தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - D06132-தொகுப்புரை

    • 2.5 தொகுப்புரை     

          படைப்போர், படிப்போர் என்ற இருவேறு நிலைகளில் ஏற்படும் இடைவெளிகளையும் கால இடைவெளிகளையும் தவிர்க்கிற அல்லது குறைக்கிற பணியைச் செய்வன உரைகள். அவை, இன்றைய திறனாய்வு செய்கிற வேலையையே அன்றே - ஓரளவாயினும் செய்தன. உரைகள், பொதுவாக இலக்கண உரைகள், இலக்கிய உரைகள் மற்றும் சமய, தத்துவ நூல் உரைகள் என்ற முறையில் அறியப்படுகின்றன. இலக்கண உரைகளில், எழுத்து, சொல் ஆகிய மொழியமைப்புப் பற்றிய உரைகளன்றி, பொருள் இலக்கணத்திற்கு விளக்கம் தரும் உரைகளும் உண்டு. அகம், புறம் உட்பட்ட பொருள், யாப்பு, அணி ஆகிய இலக்கணங்களுக்கு உரை கூறும்போது, இலக்கியக் கோட்பாடும்,     திறனாய்வுக்குரிய     அடித்தளமும் புலப்படுத்தப்படுகின்றன.

          சங்க இலக்கியம் முதற்கொண்ட இலக்கியங்களுக்கு எழுந்த உரைகளை இலக்கிய உரைகள் என்கிறோம். இவை, செய்யுள் இலக்கியங்களுக்கே உரியனவாக உள்ளன. இலக்கிய உரைகள், குறிப்புரைகளாகவோ,     பொழிப்புரைகளாகவோ, அல்லது இரண்டுமே கொண்டு, மற்றும் அருஞ்சொல் விளக்கங்களையும் பொருள் நயங்களையும் அணிநயங்களையும் கொண்டனவாகவோ விளங்குகின்றன.

          தமிழில் அதிகமான நூல்களுக்கு உரையெழுதியவர் கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நச்சினார்க்கினியர். இவர் தொல்காப்பியம்     எனும்     இலக்கண     நூலுக்கும், கலித்தொகைக்கும், பத்துப்பாட்டுக்கும் மற்றும் சீவக சிந்தாமணிக்கும் உரையெழுதியுள்ளார். விளக்கமான விரிவான உரைகள் இவை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவற்றிற்குப் பழைய உரைகள், பெரும்பாலும், சுருக்கமான     பொழிப்புரைகளாக     அமைந்துள்ளன. நாலடியார்க்குப் பதுமனார் உள்ளிட்ட மூன்றுபேர் உரை யெழுதியுள்ளனர்.      திருக்குறளுக்குப்     பதின்மர் உரையெழுதியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், காலிங்கர், பரிமேலழகர், மணக்குடவர், பரிதி, பரிப்பெருமாள் ஆகியோர் உரைகளே கிடைக்கின்றன. இவர்களுள்,    கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரிமேலழகர், திருக்குறளுக்கு மட்டும் அன்றி, பரிபாடலுக்கும் உரையெழுதியிருக்கின்றார். பழைய இலக்கியங்களைக் கற்க விரும்புவோர்க்கு இன்றும், இந்த உரைகள் மிகவும் உதவியாக இருந்து வருகின்றன.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - II
      1.
      சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு ஆரம்பத்தில் எழுந்த குறிப்புரைகளும் பழைய உரைகளும் முக்கியமாக இரண்டு பணிகளைச் செய்தன. அவை யாவை?
      2.
      திருக்குறளின் பொருட்பாலைக் காலிங்கர் எத்தனை இயல்களாகப் பகுக்கிறார்? அவை யாவை?
      3.
      பதுமனார் என்பார் எந்த நூலின் உரையாசிரியர்?
      4.
      பரிபாடலுக்கு உரையெழுதியவர் யார்?
      5.
      நச்சினார்க்கினியர்     எந்தெந்த     நூல்களுக்கு உரையெழுதியுள்ளார்?
      6.
      இளம்பூரணர், பேராசிரியர்,     நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் முதலியவர்களுடன் ஒப்பக் கருதும் அறிவுடையவராக, உ.வே.சாமிநாத ஐயரால் கருதப்படும் உரையாசிரியர் யார்?
      7.
      பாடல்களை அப்படியே கொள்ளாமல் அவற்றில் இடமாற்றம் செய்து, கொண்டு கூட்டுப் பொருளாக உரை செய்கிற போக்குக் கொண்ட உரையாசிரியர் யார்?

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 13:14:17(இந்திய நேரம்)