தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 4.5-பொது உடைமை

  • 4.5 பொது உடைமை
     

    E

    உலக மக்கள் அனைவரும் பகுத்தறிவுடன் சிந்திக்கத் தொடங்கினால் பொது உடைமையை ஏற்றுக் கொள்வார்கள். வலியவர்கள், எளியவர்களை வாட்டும் மனப்பான்மை இல்லாமல் ஒழிய வேண்டும். வறியவன், ஏழை என்னும் நிலை மாற வேண்டும் என்று பாரதிதாசன் சிந்தித்துள்ளார். எனவே,
     


     

    எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான
    இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்

    (பாண்டியன் பரிசு, இயல் - 56)
     

    என்று பாடியுள்ளார்.

    இந்த உலகில் உள்ள பொருள்கள் எல்லாம் எல்லார்க்கும் பொது என்ற எண்ணம் எல்லாரிடமும் தோன்ற வேண்டும். அவ்வாறு தோன்றினால் ஒருவருக்கு ஒருவர் சுரண்டும் எண்ணம் தோன்றாது.
     

    நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும்
    நச்சு மனப்பான்மை
    தொல்புவி மேல் விழும் பேரிடியாம்; அது
    தூய்மைதனைப் போக்கும்!
    . . . . . . . . . . . .  . . . . .
    செல்வங்கள் யாவர்க்கும் என்றே சொல்லிப் பேரிகை
    திக்கில் முழக்கிடுவாய்

    (பாரதிதாசன் கவிதைகள், 44, பேரிகை - 3)
     

    என்னும் பாடலில் வல்லவர்களால் நல்லவர் நாடு அடிமைப்படுத்தப்படக் கூடாது; அவ்வாறு அடிமைப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றால் செல்வம் எல்லாருக்கும் பொது என்று இருக்க வேண்டும் என்கிறார்.
     

    4.5.1 பொது உடைமை உலகம்
     

    பொது உடைமையால் உருவாகும் உலகம் போர் இல்லாத புதிய உலகமாக அமையும். அந்த உலகில் அன்பு நிலைத்து இருக்கும். இது என்னுடையது என்று சேர்க்கும் குறுகிய மனப்பான்மை இல்லாமல் போகும் என்கிறார் பாரதிதாசன்.
     

    புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
    போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
    பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
    புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம்
    இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
    இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்

    (பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம்)
     

    என்று புதிய உலகு படைக்கப் பாடியுள்ளார் பாரதிதாசன்.

    புதிய புதிய பொருள்கள் பல படைக்க வேண்டும். அந்தப் பொருள்கள் அனைத்தும் பொதுநலத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற உயர்ந்த கருத்தைப் பாரதிதாசன்,
     

    புதுவினை செய்க அஃது
    பொதுநலம் ஆதல் வேண்டும்
    இதுசெய்க போர்கள் இல்லை
    இன்ப நல்லுலகைக் காண்பாய்

    (நாள்மலர்கள், பக். 134)
     

    என்று பாடியுள்ளார். இப்படிப்பட்ட தன்மை உலகில் மலர வேண்டும். அவ்வாறு மலர்ந்தால் இன்ப உலகமாக இருக்கும் என்று தெளியலாம்.
     

    4.5.2 இல்லாதவர் இல்லை
     

    பொது உடைமை உலகில் இல்லாதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். உணவு இல்லை என்றும் வாழ்வு இல்லை என்றும் யாரும் வருந்தமாட்டார்கள். சரியான நீதியும் நிலைத்திருக்கும் என்ற கருத்தைப் பாரதிதாசன்,
     


     

    தலையாகிய அறமேபுரி
    சரிநீதி உதவுவாய்
    சமமே பொருள் ஜனநாயகம்
    எனவே முரசு அறைவாய்
    இலையே உணவு இலையே கதி
    இலையே எனும் எளிமை
    இனிமேல் இலை எனவே முரசு
    அறைவாய் முரசு அறைவாய்

    (பாரதிதாசன் கவிதைகள், 64, வாளினை எடடா)
     

    என்று பாடியுள்ளார். இந்தக் கருத்தை முரசு அறைந்து எல்லாருக்கும் தெரிவிக்கும்படியாகவும் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். பகுத்தறிவாளர்கள் நிறைந்த சமுதாயம்தான் பொதுஉடைமையை நோக்கிச் செல்லும் என்னும் சிந்தனை கொண்ட பாரதிதாசன்,
     

    எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமை எலாம்
    எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே
    எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்த்திடுக
    எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக

    (பாரதிதாசன் கவிதைகள், வீரத்தாய் காட்சி - 10)
     

    என்று நாட்டு மக்கள் யாவர்க்கும் இந்தத் தேசம் பொதுவானது என்று தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் உரிமையும் உடைமையும் எல்லார்க்கும் பொதுவானது ஆகும். எல்லார்க்கும் கல்வி, சுகாதாரம் வாய்க்க வேண்டும் என்றும் எல்லாருக்கும் நல்ல இதயம் பொருந்திட வேண்டும் என்றும் பாடியுள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:51:25(இந்திய நேரம்)