Primary tabs
6.3 சித்தர் பாடல்கள்
இலக்கியத்திற்கு, சித்தர்களின் பங்களிப்பு மிகுதி. பல்வேறு காலக்கட்டங்களில் சித்தர்கள் தோன்றியுள்ளனர். அவர்கள் சாகாக்கலை கற்றவர்கள். உடலைத் தாம் விரும்பும் காலம் வரையில் அழியா நிலையில் வைத்திருந்தனர். அண்டவெளியில் சஞ்சரித்தனர். உலகின் எந்த மூலையில் என்ன நடந்த போதிலும் தாம் இருந்த இடத்திலிருந்தே அறியவும், செயல்படவும் ஆற்றல் பெற்றிருந்தனர். அத்தகு ஆற்றலை மனித குலம் முழுவதுமே அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பாடல்களைப் பாடினர். சித்தர்கள் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்தவர்கள்.
காலத்திற்கு உட்பட்டவர்கள் பக்தர்கள். காலத்தை வென்றவர்கள் சித்தர்கள். வேளை வரும் போது இறப்பவர்கள் பக்தர்கள். விரும்பும் வரை மரணத்தைத் தள்ளிப் போடுபவர்கள் சித்தர்கள். இவர்கள் சடங்குகளையும், சடங்குகளோடு ஒட்டிய வழிபாடுகளையும் போற்றவில்லை.
இவர்களின் பாடல்களில் நாட்டுப்புறப்பாடல்களிலுள்ள செய்யுள் வடிவம் காணப்படுகிறது. எளிய பேச்சு வழக்குச் சொற்கள் சில பாடல்களில் காணப்படுகின்றன. மருந்து பற்றிய பாடல்களில் வெவ்வேறு பெயர் காணப்படுவதும் உண்டு. இதுபோன்ற பாடல்களைப் படித்து நேரே பயன்பெற முடியாது. மரபு வழியில் கற்றவர்கள் மூலமே உணர முடியும். சித்தர்கள் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் தமிழில் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றன. அவற்றின் தொகுப்பு சித்தர் ஞானக்கோவை எனவும், பதினெண் சித்தர் ஞானக்கோவை எனவும் தனி இலக்கியமாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சித்தர்களின் பாடல்கள் பரவிய அளவிற்குச் சித்தர்கள் பற்றிய வரலாறுகள் பரவவில்லை.
6.3.1 பொதுக் கூறுகள்
சித்தர் பாடல்கள் பொதுவாகத் தெளிந்த நடையைக் கொண்டவை. தெருப் பிச்சைக்காரர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும், பெரும் பணக்காரரின் ஆன்ம விழிப்பிற்கும் உரமளிப்பவை இப்பாடல்கள். குழந்தைகளும் பாடி மகிழத்தக்க எளிமையும், பெரியவர்கள் சிந்தித்துப் பயிலத்தக்க பொருட்திண்மையும் உடையவை. மனத்தைப் பேயாகக் கருதிப் பாடிய சித்தர்கள் உண்டு. கடவுளைப் பற்றியும், ஞானநெறி பற்றியும் பாடிய சித்தர்களும் உண்டு.
பாமர மக்களும் அறிந்த சித்தர் பாடல்கள் பல உண்டு. ஆனால் அனுபவ வழியே அவற்றின் பொருளை உணரமுடியும். உதாரணத்திற்குக் கீழ்க்காணும் பாடலைப் பாருங்கள்:
நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி(சித்தர் பாடல்கள் - கடுவெளிச் சித்தர், பாடல் எண்:4)
‘பத்து மாதங்களாகத் தவம் செய்து இந்த உடலைப் பெற்று வந்தாயே? மனிதா! கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைப்பதற்குத் தானா? ஏன் சிந்திக்க மாட்டேன் என்கிறாய்? இந்த உடல் உள்ளபோதே ஆன்மா கடைத்தேற வழி காண வேண்டாமா?’ எனச் சொல்லாமல் சொல்லி நெஞ்சில் இடித்துக் காட்டுகிறார் இச்சித்தர். உடல் என்ற தோண்டியை மனிதன் போட்டு உடைக்கிறான் என்பதன் மூலம் மனிதனின் ஜீவ ரகசியத்தை வெளிப்படுத்துகிறார். இவ்வாறாகப் பெரும்பாலான பாடல்கள் மறை பொருள் கொண்டு அமைந்துள்ளமை சித்தர் பாடல்களின் பொதுக் கூறுகளில் ஒன்றாகும்.
6.3.2 குறிப்பிடத்தக்க சித்தர்கள்
இக்காலத்தில் தோன்றிய சித்தர்களாக அகப்பேய்ச்சித்தர், அழுகுணிச்சித்தர், இடைக்காட்டுச்சித்தர், கடுவெளிச்சித்தர், ஏனாதிச்சித்தர், காளைச்சித்தர், பாம்பாட்டிச்சித்தர் போன்ற பலரைக் குறிப்பிடலாம். ஏனாதிச்சித்தர், காளைச்சித்தர் ஆகியோரின் பாடல்கள் அச்சாகவில்லை.
