Primary tabs
-
அறிவற்ற செயல்களில் நம்பிக்கை கொண்டு வாழ்வது மூடநம்பிக்கை. இந்த மூட நம்பிக்கைக்கு எதிராகப் பாட்டுக்குரல் கொடுத்துள்ளார் பாரதிதாசன்.
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே(பாரதிதாசன் கவிதைகள், 42 பெண்குழந்தைத் தாலாட்டு - 8)
மூடத்தனம் மக்களிடம் தொடர்ந்து வந்து தேங்கியுள்ளது. எனவே அது முடைநாற்றம் வீசுகிறது என்று இந்தப் பாடலில் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். இந்த முடைநாற்றம் போகவேண்டும் என்றால் நம்மை விட்டு மூடத்தனம் அகலவேண்டும். அதன் பின்னர் அங்கே பகுத்தறிவு தோன்றும். இதைப் பெண் குழந்தைத் தாலாட்டில் பாரதிதாசன் பாடியுள்ளார். பெண்களிடம் காணப்படுகின்ற மூடத்தனத்தைப் பெண்களே போக்க முன்வர வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று பெண்குழந்தையை நோக்கிப் பாடியுள்ளார் பாரதிதாசன்.
பேடி என்பது ஆணும் பெண்ணும் இல்லாத மனிதனைக் குறிக்கும் சொல். இந்தப் பேடியால் மனித இனத்தை உருவாக்க இயலாது. அதுபோல் அறிவுக்குப் பொருந்தாத பேடி வழக்கங்களால் அறிவு நிறைந்த சமுதாயத்தை உருவாக்க இயலாது என்கிறார் பாரதிதாசன்.
பேடி வழக்கங்கள் மூடத்தனம் - இந்தப்
பீடைகளே இங்குச் சாத்திரங்கள்(பாரதிதாசன் கவிதைகள் 11, மாந்தோப்பில் மணம் - 9)
(பீடை = (மூடத்தனமாகிய) தீமை)
என்று மூடத்தனத்தைப் பீடைகள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மூட வழக்கங்களையே நாம் சாத்திரம் என்று போற்றுகிறோம். இவற்றைப் பின்பற்றும் சமுதாயம் எவ்வாறு புதுமைகளை ஏற்றுக் கொள்ளும்? எனவே தான், விதவைகள் மறுமணத்தைப் பெண்களே எதிர்க்கிறார்கள் என்கிறார் பாரதிதாசன்.
புற்றரவு ஒத்தது தாயர் உள்ளம் - அங்கு,
புன்னகை கொண்டது மூடத்தனம்(பாரதிதாசன் கவிதைகள், 13 காதல் குற்றவாளிகள் - 6)
கணவனை இழந்த மகள், மறுமணம் செய்து கொள்ள விரும்புவதைத் தடுக்கும் தாயின் உள்ளத்தைப் புற்றில் குடிகொண்ட பாம்பைப் போல் கொடியது என்கிறார் பாரதிதாசன்.
விதவை மணத்தை எதிர்ப்பவர்களைக் கண்டு நாம் அஞ்ச வேண்டாம். அதுவும் காதல் வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புகிறவர்கள் மூடநம்பிக்கையைக் கண்டு அஞ்ச வேண்டாம். எதிர்த்து நில்லுங்கள் என்கிறார்.
காதல் என்னும் மாமலையில் ஏறிநின்றீர்
கடுமூட வழக்கத்துக்கு அஞ்சலாமோ?(காதல் நினைவுகள். பக். 21)
என்று காதலர்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார். அச்சத்துக்கு எது காரணமாக இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பி, மடமைதான் அச்சத்தின் வேர் என்கிறார் பாரதிதாசன். அறியாமை உடையவர்களே அச்சத்தில் துன்பப்படுகிறார்கள் என்ற கருத்தை,
மடமைதான் அச்சத்தின் வேராம் - அந்த
மடமையால் விளைவதே போராம்(இசையமுது பக். 54)
என்று பாடியுள்ளார்.
மூடநம்பிக்கையை எதிர்ப்பவர்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் அவர்களால் வெற்றிப் பாதையில் செல்ல முடியும் என்று கருதிய பாரதிதாசன், இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் பாடல்களைப் பாடியுள்ளார்.
