தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குறவஞ்சி இலக்கிய வகைமை வளர்ச்சி

  • 6.7 குறவஞ்சி இலக்கிய வகைமை வளர்ச்சி

        சிற்றிலக்கியங்களுள் நாடகத் தன்மை பெற்றவை பள்ளும், குறவஞ்சியும் ஆகும்.

        குறவஞ்சி     இலக்கியத்தின்     தோற்றமாகச் சங்க இலக்கியத்தைக் கொள்ளலாம். சங்க இலக்கியத்தில் அகவன் மகள் என்றும், கட்டுவிச்சியென்றும் அழைக்கப்பட்ட குறத்தி  குறி சொல்வதாய் அமையும் பாடல்களிலிருந்து குறவஞ்சி இலக்கியம் தோன்றியது.

    · தமிழ் இலக்கியங்களில் குறவஞ்சி பற்றிய குறிப்புகள்

        கட்டுவிச்சி குறி சொல்வதாகச் சிறிய திருமடல் குறிப்பிடுகிறது.

        திருக்கோவையார் முதலான பக்தி இலக்கியங்களில்  குறி கூறுதல் எனும் அமைப்பு இடம் பெறுகிறது.

        பத்துப் பாடல்களைக் கொண்ட சிறு இலக்கியமாகப்  பன்னிரு     பாட்டியல் குறவஞ்சி     இலக்கியத்தைக்  குறிப்பிடுகிறது.

    6.7.1 குறவஞ்சி இலக்கியத்தின் பொதுவான அமைப்பு

    (1)
    அரசனைக் கண்டு தலைவி காதல் கொள்ளுதல்.
    (2)
    காதல் மிகுந்து தென்றலையும் நிலவையும் பழித்தல்.
    (3)
    அந்நேரம் குறத்தி வரல்.
    (4)
    மலைவளம் பாடுதல்.
    (5)
    தலைவியின் கை பார்த்துக் குறி கூறுதல்.
    (6)
    விரும்பிய ஆடவனையே கணவனாக அடைவாய் எனக் கூறுதல்.
    (7)
    நல்வாக்குக் கேட்ட தலைவி குறத்திக்குப்
    பரிசளித்தல்.
    (8)
    குறத்தியைத் தேடி வரும் குறவன் அறியாமையால்
    அவளைச் சந்தேகப்பட்டுக் கேள்வி எழுப்புதல்.
    (9)
    குறத்தி விளக்கம் அளித்தல்

    ஆகியன குறவஞ்சி இலக்கியத்தின் பொதுவான கூறுகள் 

    6.7.2 குறவஞ்சி நூல்கள்

        குறவஞ்சி நூல்களில் சிறப்பாகப் போற்றப்படும் குறவஞ்சி, மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய திருக்குற்றாலக்  குறவஞ்சி எனும் நூலாகும். பலா மரங்கள் நிறைந்த குற்றால  வளத்தைக் குறிப்பிடும் பல பாடல்கள் உள்ளன. வசந்த வல்லி  பந்தாடும் அழகு சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.

    செங்கையில் வண்டு கலின் கலின் என்று செயஞ்செயம்
                 என்றாட இடை
    சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட
                    இரு
    கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து
                குழைந்தாட மலர்ப்
    பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே

    என்று பந்தடிக்கும் ஒலியிலேயே     திருக்குற்றாலக்  குறவஞ்சியில் திரிகூடராசப்பக் கவிராயர் பாடுகிறார்.

        திருக்குற்றாலக் குறவஞ்சிக்கு அடுத்ததாகப் பாராட்டப்  பெறும் குறவஞ்சி, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்  இயற்றிய சரபேந்திர பூபாலக் குறவஞ்சி ஆகும். தஞ்சையை  ஆண்ட சரபோஜி (1798-1832) மன்னரின் பெருமைகளை இக்  குறவஞ்சி நூல் அழகாக விளக்குகிறது.

    கவிகுஞ்சர பாரதி
    -
    அழகர் குறவஞ்சி
    இலிங்கப்ப ஐயர்
    -
    சுவாமி மலை முருகன்
    குறவஞ்சி
    வேதநாயக சாஸ்திரியார்
    -
    பெத்லகேம் குறவஞ்சி
    பீர்முகம்மது சாகிப்
    -

    ஞானரத்தினக் குறவஞ்சி

    ஆகியன குறிப்பிடத்தக்கன. இதுவரை 43 குறவஞ்சி நூல்கள்  கிடைத்துள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 22:27:52(இந்திய நேரம்)