Primary tabs
-
6.7 பிற மொழிகளில் எழுத்துச் சீர்திருத்தம்
திராவிட மொழிகளுள் ஒன்றான மலையாள மொழி அண்மையில் எழுத்துச் சீர்திருத்தம் செய்து கொண்டுள்ளது. தமிழில் உள்ளதைப் போலவே உயிர் மெய்யில் உகர, ஊகாரத்திற்கும் நிறைய மாற்றுவடிவம் உடையதாக இருந்ததைக் குறைத்து ஒரு மாற்று வடிவத்தையே ஏற்றுக் கொண்டது.
தெலுங்கு எழுத்தும் கன்னட எழுத்தும் அதிக ஒற்றுமை உடையனவாகும். அவை இரண்டையும் ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற முயற்சி நடைபெற்று வருகிறது.
இந்திய மொழிகளில் ஒன்றான மராட்டியில் (அச்சு வாகனம் ஏற்பட்டதும்) ‘மோடி’ எழுத்துப் போய் நாகரி எழுத்துப் புகுத்தப்பட்டது.
இந்தோனேஷியா மொழியில் அந்நாடு சுதந்திரம் அடைந்த பிறகு (1945) நிறையச் சீர்திருத்தங்கள் ஏறக்குறைய ஐந்து முறை மேற் கொள்ளப்பட்டன. இருக்கின்ற எழுத்துகளில் அதிகம் பயன்படாமல் இருப்பதை இன்று தேவைப்படும் புதிய ஒலிகளைக் குறிக்கும்படிச் செய்தல் போன்றவற்றைச் செய்தனர். தமிழ்மொழியில் அதிகமாகப் பயன்படாமல் நிறைய எழுத்துகள் காணப்படுகின்றன.
சான்று:
ஙி, ஙீ
ஙு, ஙூ
ஙெ, ஙே,
ஙை ஙொ,
ஙோ, ஙௌஎன்பனவாகும்.
பொதுவாகக் கூற வேண்டும் என்றால் இந்தோனேஷிய மொழி எழுத்துச் சீர்திருத்தத்திற்குப் பெயர் பெற்ற ஒன்று எனலாம். எவ்வாறு எனில் இந்நாட்டின் வரலாற்றில் பெரிய அளவில் கலாச்சார மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. பலவிதமான மதங்களைத் தழுவியவர்கள் இந்நாட்டை ஆண்டு வந்ததால் அதிக எண்ணிக்கையில் எழுத்துச் சீர்திருத்தம் நடைபெற்றுள்ளது எனலாம்.
ஜெர்மானிய மொழி ‘கோதிக்’ (Gothic) வரிவடிவத்தில் எழுதப்பட்டது மாறி ரோமன் (Roman) எழுத்தில் எழுதப்படத் தொடங்கியது. இதற்கும் சமய வளர்ச்சியே காரணம் எனலாம்.