Primary tabs
வீட்டுப் பொறுப்பைப் பெண் ஏற்றுச் சிறப்பாகச் செய்வதைப் போல் ஏதேனும் தொழிலை நேர்மையாகச் செய்து பொருள் ஈட்டுவது ஓர் ஆணின் கடமை ஆகும். தொழில் செய்வது ஆணுக்கு உயிர் போன்றது என்பதை, ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ (135) என்று குறுந்தொகை தெரிவித்துள்ளது.
இக்கருத்துக்கு ஏற்ப, ‘குடும்ப விளக்கி’ல் தலைவன் நேர்மையான வாணிகம் செய்து வாழ்க்கை நடத்துவதைப் பாரதிதாசன் காட்டியுள்ளார்.
பெற்றோரைப் பேணிக் காப்பதும் ஓர் ஆணின் கடமை ஆகும். வயது முதிர்ந்த பெற்றோரின் வருத்தம் தீரும் வகையில் அவர்களிடம் உரையாடுவதும் அவர்களுக்கு உதவுவதும் சிறந்த பண்பு ஆகும். இந்த உயர் பண்பைக் ‘குடும்ப விளக்கில்’ தலைவனிடம் படைத்துக் காட்டுகிறார் பாரதிதாசன்.
கடையிலிருந்து திரும்பிய கணவனிடம் தலைவி, “அம்மாவும் அப்பாவும் வந்திருக்கிறார்கள்” என்று சொன்னாள். அத்துடன் அவர்கள் வழிப்பயணத்தால் துன்பம் அடைந்தார்கள் என்பதையும் தெரிவித்தாள். தனது தந்தையார் நடந்து வந்ததால்தான் இந்தத் துன்பம் அடைந்தார் என்று அறிந்தான் தலைவன். தந்தையிடம் சென்று ஆதரவாக,
தள்ளாத பருவம்தன்னில்
நைந்திடும் வண்ணம் நீங்கள்
நடந்திடலாமா?(குடும்ப விளக்கு I- ‘தலைவி சொன்ன புதுச் செய்தி’)
என்று கேட்டான். நல்ல மகனையும், மருமகளையும் பெற்ற நீங்கள் ஏன் அங்கும் இங்கும் அலைய வேண்டும்; இங்கேயே இருங்கள் என்று பொறுப்புடன் கூறும் குடும்பத் தலைவனைக் காட்டியுள்ளார் பாரதிதாசன்.