தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.5-கல்வி அறிவு இல்லாத குடும்பம்

  • 6.5 கல்வி அறிவு இல்லாத குடும்பம்
     

    E

    ஒரு வீட்டில் உள்ளவர்களிடம் கல்வி அறிவு இல்லை என்றால் அந்த வீடு செல்வத்தையும், புகழையும் இழக்கும்; தீராத பழி வந்து சேரும் என்பதைப் பாரதிதாசன் தமது ‘இருண்ட வீடு’ காவியத்தில் காட்டியுள்ளார்.
     

    6.5.1 படிப்பு அறிவற்ற தலைவி
     

    குடும்பத் தலைவர் வாணிகத்தின் வழியாகப் பொருள் ஈட்டுகிறார். அவருக்குச் சிற்றம்பலம் என்பவர் கடன் கொடுக்க வேண்டும். இந்தச் சிற்றம்பலம் கடனைக் கொடுக்காமல் ஐதராபாத்திற்கு ஓடிவிடத் திட்டம் தீட்டியிருந்தார். இதை அறிந்த தலைவரின் நண்பர் ஒருவர், இச்செய்தியைக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார்.

    தலைவரின் வீட்டுக்கு வந்த கடிதத்தைத் தலைவி பார்த்தாள். அவள் கல்வி அறிவு இல்லாதவள். ஆதலால், அந்தக் கடிதத்தைத் திருமண அழைப்பிதழ் என்று எண்ணினாள்; அக்கடிதத்தை ஒரு வாரமாகத் தலைவரிடம் காட்டவில்லை.

    கடிதம் கிடைக்காததால் தலைவர், சிற்றம்பலத்திடம் பணம் வசூலிக்க உடனே ஆள் அனுப்பவில்லை. அவன் பணத்தைக் கொடுக்காமல் ஐதராபாத்திற்கு ஓடி விட்டான் என்ற செய்தியை அறிந்து தலைவர் வருந்தினார்.

    தலைவி கல்வி அறிவு பெற்றவளாக இருந்திருந்தால் கடிதத்தின் செய்தியைப் படித்துத் தெரிந்திருப்பாள். உடனே தலைவரிடம் அதைத் தெரிவித்திருப்பாள். இருண்ட வீடு காவியத்தில் இடம்பெறும் தலைவி கல்வி அறிவு இல்லாதவள். எனவே, தலைவனுக்குப் பொருள் இழப்பு ஏற்படக் காரணமாகிவிட்டாள்.
     

    6.5.2 தலைவரின் கோபம்
     

    பொருள் இழப்பு ஏற்பட்டதால் தலைவர் கோபம் கொண்டார். தலைவியும் ‘விட்டேனா பார்’ என்று சண்டைக்கு எழுந்தாள். இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று கோபித்துக் கொண்டு தலைவர் வெளியேறி விட்டார். அப்போது அவர்,
     

    குட்டிச் சுவரின் கோடியில் இருக்கும்
    இரிசி வீட்டின் எதிர்த்த வீட்டில்
    இருப்பேன். நீயோ என்னை அங்கு
    வந்து கிந்து வருவாய் கிருவாய்
    என்று கூப்பிட எண்ண வேண்டாம்.
    அந்த வீட்டு எண் அறுபத்து இரண்டுதான்.
    தெருப்பக்கத்தில் இருக்கும் அறையில்
    இருப்பேன்; அழைத்தால் வரவே மாட்டேன்.
    என்று தலைவர் இரைச்சல் போட்டு
    நடைவரைக்கும் போய் இடையில் திரும்பி
    அழைப்பார் இல்லை ஆதலால் மீண்டும்
    திரும்பிப் பார்த்துத் தெருவோடு சென்றார்

    (இருண்ட வீடு: 20)
     

    என்று கூறிவிட்டுச் சென்றதாகப் பாரதிதாசன் பாடியுள்ளார். இந்தப் பகுதியில் தலைவர் தமது கோபத்தை உணர்த்தக் கருதியதால் வீட்டை விட்டு வெளியேற எண்ணினார். தலைவி தன்னை ‘வெளியே போக வேண்டாம்’ என்று சொல்லித் தடுப்பாள் என்று அவர் எதிர்பார்த்தார். கல்வி அறிவும் குடும்பப் பொறுப்பும் சிறிதும் இல்லாத தலைவிக்கு இது எங்கே புரியப் போகிறது. அவள் அதைப் பற்றிக் கவலைப்படாமலேயே இருந்தாள் என்பதை நகைச்சுவை உணர்வுடன் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளதைக் காண முடிகிறது.
     

