55. சவரர் புளிஞர் வளைந்தது

இதன்கண்: அப் பாலைநிலத்தே வாழும் மாக்களாகிய சவரரும் புளிஞரும் அவ்விரவு கழிந்த பின்னர் வழியிலே இறந்து கிடக்கின்ற பத்திராபதியையும், அதன் பக்கத்தே மக்களியங்கிய சுவடுகளையும் கண்டு இவ்வழியே செல்வார் சிலருளர்   என்று கருதி அடிச்சுவடுபற்றி வந்து உதயணன் முதலியோரைக் காண்டலும், உதயணனோடு போர்செய்தலும், ஆற்றாது தோற்றுறப் பின்னரும், அவனை விட்டுச் செல்லவும் அணுகவும் மாட்டாராய் அவ்விலவஞ் சூழலைச் சூழ்ந்து வளைத்துக்கொண்டு நின்றதும் கூறப்படும்.
 
              புலர்ந்த காலைப் பூங்கழல் குருசில்
            மலர்ந்த பொய்கையுள் மணிநிறத் தெண்ணீர்க்
            கொழுமலர்த் தடக்கையில் கூட்டுபு கொண்டு
            குழவி ஞாயிற்று எழில்இகந்து எள்ளும்
        5   திருமுக மருங்கில் செருமீக் கூரி
            ஒள்இழை மகளிர் உள்ளம் கவற்றும்
            செந்தா மரைக்கண் கழீஇ மந்திரத்து
            அந்தி கூப்பித் தென்புலக்கு இறைஞ்சித்
 
              தமரின் பிரிந்ததன் தனிமையை நினைஇ
       10   அமரிய தோழி ஆகத்து அசைந்து
            சுடர்முகம் புல்லெனப் படரொடும் அயர்ந்து
            வேனில் வள்ளியின் மேனி வாடி
            உள்ளம் கனலும் ஒள்ளிழை மாதரைக்
            குற்ற நலத்துக் குறிப்புநனி காட்டி
       15   உற்ற வெந்நோய் ஓம்பென உற்ற
            காஞ்சன மாலையை ஆங்கனம் ஆருளி
 
              வருபடைக்கு அகன்ற வயந்தகன் வருவழிப்
            பொருபடை அண்ணல் பொழில்வயின் இருப்பக்
            கடுவிசைக் கனலி சுடுகதிர் மருங்கில்
       20   குடுமி நெற்றிக் கூர்உளி அன்ன
            வல்லாய் வயவன் வறண்மரத்து உச்சிப்
            பல்கால் குரைத்தது பகல்படை தருமெனப்
            பாட்டில் கூறக் கேட்டனன் ஆகி
 
              வெண்மதி நெடுங்குடை வேற்றவன் படையொடு
       25   நுண்மதி அமைச்சன் உள்மறைந்து ஒடுங்கி
            மராவும் மாவும் குராவும் கோங்கும்
            தண்ணிழல் பொதும்பர்க் கண்அழல் காட்டும்
            காழ்அமை கழைத்தொடர்க் கடும்பரிப் போர்வைத்
            தாழ்அமை பெரும்பொறித் தச்சுவினைப் பொலிந்த
       30   அரக்கூட்டு அம்புகர் மரக்கூட் டியானையைச்
            செறுவுபு நிறீஇய செய்கை ஓராது
            ஓறிபடை யாளரோடு உறுமுரண் செய்யக்
            காழ்த்த காலைக் கீழ்த்திசை முன்பகல்
 
              அன்றுஅவண் பாடிய அணிவரி வயவன்
       35   இன்றிவண் இன்னே இகல்படை தருதல்
            பொய்த்தல் இன்றி மெய்த்த தாம்என
            அங்குபடு புள்குரல் ஆண்தகை அஞ்சி
            வெங்கணை திருத்தி வில்இடந் தழீஇ
            இரும்புஇடை இட்ட பெரும்புடைக் கச்சையன்
       40   வளிசுழற்று அறறாஅ முளிமரக் கானத்து
            என்கொல் நிகழும் ஏதம் இன்றென
            நெஞ்சோடு உசாவும் சிந்தையன் ஆகி
            வெஞ்சின வீரன் நின்ற காலை
 
