41. நீராட்டரவம்
 

இதன்கண்: உஞ்சைநகர மாந்தரும் உதயணனும் பிறரும் திருநீர்ப்பொய்கையில் நீராடுதலால் உண்டான முழக்க வகைகள் கூறப்படும்.
 
              பரந்த விழவினுள் உவந்தவை காட்டி
            நகர மாந்தர் பகர்வனர் அறையும்
            பாடுஇமிழ் பனித்துறைக் கோடணை அரவமும்
 
              கிடைப்போழ்ப் பந்தத்து இடைப்புனைந்து இயற்றிய
        5   அவிர்நூல் பூங்கிழி யாப்பினோடு சார்த்திக்
            கட்டளை அமையச் சட்டகங் கோலிக்
            கண்டோர் இன்றியும் கைந்நவில் வித்தகர்
            கொண்டோர் மருளக் கோலம் குயிற்றி
            அம்புவாய் அணிந்த பெருந்தண் சக்கரம்
       10    சாந்தில் செய்த ஏந்திலை எறிவேல்
            போதில் புனைந்த பூம்பொறி வளையம்
            மலர் புறத்து அழுத்திய இலைஅணி ஈர்வாள்
            பிணையலில் பொலிந்த கணையக் கப்பணம்
            சுண்ணம் பொதிந்த வண்ண வட்டுஇணை
       15    உருக்குறு..........முள்வாய் சேர்த்தி
            அரக்குறு நறுநீர் அஞ்செங் குலிகம்
            குங்கும ஊறலோடு கொண்டகத்து அடக்கிய
            எந்திர நாழிகை என்றிவை பிறவும்
            ஏற்றிப் பண்ணிய இனக்களிறு நிரைஇ
       20   மாற்று மன்னர் ஆகுமின் எனத்தம்
            உரிமை மகளிரொடு செருமீக் கூறிக்
            கரைசென் மாக்கள் கலாஅங் காமுறூஉம்
            அரைச குமரர் ஆர்ப்பொலி அரவமும்
 
              வளைஆர் முன்கை வையெயிற்று இன்நகை
       25  இளையோர் குடைதலின் இரைகொளப் பெறாஅப்
            பைந்தாள் குருகின் மென்பறைத் தொழுதி
            தடவுச் சினைதொறுந்.....................
            மேற்பட மிடைந்த மேதகு குடம்பையுள்
            பார்ப்பொடு நரலும் பையுள் அரவமும்
 
         30   அறைவரைச் சாரல் சிறுகுடிச் சீறூர்க்
            குறவர் குறைத்த கொய்புன மருங்கின்
            அந்தண் அகிலுஞ் சந்தனக் குழையும்
            கருவிளங் கோடுங் காழிருள் வீடும்
            திருவிழை கழையுந் தேக்குந் திமிசும்
       35   பயம்புங் கோட்டமுங் கயம்பல கலங்க
            அமிழ்ந்துகீழ் ஆழ அருங்கலஞ் சுமந்து
            நுரைபுனல் நீத்தத்து நூக்குவனர் புக்குக்
            கரைமுதல் சார்த்துங் காளைகள் அரவமும்
 
 

            இடைநீர்ப் பட்ட மடமான் அம்பிணை
       40   மம்மர் நோக்கம் நோக்கி நையா
            நம்மில்  காலை என்னஎன்று எண்ணிப்
            புனல்சுழி நீத்தம் நீந்தி மற்றவை
            இனத்திடைப் புகுத்தும் இளையோர் அரவமும்

 
              தொடியணி தோளியர் துன்னி ஏறிய
       45   வடிவமை அம்பி அடியினுள் வானத்
            தாழல் தவிர்ந்து அரும்புனல் கவைஇயின
            தாழ்தரும் வலிமின் தய லீர்எனத்
            திரிதரல் ஓவாது தீயவை சொல்லிய
            மைத்துன மைந்தரை நோக்கி மடந்தையர்
       50   அச்சப் பணிமொழி யமிழ்தென மிழற்றி
            நச்சுவனர் ஆடும் நல்லோர் அரவமும்
 
              அணியறல் அன்ன ஐம்பால் கூழையர்
            மணியுமிழ்ந்து இமைக்கும் வயங்குகொடிப் பைம்பூண்
            முத்தொடு முரணித் தத்தும் ஆகத்துக்
       55   காமம் காலா வேம நோக்கத்து
            மாதர் ஆற்றா மழலையங் கிளவிப்
            பேதை மகளிர் சேதடி அணிந்த
            கண்பிணிப் பகுவாய்க் கிண்கிணி அரவமும்
 
              முகிழ்நிலா விரிந்த முத்துவடக் கழுத்தினர்
       60   திகழ்நிலா விரிந்த திருமதி முகத்தர்
            செண்ண மாகிய சிகழிகை முடியர்
            வண்ண மகடூஉ வல்லவா வகுத்த
            இரதப் பல்காழ்ப் பரவை யல்குலர்
            பொன்னிறக் கோங்கின் பொங்குமுகிழ்ப்பு என்ன
       65   முன்னர் ஈன்ற முலைமுதல் முற்றத்து
            மின்னுக்கொடி பிறழுங் கன்னிக் கோலமொடு
            ஒதுங்கல் ஆற்றா ஒளிமலர்ச் சேவடிப்
            பெதும்பை மகளிர் சிலம்பொலி அரவமும்
 
