தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மடல் இலக்கியம்

  • 6.8 மடல் இலக்கியம்

        மடல் என்பது அகத்திணையில் ஒரு துறையாக அமைகிறது.தமிழ் இலக்கியங்களில் ஆடவரே மடல் ஏறுவதாய்  அச்சுறுத்தும் மரபு உண்டு. கடல் அளவு காமம் இருந்தாலும் பெண்ணுக்கு மடல் ஏறும் உரிமையைத் தமிழ் கூறு நல்லுகம் தரவில்லை.

    6.8.1 மடல் இலக்கிய வளர்ச்சி

    மடல்மாக் கூறும் இடனுமா ருண்டே
             - (தொல்.பொருள்-99)

    ஏறிய மடற் றிறம்     - (தொல்.பொருள்-54)

    என்று மடல் குறித்துத் தொல்காப்பியர் சுட்டுகிறார். மடலேறுவோன் பனங்கருக்காற் செய்த குதிரையை ஊர்ந்து தெருவில் வருவான் என்றும், அக்குதிரையின் கழுத்தில் மணி பூட்டப்பட்டு இருக்கும் என்றும், அத்தலைவன் பூளை, எருக்கம், ஆவிரம் போன்ற பூக்களைச் சூடி மடல் ஏறுவான் என்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் விளக்குகின்றன.

        வழக்கமாகப் பெண்கள் மடல் ஏறுவதில்லை. தெய்வம் தலைவராய் வரும்போது இது நிகழும் என்று பன்னிரு பாட்டியல் விளக்குகிறது.

    மடன்மாப் பெண்டிர் ஏறார் ஏறுவர்
    கடவுளர் தலைவ ராய்வருங் காலே.
            - (பன்னிரு பாட்டியல்-147)

        பெண்கள் மடல் ஏறுவது இல்லை     எனும் தொல்காப்பியரின் கருத்து திருமங்கையாழ்வாரால் மறுக்கப்படுகிறது. அவருடைய சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய இரு நூல்களிலும் இறைவனை நாயகனாகவும், தன்னை அவனது அருள் கேட்கும் தலைவியாகவும் கொண்டு, தலைவியே மடல் ஏறத் துணிவதாகவும் பாடுகிறார்.

    சீரானைச் செங்கண் நெடியானைத் தேன்துழாய்த்
    தாரானைத் தாமரைபோல் கண்ணானை எண்ணருஞ்சீர் பேரா யிரமும் பிதற்றி
    ப் பெருந்தெருவே
    ஊரார் இகழினும் ஊராது ஒழியேன்நான்
    வாரார்பூம் பெண்ணை மடல்.
            - (நாலாயி. திவ்ய : 2708-2710)
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 22:27:56(இந்திய நேரம்)