தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாவடிவங்கள்

  • 3.2 பா வடிவங்கள்

    வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா எனப் பா வடிவங்கள் ஐந்து வகைப்படும்.

    3.2.1 வெண்பா

    வெண்பாவிற்கான இலக்கணங்களும், வெண்பா வகைகளும் குறித்துக் காண்போம்.

    • வெண்பா இலக்கணம்
    · மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் ஆகியனவே இடம்பெறும்; கனிச்சீர் வரக்கூடாது.

    · இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வரும்; பிற தளைகள் வரலாகாது.

    · ஈற்றடி முச்சீருடையதாகவும், ஏனைய அடிகள் நான்கு சீர் உடையனவாகவும் அமையும்.

    · ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு கொண்டு முடியும்.

    · செப்பலோசை பெறும்.

    · அடிவரையறை; குறைந்த அளவு இரண்டடி; பேரெல்லைக்கு வரையறை இல்லை.
    • வெண்பா வகைகள்

    வெண்பா ஆறு வகைப்படும். அவை பின்வருமாறு:

    1. குறள் வெண்பா

    இரண்டடிகளில் அமைவது.

    (எ.கா)

    வெள்ளத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
    உள்ளத் தனைய துயர்வு

    2. சிந்தியல் வெண்பா

    மூன்றடிகளில் அமைவது. இரண்டாம் அடியில் தனிச்சொல் பெறுவது நேரிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும். தனிச்சொல் இவ்வாறு பெறாதது, இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும்.

    1) நேரிசைச் சிந்தியல் வெண்பா

    (எ.கா)

    கங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளை
    செங்குவளை பூத்தாள் செயலென்னே- எங்கோமான்
    பங்குற்றும் தீராப் பசப்பு

    2) இன்னிசைச் சிந்தியல் வெண்பா

    (எ.கா)

    மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
    நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்
    மேல்நின்று தான்சுரத்த லான்

    3) நேரிசை வெண்பா

    நான்கடிகளையுடையது. இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெறும். அத்தனிச்சொல் முன்னிரண்டடிகளின் எதுகையை உடையதாய் இருக்கும். முன்னிரண்டடிகளில் ஓரெதுகையும், பின்னிரண்டடிகளில் ஓரெதுகையும் வருதல் பெரும்பான்மையாகும். இரண்டிற்கு மேற்பட்ட எதுகைகளும் வரலாம். எதுகையை ‘விகற்பம்’ எனச் சுட்டுவது உண்டு.

    (எ.கா)

    நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
    நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்!
    நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
    புல்லினும் திண்மைநிலை போம்

    4) இன்னிசை வெண்பா

    நான்கடிகளில் அமையும். ஓரெதுகையோ, இரண்டெதுகையோ, பல எதுகையோ பெற்று வரும்.

    (எ.கா)

    கல்லா ஒருவர்க்குத் தம்வாயின் சொல்கூற்றம்;
    மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்;
    அல்லவை செய்வார்க் கறம்கூற்றம்; கூற்றமே
    இல்லத்துத் தீங்கொழுகு வாள்

    5) பஃறொடை வெண்பா

    5 முதல் 12 அடிவரையில் அமையும். ஓரெதுகையோ, பல எதுகையோ பெற்று வரும்.

    (எ.கா)

    நன்றி யறிதல், பொறையுடைமை, இன்சொல்லோ(டு)
    இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோ(டு)
    ஒப்புர வாற்ற அறிதல், அறிவுடைமை,
    நல்லினத் தாரோடு நட்டல், இவையெட்டும்

    சொல்லிய ஆசார வித்து

    6) கலிவெண்பா

    13 அடி முதல் பல அடிகளில் வரும். தனிச்சொல் பெறாமல் வருவது இன்னிசைக் கலிவெண்பாவாகும். இரண்டிரண்டு அடிகள் ஒவ்வோரெதுகையும் தனிச்சொல்லும் பெற்றுக் ‘கண்ணி’ என்னும் பெயரில் பலவாக வருவது நேரிசைக் கலிவெண்பா ஆகும்.

    இன்னிசைக் கலிவெண்பாவிற்குச் சிவபுராணமும், நேரிசைக் கலிவெண்பாவிற்குத் தமிழ்விடுதூதும் சான்றுகளாகும்.

    இவை வெண்பா பற்றியனவாகும்.

    3.2.2 ஆசிரியப்பா

    ஆசிரியப்பாவின் இலக்கணத்தையும், வகைகளையும் இனிக் காண்போம்.

