Primary tabs
-
புலால் மறுப்பு
இன்றுள்ள தமிழர் பண்பாட்டில் என்னவெல்லாம் வந்து சேர்ந்திருக்கின்றன? தொடக்க காலத்தில் தமிழர் பண்பாட்டில் புலால் உண்ணுதல் பெருமளவு இருந்தது. ஆடு, கோழி ஆகியவற்றைக் கடவுளுக்குப் படையல் என்ற பெயரில் அறுத்தனர். கொழுத்த பசுவை அடித்து உண்டனர். இந்த நிலையில் மாற்றம் வந்தது. சைவம் என்ற ஒரு நெறி பலர் வாழ்வில் இடம் பெற்றது. புலால் உண்பவர்கள் கூட மாதத்தில் சில நாள் சைவமாக விளங்கக் காணலாம். திருவள்ளுவர் புலால் உண்ணுதலைக் கண்டித்திருக்கிறார்.
பெண்ணிய வளர்ச்சிபெண்கள் பெரும்பாலும் வீட்டோடு அடங்கியிருந்த நிலையிலிருந்து அலுவலகம் செல்பவர்களாகவும், மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளிலிருந்து பல்வேறு தொழில்நுட்பத் துறைகளிலும் பங்காற்றுபவராகவும் மாறியுள்ளனர். பெண்கள் உரிமை வேண்டிப் போராடும் நிலை உருவாகியுள்ளது. ஆண் பெண் சமம் என்ற உணர்வு தோன்றியுள்ளது. ஆணாதிக்கச் சமூகம் என்ற நிலை மாறியுள்ளது. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகிய குணங்களைக் கொண்டிருந்த பெண் இன்று தேவைக்கேற்ப அக்குணங்களைத் தள்ளிவைக்கப் பழகியிருக்கிறாள்.
தனிக்குடித்தன முறைகூட்டுக் குடித்தன முறை மாறித் தனிக் குடித்தன முறை வளர்ந்திருக்கின்றது. திருமணம் ஆன பின் கணவனும் மனைவியும் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்துசெல்வது இயல்பாகிவிட்டது.
புறத்தோற்றங்களில் மாற்றம்
புறத் தோற்றத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மேலே துண்டு மட்டும் போட்டிருந்த ஆடவன் சட்டை அணிகிறான்; அலுவலக உடை என்று ஐரோப்பியர் அணியும் உடை மாதிரியைப் பின்பற்றுகிறான். குடுமி வைத்திருந்த நிலையிலிருந்து 'கிராப்' வெட்டிக் கொள்ளும் நிலைக்கு மாறியிருக்கிறான். 18 முழப் புடைவையிலிருந்து பெண் 11 முழத்துக்கு மாறியிருக்கிறாள். கைம்பெண் வெள்ளை உடை உடுத்தும் நிலை மாறியிருக்கிறது; நகர நாகரிகத்தில் கைம்பெண் பொட்டு வைத்துக் கொள்கிறாள்.
திருமணச் சடங்குகளில் மாற்றம்
திருமண உறவு
உறவு முறைக்குள் திருமணம் என்பது மாறிக் காதல் மணங்களும் கலப்பு மணங்களும் பெருகியுள்ளன. திருமண விளம்பர எண்ணிக்கை செய்தித்தாள்களில் பெருகியுள்ளது.
வாழ்க்கைத் தரம்பெண்ணும் பொருளீட்டுவதால் வீட்டு வருவாயும் வாழ்க்கைத் தரமும் கூடியுள்ளன. குடிசைகளின் எண்ணிக்கை குறைந்து சிமெண்ட்டால் கட்டப் பெற்ற அழகிய வீடுகள் தோன்றியுள்ளன. குழந்தைகளின் எண்ணிக்கையைப் பெற்றோர் முடிவு செய்து கொள்கின்றனர். அயல் நாடுகளுக்குப் பெண்கள் போவதில்லை என்ற நிலை மாறி ஏராளமான பேர் குடிபெயர்ந்து போகும் நிலை தோன்றியுள்ளது.
6.3.1 நல்லன தீயன
இன்று தமிழர் வாழ்வில் அயல் நாகரிகப் பண்புகள் பலவும் புகுந்துள்ளன. அவற்றில் நல்லனவும் உண்டு; தீயனவும் உண்டு.
நல்லனஒரு கிராமத்து இளைஞன் ஏர் கலப்பையோடு, இரண்டு மா வயலில் உழுது, தன் தேவைகளைப் பெருக்கிக் கொள்ளாமல், சுருக்கமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
என்பது அவனது தேவையைக் கூறும் கூற்றாகும். இன்று அதே கிராமத்து இளைஞன் டிராக்டர் ஓட்டுகிறான்; வீரிய விதை பற்றியும், நீலப் பச்சைப் பாசி பற்றியும், செயற்கை உரம் பற்றியும் பேசும் அளவு அறிவியல் முறையில் அவனது தொழிற்கல்வி விரிவடைந்துள்ளது. நோய்களுக்கு விரைவான வலிமைமிக்க மருத்துவம் கிடைக்கிறது. சாவு எண்ணிக்கை குறைந்துள்ளது. பிறப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொருள் முதலீடு, தொழில்மயமாதல் போன்றவற்றால் வாழ்க்கை வசதிகள் கூடியுள்ளன. விரைவு வண்டிகளில் மனிதன் ஏறிச் சென்று பொழுதை மிச்சப்படுத்துகிறான். இவையெல்லாம் நல்லன.
தீயன
மேற்கூறியவற்றுக்கு மாறாகச் சில தீயனவும் தமிழர் பண்பாட்டில் புகுந்துவிட்டன. இன்று மனிதனுக்கு மனிதன் இடைவெளி பெருகிவிட்டது. உடம்பால் மிக நெருங்கி வாழும் வாழ்க்கையில் உள்ளக் காப்பு இல்லை. அடுக்கு வீடுகளில் வாழ்பவர்களுக்கு அடுத்த வீட்டுக்காரர் யார் என்று தெரியாமல் ஆண்டுக்கணக்காக வாழும் நாகரிகம் தோன்றியுள்ளது. பொருள் தேடுவதற்காக விரைந்து இயங்கும் முயற்சியில் வாழ்க்கையின் உயர் பண்புகள் கரைந்துவிட்டன. பொருள் தேடும் அவாவால் குற்றங்கள் மலிந்து விட்டன; சிறைக் கூடங்களில் குற்றவாளிகள் பலராக உள்ளனர். மதுப் பழக்கம் சமூகத்தின் மேல் தட்டிலும் கீழ்த் தட்டிலும் விலக்க முடியாததாக ஆகியிருக்கிறது. இரவு விடுதிகள், பாலியல் குற்றங்கள் பெருகியுள்ளன. எது அறம் என்பதில் நெகிழ்ச்சி தோன்றியிருக்கிறது. இவ்வாறு தீயனவும் தமிழர் பண்பில் இடம் பெற்று விட்டன.
எப்படிப் புகுந்தன?
புதுமைக் கவர்ச்சி, புறத் தோற்ற மாறுபாடுகளில் நாட்டம், அறத்தில் நாட்டக்குறைவு, பொறி புலன்களின் மீது எல்லையற்ற நுகர்வு விருப்பம், செயற்கையை விரும்பி ஏற்கும் மனம், ஆடம்பர உணர்வு, போலி மதிப்பு ஆகியன தீய பண்புகளைப் பிற நாடுகளிலிருந்து தமிழர் தழுவக் காரணமாகும்.
மணவிலக்கு இன்று தமிழர் வாழ்வில் மெல்லத் தலை நீட்டியிருக்கிறது. பிரிந்து போவது இயலாது என்றும், திருமணம் என்பது உயிரோடு ஏற்பட்ட பிணைப்பு என்றும் எண்ணிக் கொண்டிருந்த எண்ணம் தகர்ந்து விட்டது. மணவிலக்கு பெற்ற பெண் விளம்பரம் செய்து மாப்பிள்ளை தேடுகிறாள். இது எப்படி நிகழ்கிறது? திருமணத்தைப் பற்றித் தமிழர் கொண்டிருந்த அடிப்படைக் கோட்பாடு மாறிவிட்டது. மேலை நாட்டுக் கலாச்சாரத் தாக்கம் தமிழர் வாழ்வுப் பிணைப்பை மாற்றி யிருக்கிறது. தமிழர் உணவு, உடை, பழக்கவழக்கம் ஆகியவற்றில் உலகம் முழுவதும் பரவியுள்ள ஐரோப்பியத் தன்மை குடியேறியிருக்கிறது. நாட்டைப் பிடித்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஆண்டவர்களோடு நாமும் பழகியதால் நாம் அவர்களைப் பார்த்து வாழப் பழகியதன் விளைவு இது.
6.3.2 பண்பாட்டில் கழிந்தன
பெருமைக்குரியன என்று எவரும் கருதும் சில பண்புகள் இன்று தமிழர்களில் பலரை விட்டு நீங்கியிருக்கின்றன. அவையாவன :
1. பழியென்றால் உயிரை விட்டு விடும் மான உணர்வு.
2. பொது நலத்திற்காகத் தன்னை அழித்துக் கொள்ளும் மாண்பு.
3. செல்வம் என்பது பிறர்க்குக் கொடுத்து மகிழ என நினைத்த பெருந்தகவு (Value) .
4. செல்வர்க்கும் அதிகாரத்திற்கும் அஞ்சாத தறுகண்மை (பேராண்மை).