மானிடம் என்றொரு வாளும் - அதை
வசத்தில் அடைந்திட்ட உன்னிரு தோளும்
வானும் வசப்பட வைக்கும் - இதில்
வைத்திடும் நம்பிக்கை வாழ்வைப் பெருக்கும்(பாரதிதாசன் கவிதைகள், 51 மானிடசக்தி - 1)
என்று மானிட வாழ்வின் பெருமையையும் தோள் வலிமையையும் எடுத்துக் காட்டியுள்ளார் பாரதிதாசன்.
உலகில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன. இவை எவற்றிற்கும் இல்லாத சிறப்பாகிய பகுத்தறிவை மனிதன் மட்டுமே பெற்றுள்ளான். அந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நம்பிக்கை ஊட்டுகிறார் பாரதிதாசன்.
மானிடருக்கு இனிதாக - இங்கு
வாய்ந்த பகுத்தறிவாம் விழியாலே
வான்திசை எங்கணும் நீபார் - வாழ்வின்
வல்லமை ‘மானிடத்தன்மை’ என்றே தேர்(பாரதிதாசன் கவிதைகள் 51, மானிடசக்தி -3)
(தேர் = அறிந்துகொள்)
என்று நமது வாழ்க்கைக்கு மானிடத் தன்மைதான் வலிமை சேர்க்கும் என்பதை விளக்கியுள்ளார். மனிதர்களில் சிலர் தங்களை அடிமைகளாய் நினைத்துக் கொண்டு கூனிக் குறுகி வாழ்வதைக் கண்ட பாரதிதாசன் அவர்களுக்கும் நம்பிக்கை ஊட்டியுள்ளார்.
மனிதரில் நீயும்ஓர் மனிதன்; மண்அன்று
இமைதிற எழுந்து நன்றாய் எண்ணுவாய்
தோளை உயர்த்துச் சுடர்முகம் தூக்கு
மீசையை முறுக்கி மேலே ஏற்று(பாரதிதாசன் கவிதைகள் 54, உலகம் உன்னுடையது)
என்னும் பாடல் வரிகளைப் படிக்கும் ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் பகுத்தறிவுப் பாதையில் செல்வார்கள். அந்த அளவிற்கு வீரத்தைக் கலந்து பாடியுள்ளார் பாரதிதாசன்.
நம்பிக்கை வளர்ந்த நெஞ்சில் பகுத்தறிவு தோன்றும். அந்தப் பகுத்தறிவு நமது எதிர்காலத்தை வளம் உடையதாக ஆக்கும் பச்சை விளக்கு. அந்த விளக்கின் துணையுடன் பகுத்தறிவுச் சமுதாயத்தைப் படைக்கக் கருதியுள்ளார் பாரதிதாசன்.
பச்சை விளக்காகும் - உன்
பகுத்தறிவு தம்பி!
பச்சை விளக்காலே - நல்ல
பாதைபிடி தம்பி(பாரதிதாசன் கவிதைகள் - 3, ஏற்றப்பாட்டு, 77,78)
என்று இளைஞர்களுக்கு வழிகாட்டியுள்ளார். இளைஞர்கள் நடந்து செல்லும் பாதையில் மதம் என்னும் முள் படர்ந்திருக்கும். இந்த மதமாகிய முள்ளை அகற்றுவதற்குப் பகுத்தறிவுதான் துணை என்பதை,
மதமெனும் முள்ளுப் படர்ந்திருக்கும்
வழிக்கெல்லாம் பகுத்தறிவே துணை ஆகும்(தேனருவி - 103)
என்று பாரதிதாசன் பாடியுள்ளார். இவ்வாறு பாரதிதாசன் தெரிவித்த பிறகும் பகுத்தறிவைப் பின்பற்றாத மக்களைப் பார்த்து,
பாழ்படும் பழமை சூழ்வது திறமா?
பகுத்தறிவால் நலம் வகுப்பது திறமா?(பாரதிதாசன் கவிதைகள் 50, ஆய்ந்துபார் - 9)
என்று கேள்வி கேட்டு, சிந்தனையைத் தூண்டியுள்ளார். மனித சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் நாளிதழ்களும் வார இதழ்களும், மாத இதழ்களும் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புதல் வேண்டும். அவ்வாறு பரப்பாமல் மூடநம்பிக்கையைப் பரப்பும் இதழ்களால் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த இயலாது.
பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஏடுகளால்
எள்ளை அசைக்க இயலாது(பாரதிதாசன் கவிதைகள் 1, சஞ்சீவி பர்வதத்தின் சாரல். பக்.14)
(எள் = எள் என்னும் சிறிய தானியம்)
என்று ஆணித்தரமாகப் பாரதிதாசன் பாடியுள்ளார்.