலம் கழிந்தது. 'அ' என்ற எழுத்தைக் கற்பிக்க 'அணில்' என்ற சொல்லைத்தான் காட்ட வேண்டுமா? 'அம்மா' என்று அனைவரும் அறிந்த சொல்லைக் காட்டக் கூடாதோ என்று அவர் கேட்டார். ஆங்கில ஆதிக்கம் நிலவிய தமிழ்நாட்டில் பாடமாக இருந்த தமிழ்ப் புத்தகமே புதுவையிலும் பாடமாக இருந்தது. அதில் இங்கிலாந்து மன்னர் பற்றிய பாடத்தைக் கற்பிக்கக் கவிஞர் மறுத்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்று கொள்கைகளை உலகிற்குக் கூறும் பிரெஞ்சுக்குடியரசில் இப்படி ஒரு பாடமா என்று அவர் கேட்டார்.
     


     

    பிரெஞ்சுமொழி ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியத்தைத் தமிழாசிரியர்களுக்கும் வழங்க வேண்டுமென்று கவிஞர் போராடினார். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பள்ளியிலே சேர்ந்து படிக்கப் பிறர் ஏற்படுத்தியிருந்த தடைகளை அகற்றினார். இவர் தேர்வாளராகப் பணிசெய்த காலத்தில், நூற்றுக்குப் பத்துப்பேரே தமிழில் தேர்ச்சிபெற்ற நிலைமாறி நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தேர்ச்சி பெற்றனர்.

    அஞ்சாமை, பொதுநலம், கல்விப்பணியில் தளராத ஊக்கம், ஆகியன இந்த ஆசிரியரின் அரும் பண்புகளாகத் திகழ்ந்தன.

புதுப்பிக்கபட்ட நாள் : 21-09-2019 11:17:17(இந்திய நேரம்)