Primary tabs
3.0 பாட முன்னுரை
நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலின் தொடக்கத்தில் புணர்ச்சி என்றால் என்ன என்பது பற்றியும், புணர்ச்சியின் பாகுபாடு பற்றியும், பொதுப்புணர்ச்சி பற்றியும் கூறியனவற்றைக் கடந்த இரு பாடங்களில் பார்த்தோம். அவற்றைத் தொடர்ந்து அவர் உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி பற்றி விரிவாகக் கூறுகிறார்.
உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி என்றால் என்ன? நிலைமொழியின் இறுதியில் வரும் உயிர் ஈறு, மெய் ஈறு, குற்றியலுகர ஈறு என்னும் இருபத்து நான்கு ஈறுகளுக்கும் பொதுவாகக் கூறப்படும் புணர்ச்சி பொதுப்புணர்ச்சி என்று கூறப்பட்டதைக் கடந்த பாடத்தில் பார்த்தோம். அதேபோல் நிலைமொழியின் இறுதியில் வரும் உயிர் ஈறுகள் எல்லாவற்றிற்கும், குற்றியலுகர ஈற்றிற்கும் சிறப்பாகக் கூறப்படும் புணர்ச்சி உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி எனப்படும்.
நன்னூலார் உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி பற்றி ஐந்து நூற்பாக்களில் (நன்னூல், 162-166) விளக்கிக் கூறுகிறார். அவற்றைத் தக்க சான்றுகளுடன் காண்போம்.