தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிரபந்த இலக்கியமும் பிற நூல்களும்

  • 1.5 பிரபந்த இலக்கியம் - பிறநூல்கள்

    ‘பிரபந்தம்’ என்ற சொல் மிகவும் பிற்காலத்தில் வந்தது. ஆனால் பிரபந்தங்கள் என்னும் நூல்வகை பழமையான காலம் முதல் இருந்து வந்துள்ளது. காப்பியத் தன்மை இல்லாது பாடப்பெற்ற சிற்றிலக்கியம் பிரபந்தம் ஆயிற்று. இக்காலப் பகுதியில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி செய்த நூல்கள் அனைத்துமே பிரபந்தங்கள் ஆகும். அவை பற்றிச் சைவ இலக்கியம் என்ற பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அன்று தோன்றி இன்று இல்லாமல் போன சில பரணிப் பிரபந்தங்கள் உள்ளன. (96 வகைப் பிரபந்தங்களில் பரணி, உலா, கோவை, தூது முதலியவை அடங்கும்).

    பரணி என்ற நிலையில் கொப்பத்துப் பரணியும், கூடல சங்கமத்துப் பரணியும், பிரபந்தம் அல்லாத பிற நூல்கள் என்ற நிலையில் கனா நூல், ஓவிய நூல், திருவள்ளுவ மாலை போன்ற நூல்களும் அடங்கும்.

    1.5.1 பிரபந்த இலக்கியம்

    ஏழாம் நூற்றாண்டில் நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் மீது பாடப்பெற்ற பாண்டிக்கோவையே தனியான முதல் பிரபந்தம் ஆகும்.

    • கொப்பத்துப்பரணி

    இப்போது கிடைக்கின்ற பரணி நூல்களுள் தொன்மையானது கொப்பத்துப் பரணி. பரணி நூல்களுள் மிகப் புகழ் வாய்ந்தது முதல் குலோத்துங்கன் மீது பாடப் பெற்ற கலிங்கத்துப் பரணியாகும். அதற்கும் முந்தையது கொப்பத்துப் பரணி. இரண்டாம் இராசேந்திர சோழன் (கி.பி. 1051 - 63), மேலைச் சாளுக்கிய மன்னனான ஆகவமல்லனுடன் கொப்பம் என்ற இடத்தில் போரிட்டு வென்றான். இப்போர் பற்றிக் கீழ்க்கண்ட நூல்களில் காணப்படுகின்றன.

    கலிங்கத்துப் பரணி (194)
    விக்கிரம சோழனுலா (19 - 20)
    வீர சோழியம் (உரை மேற்கோள், பன்னிரு ஆசிரியர் சந்த விருத்தம்)

    இவ்வாறு போர் வென்ற இராசேந்திரன் மீது ஒரு பரணிப் பிரபந்தம் பாடப்பெற்ற செய்தி இராசராசன் உலாவிலும் உள்ளதாக மு. அருணாசலம் கூறுகிறார்.

    • கூடல சங்கமத்துப் பரணி

    வீரராசேந்திர சோழன் (கி.பி. 1063 - 70) கூடல சங்கமத்துப் போரில் ஆகவ மல்லனை வென்று பாடியதைக் குறிக்கின்றது, இந்நூல். இச்செய்தியை விக்கிரம சோழனுலா மூலமாக அறிய முடிகின்றது. இராசராசன் உலாவிலும் இப்பரணி பற்றிக் கூறப்பட்டுள்ளது. இவ் வீரராசேந்திர சோழன் ஆதரவில் இயற்றப்பெற்ற வீரசோழியம் நூலின் உரையாசிரியர், இப்போரைப் பாடும் இரு வெண்பாக்களை அதன் உரையில் சுட்டியுள்ளார்.