5. எளிமை வாழ்வில் செம்மை நெறிகள்.
6. நாணத்தையும் அச்சத்தையும் அணிகலனாகக் கொண்ட பெண்மை.
7. பெண்மைக்கு அரணாக நின்ற ஆண்மை.
8. மொழி, நாடு என்பவற்றிற்காக உழைக்கும் நோக்கம்.
9. உலகோர் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் மனித நேயம்.
இந்தப் பண்புகளை இன்று அரிதாகப் பார்க்கிறோம். இன்றைய தமிழ்ச் செய்திதாளில் வந்த செய்திகளை நாம் எழுதுகிறோம்; படியுங்கள்.
பாங்கில் கொள்ளையடித்த கும்பல் கைது.
மனைவியைக் கணவனே வெட்டிக் கொன்றான்! கள்ளக் காதலே காரணம்!
வரப்புத் தகராறில் மூவருக்கு அரிவாள் வெட்டு.
பேருந்தில் சக பிரயாணியிடம் கொள்ளை.
நிலம் வாங்குவதில் தகராறு. போலிக் கையெழுத்திட்டு மோசடி.
நிறுவனத்தில் இரண்டு கோடி ஊழல். குற்றப்பத்திரிகை தாக்கல்.
இளம் பெண்ணைக் கடத்திக் கற்பழிப்பு. சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி ஏமாற்றினார்!
கள்ள நோட்டுக் கும்பல் பிடிபட்டது.
மூன்று லட்ச ரூபாய் பெறுமான சாராயம் அழிப்பு. போலீஸ் தீவிரம்!
வரதட்சணைக் கொடுமையில் பெண் எரிப்பு! மாமனார் மாமியார் கணவருக்குச் சிறை.
இவையெல்லாம் எங்கே நிகழ்கின்றன? திருவள்ளுவரும், இளங்கோவடிகளும், கம்பரும், நாலடியார் பாடிய சமண முனிவர்களும் தோன்றிய தமிழ்நாட்டில்தான். நல்ல பண்புகள் கழிந்தன; தீய பண்புகள் மிகுந்தன. ஏன் என்று காண்போமா?
ஏன் கழிந்தன?
பழங்காலத்தில் மூன்று கேடுகளைக் கூறுவார்கள். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்பன அவை. இவற்றை ஒரு வரையறையோடு அளவாகத் துய்த்து நிறைவடையும் உள்ளத்தை மனிதன் - தமிழன் இழந்துவிட்டான். உலகெங்கும் மேற்கூறிய தவறுகள் நிகழ்கின்றன. ஆனால் இவை தமிழ்நாட்டில் நடக்கலாமா?
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
எனப் புகழ் பெற்றதாயிற்றே.
ஒரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில்
48 விழுக்காடு (சதவீதம்) - பெண் காரணமாகக் குற்றம் செய்தவர்கள்
29 விழுக்காடு (சதவீதம்) - பணம், நகை திருட்டுக் குற்றம் செய்தவர்கள்
11 விழுக்காடு (சதவீதம்) - நிலத் தகராறு, பாகப் பிரிவினை, சொத்து இவை
காரணமாகக் குற்றம் செய்தவர்கள்.
12 விழுக்காடு (சதவீதம்) - பிற குற்றம் புரிந்தவர்கள்
இன்று பாலியல் குற்றங்கள் பெருகி விட்டன. மறைவாகவும், வரையறையோடும், கணவன் மனைவி என்ற உறவுக்குள்ளும் நிகழவேண்டிய பாலுறவு இன்று எல்லா மறைவுகளையும் வேலிகளையும் தாண்டிப் பொது வீதிக்கு வந்துவிட்டது. ஒழுக்கக்கேடு இன்று சமூகத்தில் இழிவாக எண்ணப்படவில்லை. அறநெறியின்றிப் பொருள் சேர்ப்பது குற்றம் என்ற நோக்குக் குறைந்து வருகிறது. தண்டனையிலிருந்தும் சட்டத்தின் கிடுக்கிப் பிடியிலிருந்தும் தப்பித்துக் கொள்ளும் வழிகளை மனிதனின் அறிவு கண்டுள்ளது. இந்த நிலையில் நற்பண்புகள் விலகித் தானே போகும்!
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. தமிழகம் அயல்நாட்டோடு செய்த வணிகம் பற்றி எழுதுக.
2. தமிழர்களின் வாழ்க்கையில் தலையாய குறிக்கோள் எது?
3. தமிழர் பண்பாட்டில் மாற்றம் விளைத்த காரணங்களில் ஒன்றைக் கூறுக.
4. தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தவர்கள் யாவர்?
5. தமிழ்ப் பண்பாடு அயல்நாடுகளில் பரவாமைக்குரிய காரணம் யாது?