- இடைக்காட்டுச்சித்தர்
இவர் பாடிய பாடல்கள் 130 ஆகும். இவை வெவ்வேறு சந்தங்களில் உள்ளன. இவரது பாடல்களில் ஆயரோடு தொடர்புடைய பல சொற்கள் உள்ளன. இவரது பாட்டோடு ஆட்டமும் கலந்துள்ளது. இவரது பாடல்களில் பலரொடு கிளத்தல், நெஞ்சோடு கிளத்தல், அறிவோடு கிளத்தல் போன்ற பகுதிகளும் உண்டு.
நாட்டுப்புறங்களில் திருவிழாக் காலங்களில் இன்றும் பாடப்படும் ஒரு பாடலைக் கேளுங்கள். இப்பாடல்களைப் பாடிக் கொண்டு ஒயிலாட்டம் முதலிய கூத்துக்களை ஆடுபவர்களை இன்றும் காண முடிகிறது.
தாம் திமி திமி தாந்தக் கோனாரே
தீம் திமி திமி தீந்தக் கோனாரே
ஆனந்தக் கோனாரே - அருள்
ஆனந்தக் கோனாரே(இடைக்காட்டுச் சித்தர் பாடல் எண் : 24)
சித்தர் நெறியையும், சமய உணர்வையும் ஆழப்பதிக்கும் பாடல் இதுவாகும். இடைக்காட்டுச் சித்தர் ஆனந்தக் கோனாரையும், ஆட்டையும், பசு மாட்டையும், அன்னத்தையும், புல்லாங்குழலையும், அறிவையும், நெஞ்சையும், மயிலையும், குயிலையும் தம் முன் நிறுத்தி, பல உலகியல்புகளையும் உண்மைகளையும் உணர்த்தியிருக்கிறார். ஜீவன் என்னும் பசுவிலிருந்து ஞானப்பால் கறக்கும்படி தூண்டியிருக்கிறார்.
- குதம்பைச்சித்தர்
குதம்பை (காதணி) அணிந்த பெண்ணை விளித்துப் பாடியமையால் குதம்பைச்சித்தர் என்னும் பெயர் பெற்றார். இவரது பாடலிலும் எளிய சொற்கள் உள்ளன. உண்மையறிவு பெற்று இறைவனை நாடும் மெய்ஞ்ஞானிக்கு உலகப் பொருள்களும், சடங்குகளும் தேவையில்லை என்பது இவரது கருத்து. இவருடைய பல பாடல்கள் யோக நெறி, பக்தி நெறி, புறப்பூசை போன்றவற்றைப் பழிக்கும் வகையில் அமைந்துள்ளன. சித்த நெறியினர் காயகற்பம் (உடலினை உறுதியாக்கி, முதுமை வாராமல் தடுக்கும் சித்தவைத்திய மருந்து) தேடி அலைய வேண்டியதில்லை என்று கூறும் இவரது பாடலைக் கேளுங்கள்.
மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ்ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி -குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி(குதம்பைச் சித்தர், பாடல் எண் : 2)
(கற்பம் = காயகற்பம்)
இவர் பாடிய பாடல்கள் 246 ஆகும்.
- பாம்பாட்டிச்சித்தர்
இவர், பாண்டி நாட்டைச் சேர்ந்தவர். சட்டைமுனியின் சீடர். இவர் பாடிய ‘ஆடு பாம்பே..’ எனத் தொடங்கும் பாடல் தமிழ்நாடு முழுவதும் எங்கும் பாடப்பெறுகிறது. இவர் பாடல்களைப் பின்பற்றிப் பலருடைய புதிய பாடல்களில் நடனக் கோலங்களைக் காணமுடிகிறது. சித்தர் பாடல்களில் இவரது பெயரில் 129 பாடல்கள் உள்ளன. இவையனத்தும் புன்னாகவராளி ராகத்தில் அமைந்தவை.
நாதர் முடிமேலிருக்கும் நாகப்பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே(பாம்பாட்டிச்சித்தர் பாடல் எண் : 20)
இப்பாடலில் பாம்பினது சிறப்பு கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான பாடல்களில் இவர் பாம்பு என்று கூறுவது பாம்பு உருவாக மண்டலமிட்டுக் கிடக்கும் குண்டலினி சக்தியையே ஆகும். அதையெழுப்பல் யோகிகளுக்கு இன்றியமையாதது. ஆகவே அதனை அவர் எழுப்பும் முயற்சியில் இறங்கினார்.
மேற்கண்ட பாடல் அடிகளுடன் கீழ்க்காணும் வரிகளைப் பல்லவியாகக் கொண்ட சில பாடல்களும் அமையும்.
ஆடுபாம்பே - தெளிந்தாடு பாம்பே - சிவன் அடியினைக் கண்டோமென்று ஆடுபாம்பே(பாம்பாட்டிச்சித்தர் பாடல் எண் : 1)
தன் மதிப்பீடு : வினாக்கள் - I