Primary tabs
-
3.5 தொகுப்புரை
இலக்கியம் காலத்தின் பெட்டகமாகும். இவ்விலக்கியப் பேழையில் பல அற்புதங்கள் மறைந்துள்ளன. அப்பேழையை முறைப்படி அணுகினால் மட்டுமே அவ்வற்புதங்களைப் பெறமுடியும். அதற்கு அணுகுமுறை என்ற திறவுகோல் அவசியமாகும். இது ஓர் அறிவுத் தேடலின் ஊன்றுகோலாய், இருண்ட இடத்தில் ஒரு துளி ஒளியாய்ப் பாதை காட்டும் இயல்புடையது. இலக்கு நோக்கிய பயணத்தை அணுகுமுறை வெற்றியடையச் செய்கிறது.
குறிப்பிட்ட இலக்கியத்தைக் கண்டு நெருங்கி, அவ்விலக்கியத்தில் என்ன சிறப்பு இருக்கின்றது என்பதை முறைப்படியானதொரு அணுகுமுறையால் கண்டு அறிவிப்பதே அணுகுமுறை எனப்படும். இம்முறைகளில் அழகியல் என்ற அணுகுமுறை முக்கியமானது. இதன் மூலம் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள உருவநேர்த்தி, உத்திகள் போன்றுள்ள அழகைக் கண்டு சொல்லலாம். தமிழில், டி.கே.சியும் அவருடைய இலக்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்களும் இவ்வணுகுமுறையைப் பெரிதும் பின்பற்றினார்கள்.
-