Primary tabs
-
6.12 தொகுப்புரை
தமிழர்கள் தாங்கள் இறைநினைப்புடன் கட்டிய ஆலயங்களில் எந்த அளவுக்குக் கட்டடக் கலை நுட்பங்களை இயைபுடன் கையாண்டுள்ளனர் என்பது ஆலயங்கள் பலவற்றை ஆய்வு நோக்கில் கண்டு சிந்திப்பதால் தெளிவாகும்.
கோபுரம் பற்றிய விளக்கமும், கோபுரத்தின் அங்கங்களும் தக்கவாறு கூறப்பட்டுள்ளன. கோபுர வாயில் வளர்நிலைகள் பற்றியும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.
சித்தாந்த நோக்கில் ஆலயம் குரு லிங்க சங்கம அமைப்பில் சீர்காழிக் கோயில் கட்டப்பட்டுள்ள இயைபுக் கற்பனையும் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தில் காற்றோட்டத்திற்கு மட்டுமல்லாமல் அழகுணர்வுக்காகவும் சாளரங்கள் அமைக்கப்பட்ட திறம் ஆராயப்பட்டுள்ளது. ஆலயங்களில் குறிப்பிட்ட நாள்களில் சூரிய வழிபாடும் சந்திர வழிபாடும் நடைபெறும் விதத்தில் அமைந்த கட்டடக் கலை நுட்பம் போற்றப்பட்டுள்ளது.
ஆலயங்களில் அமைந்துள்ள தேவ கோட்டங்கள், கொடிக்கம்பம், பலிபீடம், பிராகாரங்கள் கட்டடக் கலை முறைப்படி கட்டப்பட்டுள்ளது.
தமிழகம் கோயிற்பண்பாட்டினைக் கொண்டு விளங்குவதால், கோயிலில் சிறந்த அங்கங்களான அதிட்டானம், கருவறை ஆகியவற்றின் அடிப்படையில், கோயில் வகைகளை இப்பாடம் புலப்படுத்துகிறது ;
கலைஞர்கள் கற்பனையால் தம் கலைப் படைப்புகளில் தனித்தன்மை காட்டும் இயல்பினர் ; அந்த நோக்கில் அவர்களால் உருவாக்கப் பெற்ற இசைத் தூண்கள் பற்றிய செய்திகளும் சுமைதாங்காத அலங்காரத் தூண்கள் இடம் பெறுதல் பற்றிய குறிப்பும் விளக்கப்படுகின்றன.
ஆலயக் கட்டுமானத்திற்குக் கருவறை மிகச் சிறந்த உறுப்பாகும்; மனிதனுக்கு முகம் போன்று அடையாளம் காட்டும் இந்த உறுப்பு, சதுரம் நீண்ட சதுரம் வட்டம் ஆகிய வடிவங்களில் அமைக்கப்படுகிறது.
பிரநாளம் எனும் நீர்த்தூம்பைக் கருவறைக்கு இடப்பாகத்தில் அமைக்கும்போது, அதனையும் ஒரு கலைப்படைப்பாகச் செய்து காட்டியுள்ளனர்; ஆலயப் படிக்கட்டுகளின் அமைப்பிலும் எண்ணிக்கையிலும் கூடத் தத்தவச் சிந்தனைக்கு வழிகோலியுள்ளனர்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II8.வைணவர்களுக்குக் ‘கோயில்’ என்றால் எந்தத் தலத்தைக் குறிக்கும்? சைவர்களுக்குக் ‘கோயில்’ என்றால் எந்தத் தலத்தைக் குறிக்கும்?