    6.5.3 நெறிமுறை அறியாத தலைவி
     

    இரவு பத்து மணிக்குத் தலைவர் வீட்டுக்குத் திரும்புகிறார். எண்ணெய் இல்லாததால் விளக்குகள் அணைந்து விட்டன. வீடு முழுவதும் இருண்டு கிடந்தது. தலைவரின் நோய் கொண்ட குழந்தையைத் தவிர அனைவரும் தூங்கி விட்டனர். தலைவர் கதவைத் தட்டுகிறார்.
     

    கதவைத் தட்டினார் கையின் விரலால்!
    பதியத் தட்டியும் பார்த்தார் பிறகு!
    அழுந்தத் தட்டினார் அங்கையாலே!
    அடித்தார் இடித்தார் படபடவென்றே!
    எட்டி உதைத்தார் இருநூறு தடவை!
    முதுகைத் திருப்பி முட்டியும் பார்த்தார்!

    (இருண்ட வீடு: 24)
     

    எதுவும் பயன் அளிக்கவில்லை. இவ்வாறாக மணி பன்னிரண்டு ஆனது. தலைவி தூங்கிக் கொண்டிருந்தாள். அந்த வேளையில், அவளின் சிறு விரல் ஒன்றை ஓர் எலி பிடுங்கி விட்டு, பெருவிரல் ஒன்றைப் பிடுங்கியது. அப்போதுதான் தலைவி விழித்தாள். தலைவர் கதவை உடைக்கும் சத்தம் அவளுக்கு எப்படிக் கேட்டது என்று பாரதிதாசன் கூறியுள்ளார் பாருங்கள்!
     

    காதில், வீதியில் தொலைவில்
    புழு ஒன்று சருகுமேல் புரள்வது போன்ற
    ஓசைதன்னை உற்றுக் கேட்டாள்

    (இருண்ட வீடு: 26)
     

    என்று அந்தப் பெருஞ்சத்தமும் அவளது காதுக்குச் சிறு சருகின் சலசலப்புப் போல் கேட்டதைத் தெரிவித்துள்ளார்.

    தலைவியுடன் ஏற்பட்ட சண்டையால் வீட்டைவிட்டு வெளியேறிய தலைவர் திரும்பி வந்திருப்பதைப் பற்றி அவள் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. மீண்டும் போய்ப் படுத்துக் கொண்டாள்.

    வீட்டில் வெளிச்சம் இல்லாததால் இருட்டாய் இருந்தது. தலைவர் விளக்கை ஏற்றினார். மகனைப் பார்த்துக் கேட்பது போல்,
     

    ஏனடா தம்பி சாப்பாடு
    உண்டா, இல்லையா, உரையடா!

    (இருண்ட வீடு: 26)
     

    என்று மனைவியிடம் கேட்டார்.

    தலைவி பதில் எதுவும் சொல்லவில்லை. தலைவர் தாமாகவே சமையல் அறைக்குள் சென்று பார்த்தார். சாப்பாடு இல்லை என்பதை அறிந்தார். பசி வயிற்றைக் கிள்ளியது. தலைவி எழுந்து வந்து ஏதாவது சாப்பிடுவதற்குத் தயார் செய்வாள் என்று எதிர்பார்த்து அவர் கூடத்தில் அமர்ந்து பாடினார். எதைப் பற்றியும் தெரியாதவள் போல் தலைவி படுத்திருந்தாள்.

    சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கை தலைவருக்கு இல்லை. வேறு வழியில்லாமல் படுக்கப் போனார். அவ்வாறு படுக்கப் போகும்போது,
     

    தலைவர் ஓர் உறுதி சாற்றலானார்:
    சாப்பிட மாட்டேன் சத்தியம் !

    (இருண்ட வீடு: 27)
     

    என்று சொல்லிவிட்டு அவர் போய்ப் படுத்துக் கொண்டார். இரவு மணி பன்னிரண்டு. வீட்டில் சாப்பாடு இல்லை. வெளியில் போயும் சாப்பிட இயலாது. தலைவி எழுந்து சமைத்துத் தருவாள் என்ற எண்ணமும் பொய்த்தபின் தலைவர் ‘சாப்பிட மாட்டேன்’ என்று சத்தியம் செய்ததாகப் பாரதிதாசன் கேலி செய்துள்ளமையை நாம் காண முடிகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:54:36(இந்திய நேரம்)