தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியங்கள் - ஓர் அறிமுகம்

  •  

    6.1 சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியங்கள் - ஓர் அறிமுகம்

    சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய மூன்றுமாம். சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் சமயச் சார்பு அவ்வளவாக இல்லை. ஆனால் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் சமயச் சார்பு மிகுதியாகக் காணப்படுகிறது. சமயப் பொதுமை நெறி பாராட்டுபவர். ஆனாலும் அவரது காப்பியத்தில் அவர் காலத்தில் வழங்கிய சமணம், சைவம், வைணவம் ஆகிய சமயங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதைக் காணலாம். மணிமேகலையை இயற்றிய சீத்தலைச் சாத்தனார் பௌத்த சமயத்தைச் சார்ந்தவர். இவர் தமிழில் மட்டுமின்றி, வடமொழியிலும் பௌத்தர்களின் தாய்மொழியாகிய பாலிமொழியிலும் வல்லுநராக இருந்தார்.

    இவ்விரு காப்பியங்களிலும் சமயம் சார்ந்த கருத்துகள் மிகுதியாக இருப்பதால், சமயம் தொடர்பான வடமொழிச் சொற்கலப்பு அதிகமாக உள்ளது. சிலப்பதிகாரத்தை விட மணிமேகலையில் அக்கலப்பு பல மடங்கு அதிகமாக உள்ளது. பிற்காலத்தில் தோன்றிய வீரசோழியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள், வடமொழிச் சொற்கள் தமிழில் வந்து கலக்கும் போது அச்சொற்களில் உள்ள வடமொழி எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளாக மாற்றிக் கொள்வது பற்றிய ஒலிமாற்று விதிகளை உருவாக்குவதற்கு வழிகாட்டியது மணிமேகலை ஆகும்.

    சங்கம் மருவிய காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் திருக்குறள் தலைசிறந்த நீதிநூலாகும். திருக்குறள் குறிப்பிட்ட சில மொழிநடைக் கூறுகளில், சங்க கால இலக்கியங்களை விடச் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்களையே பெரிதும் ஒத்து அமைந்துள்ளது. இதனால் மொழி வரலாற்றாசிரியர்கள் சிலர் திருக்குறளைச் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூலாகவே கொள்கின்றனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 11:36:44(இந்திய நேரம்)