தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அண்ணாவின் உரைநடையின் தனித்தன்மை

  • 2.3 அண்ணாவின் உரைநடையின் தனித்தன்மை

    உரைநடையாசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை அமைகின்றது. இத் தனித்தன்மை அந்த ஆசிரியரின் கல்வித் தகுதி, வாழ்க்கைச் சூழல், அவரது படைப்பின் நோக்கம் என்னும் பல காரணங்களின் அடிப்படையில் அமைகின்றது. அந்த வகையில் அண்ணாவின் உரைநடையில் பல தனித் தன்மைகள் காணப்படுகின்றன. இத் தனித்தன்மைகளே அண்ணாவின் உரைநடை வெற்றி பெறுவதற்குப் பெருந்துணையாக அமைந்தவை. அண்ணாவின் உரைநடையின் தனித் தன்மைகளைப் பின்வருமாறு வகைப்படுத்திக் காணலாம். அவை, 

    (1)
    பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும்
    (2)
    உரைநடையில் கவிதை
    (3)
    உணர்ச்சி வெளிப்பாடு
    (4)
    வினா-விடை அமைப்பு
    (5)
    நெடுந்தொடர் அமைப்பு
    (6)
    நிறுத்தற்குறியீடுகள்
    (7)
    பிறமொழிக் கலப்பு

    முதலியன.

    இனி, இவற்றைப் பற்றித் தனித்தனியே விரிவாகக் காண்போம். 

    அண்ணாவின் படைப்புகள் கல்வி கற்றவர்க்காக மட்டும் அமையவில்லை. படிப்பறிவு இல்லாத தமிழர்களிடத்தும் அவரது படைப்புகள் சென்று சேர வேண்டும் என்று விரும்பினார். அதற்கேற்ப அவரது சொற்பொழிவுகளை அமைத்துக் கொண்டார். மேடைதோறும் அண்ணா நிகழ்த்திய சொற்பொழிவுகளும் பின்னர் அச்சாகி இலக்கியப் படைப்புகள் என்று போற்றப் பட்டன. எனவே கற்றவர்களையும் கல்லாதவர்களையும் தம் மனதில் கொண்டே அண்ணா தம் படைப்புகளை உருவாக்கினார். இதனால் அண்ணாவின் படைப்புகளில் ‘பண்டிதர் தமிழ்’ என்று கூறப்படும் இலக்கியத் தமிழும், ‘பாமரர் தமிழ்’ என்று கூறப்படும் ‘பேச்சுத் தமிழும்’ கலந்து இடம் பெற்றன. எனவே அண்ணாவின் உரைநடை ‘ஏறத்தாழ அறுபது விழுக்காடு புலவர் தமிழும் நாற்பது விழுக்காடு பாமரர் பேச்சுத் தமிழும் கலந்த நடையில் ஒரு பெரும் மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் தமிழ் உரைநடையில் ஏற்படுத்தியுள்ளது’ என்பர்.

    அண்ணாவின் உரைநடையின் பயனாக இலக்கியத் தமிழை எளிய மக்களும் அறியும் வாய்ப்பைப் பெற்றனர். பாமரர் பேச்சுத் தமிழுக்கு இலக்கிய வடிவத்தை வழங்கி, அதற்குச் சிறப்பைத் தேடித் தந்த பெருமையும் அண்ணாவின் உரைநடைக்கு உண்டு. இவ்விரு காரணங்களினால்தான் பல்கலைக் கழகப் பட்டம் பெற்ற இளைஞர்களும் பள்ளிக் கல்வியோடு படிப்பை நிறுத்திய இளைஞர்களும் அண்ணாவின் தமிழில் ஆர்வம் கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். 