              மடப்பிடி வீழ்ந்த மணிமலைச் சாரல்
       45   அடக்கரும் சீறூர் அரண்அக உறையுளர்
            கணங்கொள் தலைவனைக் கைக்கொண்டு இயங்கா
            அணங்குஅரும் பெருஞ்சாத்து அவிய நூறிப்
            பல்விலைப் பண்டம் கவர்ந்துபயம் அறியார்
            சில்விலைக்கு இடூஉம் செல்லா வாழ்க்கையர்
       50   சுரஞ்செல் வம்பலர் அரும்பதம் மடக்கி
            மாண்உறி யாத்த வாணத் தானையர்
            அடுகணை மறவர் அகல்இலை ஓமை
            நெடுநிலைத் திரள்தாள் நேர்துணித்து அதர்வைக்
            கொடிபுரை கயிற்றொடு கொளுத்தினர் சமைப்ப
 
         55   வடியின் அன்ன வாள்அரித் தடம்கண்
            பைங்குழை மகளிர் பல்காழ்க் கலையோடு
            அங்குழைச் செயலைத் தண்தழை உடீஇக்
            காலின் இயங்குநர் கல்குழிக் கொளினும்
            நூலின் இயன்றவை நோக்கார் சாபமென்று
       60   ஆடூஉவும் மகடூஉவும் மாடும் அறியார்
 
              காடுதேர் முயற்சியர் கைப்பட் டோர்களைப்
            பாடல் பாணிப் பல்லிசை கேட்டும்
            ஆடுஎன வணங்கில் கருந்தலை துமித்தும்
            வீளை யோட்டின் வெருவ எய்துஅவர்
       65   ஊளைப் பூசலோடு ஆடல்கண்டு உவந்தும்
            காட்டுஉயிர் காணார் கைப்பயில் குறியொடு
            வேட்டன செய்யும் வேட்டுவினைக் கடுந்தொழில்
            கவர்கணை வாழ்க்கைச் சவரர் புளிஞர்
 
              காலை எழுந்து கணம்கொண்டு ஈண்டிச்
       70   சோலைப் போதகச் சுவடுஉறுத்து உழல்வோர்
            காஅட்டுப் பிடிமற்று அன்றிது கருதின்
            நாஅட்டுப் பிடியே நடந்தது தான்என
            முதிர்புலால் நாற்றமொடு முன்முன் வீசி
            உதிர வழியே அதிர ஓடிப்
       75   பிடியது வீழ்ச்சியும் பெண்பால் சுவடும்
            அடுதிறல் ஆடவர் அற்றமும் பிறவும்
            படியின் ஆய்ந்து கடுகுவனர் ஓடி
            வெள்ளிடை வெண்மணல் மிதித்த சுவடுதொறும்
            புள்அடி ஒழுக்கம் புரிவனர் நோக்கி
 
         80   நெருநல் நீடிருள் நீங்குநர் சுவடுஇவை
            அருமை உடைத்துஅவர்த் தலைப்படல் நமக்கென
            அடியுறின் அடையும் அம்புடை எயினர்
            கடிகை வெள்ளிலும் கள்ளி வற்றலும்
            வாடிய உவலொடு நீடுஅதர் பரப்பி
       85   உழைவயின் தரியாது முரைவயின் ஒடுங்கிய
            ஆறுஅலை இளையரை ஆண்மை எள்ளி
            வேறுஇனி நும்மொடு விளிகநும் களவுஎனச்
            சேறல் வலியாச் செய்கை நோக்கி
 
              வாய்ச்சிறு புதுப்புள் வீச்சுறு விழுக்குரல்
       90   கேட்டுப்பொருள் தெரியுமோர் வேட்டுவ முதுமகன்
            பெருமகன் னென்னப் பெறலரும் கலத்தோடு
            ஒருமகன் உளவழி எதிர்த்தும் அம்மகன்
            நடுங்குதுயர் உறுத்தும் கடுங்கண் ஆண்மையன்
            ஆண்மை அழிய நாண்மீக் கூரி
       95   மெய்ப்பொருள் துணர்ந்து கைப்படும் நமக்கெனக்
            காட்டக மருங்கின் அல்லது மற்றவர்
            நாட்டகம் புகுதல் நன்கிருள் கழியினும்
            இல்லை எழுகெனச் செல்வோர் முன்னர்ப்
 
              புரக்கூட்டு அமைந்த வரக்கூட்டு அரத்தம்
      100   பவளத் துணியில் பசுமையொடு கிடப்ப
            இன்அணிப் புக்கோர் இவ்வழி அல்லது
            மற்றவர் எங்கும் மறைந்திலர் காண்கெனச்
            செல்வோர் ஒருங்குடன் வல்லையும் வழியும்
            வான்மரப் பொதும்பும் கானமும் கடறும்
      105    முழைவளர் குன்றும் கழைவளர் கானமும்
            பயம்பும் பாழியும் இயங்குவனர் வதியும்
            முதுமரப் பொத்தும் புதுமலர்ப் பொய்கையும்
            இனையவை பிறவும் அனையவர் உள்வழிச்
            செருக்கயல் உண்கண் சீதையைத் தேர்வுழிக்
      110    குரக்கினத்து அதன்ன பரப்பினர் ஆகிப்
 
              பிடிமுதல் கொண்டுமலர் அடிமுதல் ஒற்றிச்
            செல்வோர் கதுமெனச் செம்மலைக் கண்டே
            கல்எனத் துவன்றிக் கார்கிளர்ந் ததுபோல்
            ஆர்ப்பும் வீளையும் அவ்வழிப் பரப்பிக்
      115    கார்க்கலைக் கோட்டொடு ஆர்ப்பொலி மயங்கி
            அரவச் செய்கையர் வெருவரத் தாக்கப்
 
              பல்பனி பரந்த சில்அரி மழைக்கண்
            நச்சுஉயிர்ப் பளைஇய அச்ச நோக்கமொடு
            விம்முவனள் நடுங்கும் பொம்மல் ஓதியை
      120    மாஞ்சினை இளந்தளிர் மணிநிற மேனிக்
            காஞ்சன மாலாய் காவல் போற்றுமதி
            அப்பால் புகுதரும் அற்றம் இன்மையின்
            இப்பால் வருவநர் இன்னுயிர் உண்கெனக்
 
              கைச்சிலை வளைத்துக் கணைநாண் கொளீஇ
      125    முற்றிய கோங்கின் முழுத்தாள் பொருந்தி
            ஒற்றுபு நோக்கும் ஒற்றை யாளன்
            வார்கணை செவியுற வாங்கி மற்றவர்
            ஆருயிர் வௌவஅதன் தாள்முதல் பொருந்தி
            உடும்புஎறிந் ததுபோல் கடுங்கணை முள்க
      130    விட்ட வேந்தன் வில்தொழில் கண்டும்
 
              கண்டுகை விடுதல் கருமம் அன்றென
            விண்டுஅலர் இலவத்து அண்டைசார்ந்து அவனைக்
            கண்ட வேட்டுவர் தண்டாது நெருக்கி
            மையணி இரும்பிடி வீழ மற்றுநீ
      135    உய்வல்என் றெண்ணி ஒளித்தனை போந்தனை
            எவ்வழிப் போதிநின் இன்னுயிர் உண்குவம்
            யாரை நீஎமக்கு அறியக் கூறென
            வீர வெம்மொழி நீரல பயிற்றி
 
              உடுஅமை பகழ் ஒருங்குடன் தூவ
      140    விடுகணை விடலை வில்லின் விலக்கி
            வதிபயின்று அடைந்த மறவரை அதிரக்
            கைவயின் கடுங்கணை ஒவ்வொன்று கொண்டவர்
            மெய்வயின் கழிந்து வியன்நிலத்து இங்க
            வீரருள் வீரன் விசைபெற விடுதலின்
      145    வீர வேட்டுவர் சார்தல் ஆற்றார்
 
              கோல உருவொடு குன்றிடைப் போந்தஓர்
            காலன் கொல்இவன் கானத் தோர்க்கெனப்
            பன்முகத் தானும் பற்றடைந்து தன்னவன்
            வின்முகம் புகாஅர் வேட்டுவர் அஞ்சிப்
      150    புண்கூற் றாளனைள் உள்கூற் றாகி
            அழித்தனை கொணர்ந்துஎனப் பழித்தனர் கழறி
            உளைப்பொலி மான்தேர் உதயண குமரனை
            வளைத்துநின் றனரால் வலிப்பது தெரிந்தஎன்.