Primary tabs
-
6.0 பாட முன்னுரை
தமிழ் மொழி வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து வரும் காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும். சங்கம் மருவிய காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. அக்காலத் தமிழ் மொழியின் வரலாற்றை அறிவதற்கு, அக்காலத்தில் தோன்றிய திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்கள் தலைசிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன.
தொல்காப்பியர் காலத் தமிழிலிருந்து சங்க காலத் தமிழ் பெரும்பாலும் வேறுபடவில்லை என்பதைக் கடந்த பாடத்தில் பார்த்தோம். சங்கம் மருவிய காலத் தமிழும் சில புதிய இலக்கணக் கூறுகளையும், சில மாற்றங்களையும் பெற்றிருப்பது தவிர முழுக்க முழுக்கச் சங்க காலத் தமிழாகவே உள்ளது என்று தமிழ்மொழி வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இப்பாடத்தில், தொல்காப்பியர் காலத் தமிழிலும், சங்ககாலத் தமிழிலும் ஒத்துக் காணப்படும் இலக்கணக் கூறுகள் சங்கம் மருவிய காலத் தமிழில் எந்த அளவு நிலைபெற்றுள்ளன என்பதும் எந்த அளவு வழக்கொழிந்து அல்லது செல்வாக்கிழந்து போயின என்பதும் விளக்கமாகக் காட்டப்படுகின்றன. மேலும் சங்ககாலத் தமிழிலிருந்து, சங்கம் மருவிய காலத் தமிழ் பெற்ற பல்வேறு மாற்றங்களும் விரிவாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன.