Primary tabs
1.3 சைவ இலக்கியம்
ஒன்பதாம் திருமுறையில் பூந்துருத்தி காட நம்பி, புருடோத்தும நம்பி, சேதிராயர், கருவூர்த் தேவர் ஆகிய நால்வர் பாடிய திருவிசைப்பாப் பதிகங்களும், பதினோராம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பி என்பவர் பாடிய பத்துப் பிரபந்த நூல்களும் பதினோராம் நூற்றாண்டில் தோன்றிய சைவ இலக்கியங்கள் ஆகும்.
பன்னிரு திருமுறையில் ஒன்றான ஒன்பதாம் திருமுறையைப் பாடியவர்கள் மொத்தம் ஒன்பதின்மர். இவர்களில் பூந்துருத்தி காட நம்பி, புருடோத்தும நம்பி, சேதிராயர், கருவூர்த்தேவர் ஆகிய நால்வரும் இந்நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். (ஏனைய ஐவரும் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பற்றிச் சென்ற பாடத்தில் பார்த்தோம்.) இவர்கள் நால்வரைப் பற்றியும், இவர்கள் ஒன்பதாம் திருமுறையில் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் பற்றியும் சிறிது காண்போம்.
- பூந்துருத்தி காட நம்பி
திருவையாற்றுக்கு அருகிலுள்ள திருப்பூந்துருத்தியில் பிறந்தவர். இவர் திருவிசைப்பா பாடிய ஆசிரியர்களில் நான்காமவர். அந்நூலில் 18, 19 ஆகிய இரண்டு பதிகங்களை இவர் பாடியுள்ளார். இவருடைய சிறப்பு, தேவாரங்களில் காணப்படாத சாளரபாணி என்ற பண்ணைக் குறிப்பிடுவதாகும். திருவிசைப்பா இரண்டாம் பதிகத்தில் நடராசப் பெருமானுடைய திருக்கூத்தையே இவர் போற்றுகிறார். (பத்துப் பாடல்களைக் கொண்ட பனுவல் ‘பதிகம்’ ஆகும்.) முதல் பராந்தக சோழன் (கி.பி. 907 - 955) தில்லையைப் பொன் வேய்ந்த வரலாற்றையும் இவர் கூறுகிறார். சேரமானும், ஆரூரனும் ‘களையா உடலோடு’ (மனித உடம்போடு) கைலாயம் சென்றதையும் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.
- புருடோத்தம நம்பி
திருவிசைப்பா பாடிய ஆசிரியர்களில் எட்டாமவர். நம்பி என்பது ஒரு சிறப்புப் பெயராகும். சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் வழங்கப்படும் பெயரே அது. திருவிசைப்பாவில் இரு பதிகங்களை (26, 27) இவர் பாடியுள்ளார். இரண்டுமே தில்லையைக் குறிப்பன. முப்புரம், மார்க்கண்டேயன், யமன், இராவணன் போன்ற வரலாறுகள் இதில் உள்ளன. ‘வாரணி நறுமலர்’ எனத் தொடங்கும் பதிகம் திருச்சிற்றம்பலமேய செல்வனைக் காதலித்த மகளிர் அப்பெருமானை நோக்கி அகம் நெகிழ்ந்து உரையாடுவதாக உள்ளது. தன்னைத் தன்மையிலும், ஆடுகின்ற செல்வனை முன்னிலையிலும் வைத்துப் பாடும் தலைவி, உணர்ச்சி வேகத்தினாலே தன்னை மறந்து படர்க்கையில் வைத்துப் பாடும் பாடல் சிறப்பானதாகும்.
- சேதிராயர்
பாடல்கள் திருவிசைப்பாவில் கடைசியாக (28ஆவது பதிகம்) உள்ளன. இவர் பாடியது தில்லைக்குரிய பதிகம் மட்டுமேயாகும்.
- கருவூர்த்தேவர்
திருவிசைப்பாவில் பத்துப் பதிகங்கள் (8 முதல் 17 வரை) பாடியுள்ளார். கொங்கு நாட்டுச் சிவத்தலமான கருவூரில் பிறந்தவர். பத்துத் தலங்களுக்கு இவர் பதிகங்கள் பாடியுள்ளார். தலப்பெயரையும், கோயில் பெயரையும் இணைத்துப் பாடியுள்ளார். இராசராசனும் (கி.பி. 985 - 1014) முதலாம் இராசேந்திரனும்(கி.பி. 1012 - 1044) கட்டிய கோயில்களை நேரில் கண்டு மகிழ்ந்தவர்.
தலப்பெயரையும், கோயில் பெயரையும் இணைத்துப் பாடியுள்ளனவற்றில் உதாரணத்திற்குச் சிலவற்றைக் காண்போம்:
‘பெரும்பற்றப்புலியூர்த் திருச்சிற்றம்பலம்’
‘களந்தை ஆதித்தேச்சரம்’
‘கீழ்க்கோட்டூர் மணியம்பலம்’
‘தஞ்சை இராசராசேச்சரம்’உலகச் சூழலிலிருந்து தம்மை விடுவித்து, தனித்த ஆன்ம வாழ்க்கை வாழ்ந்தவர். இவர் மக்களோடு கலந்து வாழ்ந்தவர் அல்லர். இதனால் இவரிடம் புதிய சொல்லாட்சி காணப்பட்டது. உதாரணத்திற்குச் சிலவற்றைக் காண்போம்:
அக்கடாவியப்பைக் குறிப்பதுகெந்துதல்விளையாடுதல்
தமிழ்ச் சித்தர்கள் பதினெண்மர். கருவூரார் என்பவர் அவர்களுள் ஒருவர். அவரும் திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவரும் வெவ்வேறானவர்கள்.
1.3.2 நம்பியாண்டார் நம்பி பாடிய நூல்கள்
தமிழ் வியாசர் எனக் கூறிப் போற்றப்படும் பெருமை வாய்ந்தவர். பலவாறு சிதைந்து கிடந்த வேதங்களைத் திரட்டி வியாசர் ஒழுங்குபடுத்தித் தொகுத்தார். நம்பியாண்டார் நம்பி, இராசராசன் விரும்பியவாறு திருமுறைகளை அவை இருக்குமிடங்களைத் தேடி ஒழுங்குபடுத்தினார். இச்செயல் திருமுறை கண்ட புராணம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுறைகளைத் தொகுத்ததோடு மட்டுமன்றி, நம்பியாண்டார் நம்பி 10 பிரபந்த நூல்களைப் பாடியுள்ளார். (அவையனைத்தும் 11 ஆம் திருமுறையில் அடங்கும்). அந்நூல்கள் வருமாறு:
1.திருநாரையூர் இரட்டை
மணிமாலைதிருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் மீது பாடியது.2.கோயில் திருப்பண்ணியர்
விருத்தம்தில்லைச் சிவபெருமான் மீது பாடியது.3.திருநாவுக்கரசு தேவர்
திருஏகாதச மாலைஅப்பர் மீது பாடியது.4.ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி5.திருநாவுக்கரசு தேவர்
திருஏகாதச மாலை6.திருச்சண்பை விருத்தம்ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி7.திருமும்மணிக்கோவை8.திருக்கலம்பகம்9.திருத்தொகை10.திருத்தொண்டர் திருவந்தாதிசைவ அடியார்களைப் போற்றிப் பாடியதுஅடியார்களைப் போற்றிச் சுந்தரமூர்த்தி நாயனார், திருத்தொண்டத் தொகை பாடினார். அந்த நூலையே விரித்து, நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி இயற்றினார். இந்த இரண்டு நூல்களும் சேக்கிழாரின் பெரியபுராணத்துக்கு அடிப்படையாக அமைந்தன.