    அண்ணாவின் உரைநடையில் காணப்படும் முக்கியமானதொரு தனித்தன்மை அந்த உரைநடையில் கவிதை நயம் அமைந்திருப்பதாகும். இவ்வாறு உரைநடையில் கவிதை நயம் தோன்றக் காரணம் அண்ணாவின் மொழிப் புலமையும், சொற்களில் படைத்துக் காட்டும் உணர்ச்சிகளும் ஆகும். உரைநடையில் அண்ணா எழுதியுள்ள மாநாட்டு மலர் மடல்கள், தேர்தல் கால மடல்கள், மாநாட்டு அழைப்பு மடல்கள், அறப்போர் அழைப்பு மடல்கள் எனவரும் மடல்களில் கவிதைநயம் மிகுந்து காணப்படுகின்றது என்பர்.

    அண்ணாவின் உரைநடையில் கவிதைநயம் அமைந்திருப்பதற்குப் ‘பட்டப் பகலில்’ என்னும் மடலில் ஓர் அழகியின் வருகையைத் தீட்டும் பகுதியை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

    “குழந்தை இடுப்பேற்றி, குளிர்மதியைக் கண்ணேற்றி,
    மலருக்கு மணமூட்டக் கூந்தலிலே தானேற்றி,
    மையுண்ட கண்ணாள் மையலூட்டும் பருவத்தாள்,
    வானகத்திலும் வையகமே சிறந்ததென
    வாயால் மொழியாள், கண் வழியாய்க் காட்டிடும்
    காளையர் நெஞ்சிலே கனலேற்றி நடக்கின்றாள்”

    மேலேயுள்ள இப்பகுதியை உரைநடை என்றாலும் அதில் கவிதைக்குரிய கற்பனையும் கனிச்சுவையும் நிறைந்திருத்தலைக் காணமுடிகின்றதல்லவா? அண்ணாவின் உரைநடை இன்பக் கவிதையாய் இனிப்பதை உணர்வீர்கள் என நம்பலாமா? 

    அண்ணாவின் உரைநடைக்கு இருக்கும் ஆற்றல்மிகு தனித்தன்மைகளில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறனும் ஒன்றாகும். அண்ணா தம் உள்ளத்தில் உருவெடுக்கும் உணர்ச்சிகளைச் சிந்தாமல் வெளிப்படுத்துவதற்கு ஏற்றவகையில் சொற்களைத் தேர்ந்தெடுத்து அமைத்துள்ளார். மனித வாழ்க்கையில் வெளிப்படும் உணர்வுகள் அனைத்தையும் அண்ணா தம் உரைநடையில் வடித்துக் காட்டியுள்ளார்.

    நகை, அழுகை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை முதலிய உணர்ச்சிகளை அண்ணாவின் உரைநடையில் காணலாம். இவற்றுள் அண்ணாவின் உரைநடையில் வெளிப்படும் அழுகை உணர்ச்சிக்கு ஓர் எடுத்துக் காட்டைக் காண்போம். தந்தையும் மகனும் ஒரே வீட்டில் வேலை செய்கின்றனர். அவ்விருவரின் உறவு வெளிப்பட்டால் தந்தையின் வேலையும் உயிரும் போகலாம். இச் சூழலில் தந்தை மீது அவன் கொண்டுள்ள அன்பு வேதனையைத் தருகிறது. துடிக்கிறான்.

    வேதனை நாளுக்கு நாள் வளர்ந்தது; வெளியே சொல்ல முடியாததால், வேதனை இதயத்தையே பிய்த்துத் தின்னத் தொடங்கிற்று’ என்னும் வரிகளைப் படிக்கும் போது நம் கண்களில் ஈரம் கசிகின்றதல்லவா? 

    அண்ணாவின் உரைநடையில் அமைந்த மற்றுமொரு தனிச்சிறப்பு அது வினா-விடையில் அமைந்திருப்பதாகும். அண்ணா மேடையில் நிகழ்த்தும் பொழிவுகளிலும், இதழ்களி்ல் வரையும் மடல்களிலும், சில வேளைகளில் புதினங்களிலும் இந்த வினா-விடை அமைப்புக் காணப்படுவதுண்டு.