    1.5.2 பிற நூல்கள் - தொகுப்பு

    மேற்கண்ட தலைப்புகளில் அடங்காத நூல்கள் பற்றி இப்பகுதியில் விளக்கப்படுகின்றது. அடியார்க்கு நல்லார் உரையில் கனா நூல், ஓவிய நூல் ஆகிய இரு நூல்களைப் பற்றி அறிய முடிகின்றது.

    • கனா நூல்

    கனா நூல், 30 பாடல்களைக் கொண்டது. இந்நூலிலிருந்து நான்கு பாடல்களை (2, 4, 10, 15) அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் (அடைக்கலக் காதை வரிகள் 95 - 106) கனா நூல் எனக் குறிப்பிட்டு மேற்கோளாகத் தந்துள்ளார். அடியார்க்கு நல்லாரின் காலம் 12ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியாகும். இந்நூலின் காலம் இதற்கு முன் நூறு ஆண்டுகள் எனக் கொண்டாலும், இது 11 ஆம் நூற்றாண்டிற்கு உரியதாகிறது. இந்நூலானது (பொது வழக்கில் ‘ஜாமம்’ எனப்படும். பகலில் 4, இரவில் 4 என ஒரு நாளைக்கு 8 ஜாமங்கள்) கனவு இன்ன யாமத்தில் கண்டால் இன்ன காலத்துக்குள் பலன், இன்ன கனவுக்கு இன்ன பலன் என்று கூறுகிறது.

    ஓவிய நூல் பற்றி அடியார்க்கு நல்லார் உரை மூலமே தெரிய வருகிறது. சிலப்பதிகார உரையுள் அவர் கூறுவதைக் கேளுங்கள் ஓவிய நூலுள் நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குதல் என்னும் விகற்பங்கள் (வேறுபாடுகள்) பல உள்ளன.

    • திருவள்ளுவ மாலை

    திருவள்ளுவ மாலை (கி.பி. 1050), 53 வெண்பாக்களும், ஒரு குறள் வெண்பாவும் கொண்ட ஒரு பாடல் தொகுப்பு. திருக்குறளின் பெருமையையும், திருவள்ளுவரின் சிறப்பையும் இது எடுத்துரைக்கிறது. முந்தையோரின் கருத்துகளையும், சொற்களையும் தழுவி அமைத்துப் பாடிய பாடல்கள் இவற்றுள் உள்ளன.

    உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துஉள்ள
    தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால் - வள்ளுவனார்
    வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும் எனக்
    கொள்ளத் தகுங் குணத்தைக் கொண்டு...

    (குலபதி நாயனார், பாடல் எண்: 48)

    பொருள் :

    நெஞ்சமாகிய தாமரையை மலரச் செய்வதாலும் (மக்களது) அகத்திலுள்ள பிறிதொன்றால் நீக்கப்படாத அஞ்ஞான இருளை நீக்குவதாலும் திருவள்ளுவரது குறள் வெண்பாவும் சூரியனும் குணத்தில் ஒப்பு எனக் கொள்ளலாம். இதைப்போல அமைந்த மற்றொரு பாடலைக் காணலாம்.

    நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
    தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்து உரைத்த - நூல்முறையை
    வந்திக்க சென்னி வாய் வாழ்த்துக நல் நெஞ்சம்
    சிந்திக்க கேட்க செவி

    (திருவள்ளுவ மாலை - உக்கிரப்பெருவழுதியார் பாடல்.)

    இதன் பின் இரு வரிகள் அப்பருடைய திருவங்கமாலைப் பதிகத்திலிருந்து எடுத்தவை என்பது நன்கு தெரிகிறது.

    பொருள் :

    பிரமன், திருவள்ளுவனாய் வந்து நான்மறையின் மெய்ப்பொருளை அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாற் பொருளாகத் திருவாய் மலர்ந்த நூலினை வாய் வாழ்த்தட்டும்; நல்ல மனம் நினைக்கட்டும்; காதுகள் கேட்கட்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-08-2017 18:43:16(இந்திய நேரம்)