Primary tabs
-
3.0 பாட முன்னுரை
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்தியக் கவிஞர்களில் ஒருவரான சுப்பிரமணிய பாரதியாரால் எழுதப்பட்ட காப்பியம் பாஞ்சாலி சபதம். மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ள இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில் உள்ள நிகழ்ச்சி ஒன்றினைக் காப்பியத்தின் மையப் பொருளாகப் பாரதியார் தெரிவு செய்து படைத்துள்ளார்.
பாரதியாருக்கு முன்னரே கம்பரும், (இரணியன் கதை) வில்லிபுத்தூராழ்வாரும் (நளாயினி கதை) இதுபோன்ற ஒரு கிளைக்கதையைத் தமிழாக்கியுள்ளனர். ஆனால், இவ்விருவருமே சமகாலக் கண்ணோட்டத்துடன் அணுகவில்லை என்றே குறிப்பிடலாம். பாரதியார் அந்தப் பழைய நிகழ்வினை, சமகால உணர்வின் அடிப்படையிலேயே படைத்திருக்கிறார்.
பாண்டவர்களின் பெருமையைக் கண்டு பொறாமை கொண்டான் துரியோதனன். தனக்குச் சேரவேண்டிய புகழ் தருமனுக்குச் செல்வதை நினைத்துக் கோபம் கொண்டான். பாஞ்சாலி, பலர் கூடியிருக்கும் அவையில் துரியோதனனைப் பார்த்துச் சிரித்ததும் கேலிசெய்ததும் மீண்டும் துரியோதனனைக் கோபமூட்டியது. தன் மாமன் சகுனியின் மூலமாகப் பாண்டவர்களை வஞ்சனையாகச் சூதாட்டத்தில் ஈடுபடுத்தி, நாட்டையும் பொருளையும் அபகரித்து, காட்டுக்கு அனுப்பி வாழுமாறு செய்து விடுகிறான் துரியோதனன். இந்நிலையில் பணயப் பொருளாகத் தன்னை வைத்து விளையாடிய பாண்டவர்களைப் பார்த்து எதிர்ப்புக் குரல் கொடுக்கிறாள் பாஞ்சாலி. அடிமையாக்கப் பட்ட பாஞ்சாலியைத் துகிலுரிதலிலும் கண்டனக் குரல் ஒலிக்கிறது. பின்னர் வீமன், அர்ச்சுனன், பாஞ்சாலி ஆகியோரின் சபதங்கள் பற்றி இந்நூலில் எடுத்துரைக்கப்படுகின்றது.