    வினாக்களை எழுப்பி, விடையையும் தந்து அமைக்கப்படும் உரைநடை படிப்பவர் உள்ளத்தை மிக நெருக்கமாகத் தொட்டுவிடும் இயல்புடையதாகும். இந்த வகையில் அண்ணாவின் உரைநடை அமைந்த காரணத்தால் ஆயிரமாயிரம் இளைஞர்களின் உள்ளத்தை அது ஈர்க்க முடிந்தது.

    இதற்கோர் எடுத்துக்காட்டைக் காண்போம் :

    “கழகமா? அது எங்கே இருக்கிறது என்று பேசிய காலம் போய்,

    கழகமா? அதைப் பொதுமக்கள் சீந்துவார்களா என்று கூறிய காலம் போய்,

    கழகமா? பத்துப்பேர் கூச்சலிடும் இடந்தானே என்று பரிகாசம் பேசிய காலம் போய்”,

    எனவரும் தொடர்கள் அண்ணாவின் வினா-விடை உரைநடையில் அமைந்தவை ஆகும்.

    மேலும் ஓர் எடுத்துக்காட்டு :

    “தம்பி உனக்கு நமது கழகத்திடம் பற்று இருக்கின்றதல்லவா? அது என்ன, உன் நலன் பெருக்கிக் கொள்ளவா? நாடு வாழ”

    இதிலும் வினாவை எழுப்பி அண்ணா விடை தருகிறார். 

    அண்ணாவின் உரைநடையில் அடுக்குமொழிகள் தொடர்ந்து இடம் பெறுவது இயல்பு. இதனால் அவரது உரைநடையில் சொற்றொடர்கள் பலவும் நீளமுடையனவாக அமைந்துள்ளன. உரைநடைக்குச் சுவையூட்டவும், வேண்டும் இடங்களில் உணர்ச்சியூட்டவும் இத்தகைய நீண்ட சொற்றொடர்கள் அண்ணாவின் உரைநடைக்கு இன்றியமையாதவைகளாக அமைந்துவிட்டன எனலாம்.

    நீண்ட தொடர்களை அமைத்து உணர்ச்சியூட்டும் அண்ணாவின் உரைநடைக்கு ஓர் எடுத்துக்காட்டைப் பாருங்கள் :

    வீரர்காள்! விடுதலைப் போர்ப்படையில் நின்று தாயகத்தின்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளைத் தூள் தூளாக்கிடும் ஆற்றலுடன் போரிட்டு, தியாகத் தழும்பேற்று நிற்கும் தீரர்காள்! மாற்றாரின் எதிர்ப்புரை, விளக்கமில்லாதவரின் வீணுரை, பொச்சாப்புக்காரரின் பொல்லாங்குமொழி என்பவைகளைத் துச்சமெனக் கருதி, உள்ள உரத்துடன் நின்று, கொண்ட கொள்கைக்காக, எடுத்துக் கொண்ட காரியத்திற்காக, நெஞ்சில் நிறைந்திருக்கும் இலட்சியத்திற்காக அரும்பாடுபட்டு அடக்குமுறைக் கொடுமைக்கு மார்காட்டி நின்ற மறவர்காள்” எனத் தொடரும் அண்ணாவின் உரைநடையில் நீண்டு செல்லும் சொற்றொடர்கள் அமைந்திருத்தலைக் காணலாம். 

    ஒரு தொடரில் ஒலி ஏற்றத்தாழ்வு, அழுத்தம், உணர்ச்சி வேறுபாடுகள், கருத்து மாற்றம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பதற்கும் கருத்துக்கும் உணர்ச்சிக்கும் முதன்மை தருவதற்கும் மொழிக்குரிய நிறுத்தற் குறிகளும், உணர்ச்சிக் குறிகளும் ஆளப்படுகின்றன. இவ்வகை நிறுத்தற் குறிகளும் உணர்ச்சிக் குறிகளும் அண்ணாவின் உரைநடையில் அதிகமாகக் காணப்படுவதால், அவற்றையும் அண்ணாவின் உரைநடையின் தனித்தன்மை என்று கூறலாம்.