              கொடியணி பிறழும் கொம்மை வெம்முலைக்
       70   கடிகை வேய்நலம் கழிக்கும் மென்தோள்
            கொடியென நடுங்குங் கோல மருங்குலர்
            அம்பெனக் கிடந்த வைஅரி நெடுங்கண்
            மங்கை மகளிர் பைங்கா சரவமும்
 
              நீறக் கொண்மூ நெற்றி முள்கும்
       75   வானிற வளர்பிறை வண்ணங் கடுப்பச்
            சின்மெல் ஓதி சேர்ந்த சிறுநுதற்கு
            உலாஅய்க் கிடந்த கொடுநுண் புருவத்து
            உலாஅய்ப் பிறழும் ஒள்அரித் தடங்கண்
            வம்புமீக் கூரும் பொங்கிள முலையின்
       80   நுடங்குகொடி மருங்கின் நுணுகிய நுசுப்பின்
            மடந்தை மகளிர் குடைந்தாடு அரவமும்
 
              கலங்கவின் பெற்ற கண்ணார் களிகை
            நலங்கவின் கொண்ட நனிநா கரிகத்து
            அம்மென் சாயல் அரிவை மகளிர்
       85   செம்மல்அஞ் சிறுவரைச் செவிலியர் காப்பப்
            பூம்புனல் ஆடுதோறும் புலம்பும் புதல்வரைத்
            தேம்படு கிளவியில் தீவிய மிழற்றிப்
            பாலுறு வனமுலை பகுவாய்ச் சேர்த்தித்
            தோளுறத் தழீஇ ஓலுறுப்பு அரவமும்
 
         90   பொன்னரி மாலை புனல்பொதிந்து புசைதர
            மின்னொசிந் ததுபோல் பொன்னணி பிறழப்
            புனலகம் மூழ்கிப் பூந்துகில் களையார்
            மணலிகு நெடுந்துறை மங்கலம் பேணிப்
            பெரியோர் உரைத்த பெறலருந் தானம்
       95   உரியோர்த் தரீஇ உள்ளுவந்து ஈயும்
            தெரிவை மகளிர் வரிவளை அரவமும்
 
              தித்தி ஒழுகிய மெத்தென் அல்குலர்
            மட்டப் பூந்துகில் கட்டளைக் கச்சையர்
            நரையிடைப் படர்ந்த நறுமென் கூந்தலர்
      100    திரையுடைக் கலுழி திறவதின் ஆடித்
            தாமிள மகளிரைக் காமம் செப்பி
            அஞ்சல் செல்லாது நெஞ்சுவலித்து ஆடுமிந்
            நங்கையர் நோற்ற பொங்குபுனற் புண்ணியம்
            நுங்கட்கு ஆகென துனித்தவை கூறி
      105    நேரிழை மகளிரை நீராட்டு அயரும்
            பேரிளம் பெண்டிர் பெருங்கலி அரவமும்
 
              கைபுனை பாண்டியம் கட்டளை பூட்டி
            வையம் தரூஉம் வயவர் அரவமும்
            புகுவோர் அரவமும் போவோர் அரவமும்
      110    தொகுவோர் அரவமுந் தொடர்ந்துகை தழீஇ
            நடந்தியல் மறுகின் நகுவோர் அரவமும்
            மயங்கிய சனத்திடை மம்மர் நெஞ்சமொடு
            நயந்த காதல் நன்நுதல் மகளிரைத்
            தேருநர் அரவமுந் திகைக்குநர் அரவமும்
      115    பேருநர்ப் பெறாஅப் பெரியோர் அரவமும்
 
              நெடுந்துறை நீந்தி நீலைகொளல் அறியார்
            கடுங்கண் வேந்தன் காதலர் அரவமும்
            கொலைத்தொழில் யானை சென்றுழிச் செல்லாத்
            தலைக்கண் இரும்பிடி பிளிற்றிசை அரவமும்
      120    துறைமாண் பொராஅத் தூமணல் அடைகரை
            நிறைமாண் குருகின் நேர்கொடிப் பந்தர்ப்
            பாடலொடு இயைந்த பல்லோர் அரவமும்
            ஆடலொடு இயைந்த அணிநகை அரவமும்
            யாற்றொலி அரவமொடு இன்னவை பெருகிக்
      125    கூற்றொலி கேளாக் கொள்கைத்து ஆகி
 
              அரைப்பமை சாந்தமும் உரைப்பமை நானமும்
            ஒப்புமுறை அமைந்த ஓமா லிகையும்
            வித்தகர் வனைந்த சித்திரக் கோதையும்
            காதல் மங்கையர் ஆகத்து எறியும்
      130    சாதி லிங்கமுஞ் சந்தனத் தேய்வையும்
            உரைத்த வெண்ணெயும் நுரைப்பமல் அரைப்பும்
            பீடுடன் பேராப் பெருந்துறை எங்கும்
            ஆடவும் உண்ணவும் ஆதர மாகப்
            பேராக் காதலொடு பெருஞ்சிறப்பு இயற்றி
      135    நீராட்டு அரவம் நிகழுமால் இனிதென்.