Primary tabs
-
6.6 தழுவல் முறை
எழுத்துச் சீர்திருத்தத்தைப் பொறுத்தவரையில் ‘தழுவல் முறை’ (adoptation) என்ற ஒரு பிரச்சினை உண்டு எனலாம்.
கி.பி. 7ஆம் மற்றும் 8ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ்நாட்டில் மூன்று எழுத்து முறைகள் காணப்பட்டன. அவையாவன:
1. கிரந்த எழுத்து (கல்வெட்டு எழுத்து)
2. தமிழ் எழுத்து
3. வட்டெழுத்துசோழநாட்டிலும் தொண்டை மண்டலத்திலும் தமிழ் எழுத்துகள் புழக்கத்தில் இருந்தன. பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் வட்டெழுத்துகள் புழக்கத்தில் இருந்தன. பொதுவாக வடமொழிச் சொற்களை அப்படியே தமிழில் எழுத வேண்டும் என்று எண்ணிக் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தினர். ஆனால் ஒன்று நிச்சயம். இம் மூன்று எழுத்துகளும் ஒரே காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்தன என்பது தெளிவு. இதுபோன்ற காரணங்களால் எழுத்தில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. இதனையே எழுத்துச் சீர்திருத்தம் என்கிறோம்.
வளர்ந்து வரும் புத்துலகத் தேவைக்கு ஏற்ப மொழியிலும் எழுத்திலும் புதுமை செய்துகொள்ள நேரிடுவது இயற்கை. இதில் எவ்விதத் தயக்கமும் தேவையில்லை எனலாம். உலக வரலாற்றில் இப்படிப்பட்ட எழுத்துச் சீர்திருத்தங்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு காலகட்டங்களில் நடந்திருக்கின்றன. ஆகவே, மொழியிலும் எழுத்திலும் புதுமையாக்கமும் சீர்திருத்தமும் தேவையே.