Primary tabs
2.0 பாட முன்னுரை
சென்ற பாடத்தில் ணகர, னகர ஈற்றுப் புணர்ச்சி பற்றி நன்னூலார் கூறியனவற்றைப் பார்த்தோம். இப்பாடத்தில் மகர ஈற்றுப் புணர்ச்சி பற்றியும், யகர, ரகர, ழகர ஈற்றுப் புணர்ச்சி பற்றியும் அவர் மெய் ஈற்றுப் புணரியலில் கூறுவனவற்றைப் பார்ப்போம்.
மகர மெய்யை இறுதியாகக் கொண்ட சொற்கள், வருமொழி முதலில் வரும் உயிரோடும், வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் மூவினமெய்களோடும் புணரும் முறையைப் பொதுவிதியும், சிறப்பு விதியும் கொண்டு விளக்கிக் காட்டுகிறார். மேலும் நும், தம், எம், நம் என்னும் மகர ஈற்று மூவிடப்பெயர்கள், அகம் என்ற உள்ளிடப்பெயர் ஆகியன வருமொழிகளோடு புணரும் முறையைச் சிறப்பு விதிகள் தந்து விளக்குகிறார்.
யகர, ரகர, ழகர மெய்களை இறுதியாகக் கொண்ட சொற்கள் வருமொழி முதலில் வரும் வல்லின மெய்களோடு புணரும் முறையைப் பொது விதி கொண்டு விளக்கிக் காட்டுகிறார். மேலும், தமிழ், தாழ், கீழ் என்னும் ழகர ஈற்றுச் சொற்கள் வருமொழிகளோடு புணரும் முறையைச் சிறப்பு விதிகள் கொண்டு விளக்கிக் காட்டுகிறார். இவற்றை எல்லாம் இப்பாடத்தில் ஒன்றன்பின் ஒன்றாகக் காண்போம்.