    • ஆசிரியப்பா இலக்கணம்
    · மாச்சீரும் விளச்சீரும் பயின்று வரும்; காய்ச்சீர் சிறுபான்மை வரும்;  கனிச்சீரில் தேமாங்கனியும் புளிமாங்கனியும் மட்டும் மிகச் சிறுபான்மை இடம் பெறலாம்.

    · நேரொன்றாசிரியத் தளையும், நிரையொன்றாசிரியத் தளையும் பயின்று வரும். பிற தளைகளும் வரலாம்.

    · அளவடி பயின்று வரும்; குறளடியும், சிந்தடியும் இடம் பெறுதலும் உண்டு; நெடிலடியும், கழிநெடிலடியும் வருதல் கூடாது.

    · அகவலோசை பெற்று வரும்.

    · ஆசிரியப்பாவின் சிற்றெல்லை மூன்றடி; பேரெல்லைக்கு எல்லை இல்லை.

    ·  ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிதல் சிறப்புடையது.
    • ஆசிரியப்பா வகைகள்

    ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அவை பின்வருமாறு:

    • நேரிசை ஆசிரியப்பா

    எல்லா அடிகளும் நான்கு சீர்களை உடையனவாகவும், ஈற்றயலடி மூன்று சீர்களை உடையதாகவும் அமைவது.

    (எ.கா)

    தானே முத்தி தருகுவன் சிவனவன்
    அடியன் வாத வூரனைக்
    கடிவில் மனத்தால் கட்டவல் லார்க்கே

    • நிலைமண்டில ஆசிரியப்பா

    எல்லா அடிகளும் நாற்சீர் உடையனவாக அமைவது.

    (எ.கா)

    வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
    சாரல் நாட! செவ்வியை ஆகுமதி;
    யாரஃ தறிந்திசி னோரே? சாரல்
    சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
    உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே

    • இணைக்குறள் ஆசிரியப்பா

    முதலடியும் ஈற்றடியும் அளவடியாக அமைய இடையில் அளவடி, சிந்தடி, குறளடி ஆகியன விரவி வருமாறு அமைவது.

    எ.கா)

    நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
    சாரச் சார்ந்து
    தீரத் தீரும்
    சாரல் நாடன் கேண்மை
    சாரச் சாரச் சார்ந்து
    தீரத் தீரத் தீர்பொல் லாதே

    • அடிமறி மண்டில ஆசிரியப்பா

    நிலைமண்டில ஆசிரியப்பாவில் எந்த அடியை எங்கு மாற்றி அமைப்பினும் பொருளும் ஓசையும் மாறாதிருப்பது.

    (எ.கா)

    மாறாக் காதலர் மலைமறந் தனரே
    யாறாக் கட்பனி வரலா னாவே
    ஏறா மென்தோள் வளைநெகி ழும்மே
    கூறாய் தோழியான் வாழு மாறே

    இதன் அடிகளை இடம் பெயர்த்து மேலும் 15 வகைகளில் அமைக்கவியலும்.

    3.2.3 கலிப்பா

    கலிப்பாவின் இலக்கணத்தையும் கலிப்பா வகைகளையும் காண்போம்.

    • கலிப்பா இலக்கணம்
    · காய்ச்சீர் பயின்று வரும்; மாச்சீர், விளச்சீர், கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகியன வருதல் கூடாது.

    · கலித்தளை பயின்று வரும்; பிற தளைகளும் வரலாம்.

    · அளவடியுடையதாக அமையும்.

    · துள்ளலோசை உடையது.

    · தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்புகளுள் ஏற்பனவற்றைக் கொண்டு நடக்கும்.
    • கலிப்பா உறுப்புகள்
    · தரவு: கலிப்பாவின் முதல் உறுப்பு; எருத்து எனவும் கூறப்பெறும்.

    · தாழிசை: கலிப்பாவின் இரண்டாம் உறுப்பு; தரவைவிடக் குறைந்த இசையும் ஓசையும் உடையது. தரவைக்காட்டிலும் அடியளவில் குறைந்தது; இடைநிலைப்பாட்டு எனவும் பெறும். மூன்றடுக்கி வருதல் மிகுதி (அதாவது, ஒரே கருத்தை மூன்று முறை, வெவ்வேறு உவமைகளுடன் கூறுதல்).

    · அராகம்: இசைத்தன்மையுடையது.

    · அம்போதரங்கம்: கடலலைபோல் சுருங்கி வருவது;

    · தனிச்சொல் : பொருள் தொடர்புடையதாய், ஓர் அசை (அ) சீர் தனித்து வருவது.

    · சுரிதகம்: பாட்டினை முடிக்கும் உறுப்பு. வெண்பாச் சுரிதகம், ஆசிரியச் சுரிதகம் என இது இருவகைப்படும்.
    • கலிப்பா வகைகள்

    கலிப்பா நால்வகைப்படும். அவை:

    தரவு, மூன்றடுக்கிய தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகியன கொண்டது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும்.

    தாழிசையை அடுத்து அம்போதரங்கம் அமைவது அம்போதரங்கக் கலிப்பாவாகும்.

    தாழிசையை அடுத்தும் அம்போதரங்கத்திற்கு முன்புமாக அராகம் அமைவது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா எனப்பெறும்.

    • ஒத்தாழிசைக் கலிப்பா

    (எ.கா)      (தரவு)

    வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து
    தோணெடுந்தன் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப்
    பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ?

    (தாழிசை)

    சூருடைய நெடுங்கடங்கள் சொலற்கரிய என்பவால்
    பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே?      (1)

    சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால்
    நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நலமிலரே?     (2)

    சிலம்படைந்த வெங்கானம் செலற்கரிய என்பவால்
    புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே?   (3)

    (தனிச்சொல்)
    எனவாங்கு
    (சுரிதகம்)

    அருளெனும் இலராய்ப் பொருள்வயிற் பிரிவோர்
    பன்னெடுங் காலம் வாழியர்
    பொன்னெடுந் தேரொடு தானையிற் பொலிந்தே!

    - இப்பாடல் ஆசிரியச் சுரிதகத்தால் இயன்ற நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவாகும். பிறவகைக் கலிப்பாக்களை இலக்கியங்களைப் பயின்று சுவைக்கலாம்.

    • வெண்கலிப்பா

    தரவு மட்டுமே பெறும்; அளவடிகளால் அமையும்; சிற்றெல்லை நான்கடிகள்; பேரெல்லைக்கு எல்லையில்லை; ஈற்றடி சிந்தடியாக வரும். கலித்தளை பயின்று வரும். வெண்சீர் வெண்டளையும் இடையிடையே வரும்.

    (எ.கா)

    முழங்குகுரல் முரசியம்ப முத்திலங்கு நெடுங்குடைக்கீழ்
    பொழிந்தமதக் கருஞ்சுவட்டுப் பொறிமுகத்த களிறூர்ந்து
    பெருநிலம் பொதுநீக்கிப் பெயராத பெருமையாற்
    பொருகழற்கால் வயவேந்தர் போற்றிசைப்ப வீற்றிருப்பார்
    மருள்சேர்ந்த நெறிநீக்கி வாய்மைசால் குணம்தாங்கி
    அருள்சேர்ந்த அறம்புரிந்தார் அமர்ந்து

    • கொச்சகக்கலிப்பா

    கலிப்பா உறுப்புகள் முறைமாறியும், கூடியும் குறைந்தும் வருவது. உறுப்புகளுக்கேற்பத் தரவு, தரவிணை, சிஃறாழிசை, பஃறாழிசை, மயங்கிசை எனப் பெயர்பெறும் பல வகைகளையுடையது.

    தரவு கொச்சகக் கலிப்பா குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் நான்கடியாலும், சிறுபான்மை ஐந்தடி (அ) எட்டடியாலும் இது அமையும்.

    (எ.கா)

    கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ
    பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
    விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
    அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்

    • கட்டளைக் கலிப்பா

    மா விளம் விளம் விளம் என்னும் வாய்பாட்டில் ஒவ்வோர் அரையடியும் அமையும்; நான்கடிகளையுடையது; நேரசையில் தொடங்குவது பதினோரெழுத்தும், நிரையசையில் தொடங்குவது பன்னீரெழுத்தும் பெறும்; அரையடிகள் கொண்டு விளங்கும்; ஏகாரத்தின் முடியும்.

    (எ.கா)

    அன்னை எத்தனை எத்தனை அன்னையோ!
         அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ!
    பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ!
         பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ!
    முன்னை எத்தனை எத்தனை சன்மமோ!
         மூட னாயடி யேனும றிந்திலன்!
    இன்னும் எத்தனை எத்தனை சன்மமோ!
         என்செய் வேன்கச்சி ஏகம்ப நாதனே!

    - இதில் விளச்சீருக்குப் பதில் மாங்காய்ச்சீர் வந்தமைந்தது; எழுத்து எண்ணிக்கை மாறவில்லை.

    3.2.4 வஞ்சிப்பா

    வஞ்சிப்பாவின் இலக்கணத்தையும் வகைகளையும் காண்போம்.

    • வஞ்சிப்பா இலக்கணம்
    · கனிச்சீர் பயின்று வரும்; பிற சீர்களும் வரும்; சிறுபான்மை நாலசைச் சீர்களும் வருவதுண்டு.

    · வஞ்சித்தளை பயின்று வரும்; பிற தளைகளும் வரலாம்.

    · குறளடியாலோ, சிந்தடியாலோ அமையும்; அளவடியும் வருவதுண்டு.

    · தூங்கலோசை உடையது.

    · தனிச்சொல் பெற்று வரும்.

    · ஆசிரியச் சுரிதகம் கொண்டு முடிவதாக அமையும்.

    · சிற்றெல்லை மூன்றடி; பேரெல்லைக்கு வரையறையில்லை.
    • வஞ்சிப்பா வகைகள்

    வஞ்சிப்பா இருவகைப்படும். அவையாவன:

    • குறளடி வஞ்சிப்பா

    குறளடிகளால் ஆனது.

    (எ.கா)

    வளவயலிடைக் களவயின்மகிழ்
    வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
    மனைச்சிலம்பிய மணமுரசொலி
    வயற்கம்பலைக் கயலார்ப்பவும்
                    நாளும்
    மகிழும் மகிழ்தூங் கூரன்
    புகழ்த லானாப் பெருவண் மையனே

    • சிந்தடி வஞ்சிப்பா

    சிந்தடிகளால் அமைவது.

    (எ.கா)

    துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
    எயில்நடுவண் இனிதிருந் தெல்லார்க்கும்
    பயில்படுவினை பத்தியலாற் செப்பியோன்
                  புணையெனத்
    திருவுறு திருந்தடி திசைதொழ
    வெருவுறு நாற்கதி வீடுநனி எளிதே

    3.2.5 மருட்பா

    மருள் - மயக்கம்; கலத்தல். வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து அமைவது இது. வெண்பாவும் ஆசிரியப்பாவும் சமமாக அமையின் சமநிலை மருட்பா எனப்படும். வெண்பாவைவிட ஆசிரியப்பாவின் அடிகள் மிகுந்திருப்பின் ‘வியனிலை மருட்பா’ எனப்படும்.

    • மருட்பாப் பொருண்மைகள்

    · புறநிலை வாழ்த்து

    ‘வழிபடு தெய்வம் நின்னைக் காப்பதாக; நீ நீடு வாழ்க’ என்பது.

    (எ.கா)

    அரசியல் கோடா தரனடியார்ப் பேணும்
    முரசியல் தானைவேல் மன்னர் - பரசோன்
    கழலிணை பொதுவில் காப்பாக
    வழிவழி சிறந்து வாழியர் பெரிதே

    (பரசு - மழுப்படை; சிவனுக்குரியது)

    · கைக்கிளை

    ஒருமருங்கு பற்றிய காமம்.

    (எ.கா)

    பருந்தளிக்கு முத்தலைவேல் பண்ணவற்கே அன்றி
    விருந்தளிக்கும் விண்ணோர் பிறர்க்கும் - திருந்த
    வலனுயர் சிறப்பின் மன்ற வாணனக்
    குலமுனி புதல்வனுக் கீந்த
    அலைகட லாகுமிவ் வாயிழை நோக்கே

    (இது வியனிலை மருட்பாவாகும்).

    · வாயுறை வாழ்த்து

    ‘இன்று வெறுப்பளிப்பினும் பின்னர் நன்மைதரும்’ என்று உண்மைப் பொருளை வற்புறுத்தி வாழ்த்துவது.

    (எ.கா)

    வம்மின் நமரங்காள் மன்னுடையான் வார்கழல்கண்
         டுய்ம்மின் உறுதி பிறிதில்லை - மெய்ம்மொழிமற்
         றென்மொழி பிழையா தாகும்
         பின்வழி நுமக்குப் பெரும்பயன் தருமே

    · செவியறிவுறூஉ

    பெரியோர் அறிவுறுத்துவது

    (எ.கா)

    வாழ்த்துமின் தில்லை நினைமின் மணிமன்றம்
         தாழ்த்துமின் சென்னி தலைவற்கு - வீழ்த்த
         புறநெறி யாற்றா தறநெறி போற்றி
         நெறிநின் றொழுகுதிர் மன்ற
         துறையறி மாந்தர்க்குச் சூழ்கடன் இதுவே

    (இதுவும் வியனிலை மருட்பாவாகும்).

    இவ்வாறு பா வகைகள் அமைகின்றன.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1)

    நிரையசை அமைவது எவ்வாறு? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    2)

    தளை என்றால் என்ன?

    3)

    தொடை எத்தனை வகைப்படும்? இரண்டின் பெயர்களைக் கூறுக.

    4)

    கலிவெண்பாவின் அளவும் அமைப்பும் கூறுக.

    5)

    கலிப்பாவின் உறுப்புகள் எவை?

    6)

    மருட்பாவின் இலக்கணம் யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-09-2017 15:31:12(இந்திய நேரம்)