    "மேலும் தம்பி! நாம் என்ன அவ்வளவு மலோன நிலையினரா?"

    இந்தத் தொடரில் விளிக்குறியும் (!) வினாக்குறியும் (?) இடம் பெற்றிருத்தல் காணலாம்.

    உணர்ச்சி நிலையைப் பெருக்குவதற்குச் சிறு கோடிடல் (--) என்னும் குறியீட்டை அண்ணாவின் உரைநடையில் காண முடிகிறது.

    “உழைத்தேன் சிறைக்குள்ளே - உருமாறியும் விட்டேன். கண்ணீர் பொழிந்திட மறுக்கும் நிலை - வெளிவந்தேன், மகளைக் காண - அவள் சிறையில் - அதுவும் உன்னால், என்றார்” என்னும் பத்தியில் வந்தமைந்திருக்கும் சிறுகோடும் அண்ணாவின் உரைநடையில் சொல்லாக அமைந்து உணர்ச்சியூட்டுவதைக் காண முடிகிறது. 

    அண்ணாவின் உரைநடையில் பிறமொழிச் சொற்கள் கலந்து வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அண்ணா பொதுமக்களின் நடையில் தம் எழுத்தையும் பேச்சையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதியவர். பொது மக்களின் பேச்சில் பயன்படுத்தும் சொற்களைத் தாமும் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணியவர். எனவே பேச்சுத் தமிழில் இயல்பாக இடம் பெறும் பிறமொழிச் சொற்கள் அண்ணாவின் உரைநடையிலும் வந்துள்ளன.

    அண்ணாவின் உரைநடையில் பிறமொழிச் சொற்கள் அமைந்தமைக்கு, அவரது உரைநடை அலங்கார நடையாக அமைய வேண்டும் என்று கருதியதே காரணம் ஆகும். அத்தகைய அடுக்குமொழிகளுக்காக அண்ணா வடசொற்களையும் சில நேரங்களில் ஆங்கிலச் சொற்களையும் பயன்படுத்திக் கொண்டார்.

    “எந்தக் கரத்தால் எனக்குக் கனி, காசு, ஆடை அணி, சகலமும் தந்தாரோ, அதே கரத்தால் ஆத்திரத்துடன், அழுகுரலுடன் என் கழுத்தை நெரித்தார். என் தகப்பனார் ! எவ்வளவு விசித்திரமான மாறுதல்” இதில் கரம், சகலம், விசித்திரம் என்னும் வடசொற்கள் வந்துநிற்றலைக் காண்கிறீர்கள் அல்லவா?

    அண்ணாவின் புதினங்களிலும் சிறுகதைகளிலும், நாடகங்களிலும் கதைமாந்தர்களின் வாழ்க்கைச் சூழலுக்கேற்பப் பேசும் மொழிகளை அப்படியே படைத்துக் காட்டியிருப்பதாலும் அவரது உரைநடையில் பிறமொழிச் சொற்கள் கலந்துவிட்டன என்பதை உணரலாம்.



    1.
    அண்ணாவின் உரைநடைப் படைப்புகளை எவ்வாறு பல வகைப்படுத்தலாம்?
    2.
    அண்ணாவின் உரைநடைப் படைப்புகளுக்கு நோக்கங்கள் யாவை?
    3.
    அண்ணாவின் உரைநடையின் தனித்தன்மைகளில் நான்கினைக் குறிப்பிடுக.
    4.
    அண்ணாவின் உரைநடையில் சொற்றொடர்கள் நெடுந்தொடர்களாக அமைந்ததற்குக் காரணம் என்ன?
    5.
    அண்ணாவின் உரைநடையில் வடசொற்கள் கலந்து வந்தமைக்குக் காரணம் கூறுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 30-07-2018 17:54:43(இந்திய நேரம்)