44. பிடியேற்றியது
 

இதன்கண்: நகரத்தே தோன்றிய பூசலாலும் சூறைக்காற்றா லும் நீர்விழாவின்கண் கூடியிருந்த மன்னனும், மக்களும் வருந்து தலும், மன்னன் வாசவதத்தையைப் பாதுகாக்கும்படி சொல்லி விடுத்த செய்தியைத் தலைக்கீடாகக் கொண்டு உதயணகுமரன் வாசவத்தையப் பற்றிப் பிடியின் மிசையேற்றுதலும், அவளைக் கைக்கொண்டு தன்னூர்க்குப் புறப்படுதலும் பிறவும் கூறப்படும்.

 
              எரிதலைக் கொண்டாங்கு எயிலம் எரியப்
            புறமதில் சேரிப் பூசலும் ஆர்ப்பும்
            உறுநிர்ப் பெருங்கடல் உவாஉற் றாஅங்கு
            ஆகுலம் பெருகலின் அருந்துறை தோறும்
        5   போகாது ஆடுநர் புன்கண் எய்தி
            மேகலை விரீஇய தூசுவிசி அல்குல்
            நீருடை களைதல் செல்லார் கலங்கிக்
            கான்இரி மயிலின் கவின்பெற இயலி
            அயிலிடு நெடுங்கண் அரும்பனி உறைத்தர
       10    உயிர்ஏர் கணவரைத் தானை பற்றி
            நல்லது தீதென்று அறியாது அவ்வழிச்
            செல்வது பொருளோ செப்பீ ரோஎன்ற
            அல்லல் கூர அலமரு வோரும்
 
              மாக்குருக் கத்தியொடு மல்லிகை மணந்த
       15    பூப்பெரும் பந்தர் நூல்திரை வளைஇய
            கால்பெரு மாடம் காற்றொடு துளங்க
            விண்ணுலகு பெறினும் விடுத்தற்கு ஆகாப்
            பண்ணியல் பாணி நுண்ணிசை ஓர்வார்
            ஊரக வரைப்பிண் ஒல்லென எழுந்ததோர்
       20    பூசலுண்டு எனலும் பொறைஉயர் மாமலை
            வேய்உயர் பிறங்கல் சேயுயர்ந்து ஓடும்
            சூருறு மஞ்ஞையின் சோர்ந்த கூந்தலர்
            புதல்வரை யொழிந்துயாம் போந்தன மேதுஎன
            அதிவனர் நடுங்கி அழலின் உயிர்த்துத்
       25    திதலை னவ்வயிஅறு அங்கையின் அதுக்கி
            உதிர்பூங் கொம்பின் ஒடுங்கு வோரும்
 
              குட்டம் ஆடிக் குளிர்ந்த வருத்தம்
            அட்டுப்பத மாக அறிந்தோர் அமைத்த
            மட்டுமகழ்ந்து உண்ணும் மாந்தர் அவ்வழிப்
       30    பட்டது என்னெனப் பசும்பொனின் இயன்ற
            வட்ட வள்ளம் விட்டுஎறிந்து விதும்பி
            எழுந்த கம்பற்கு இயைந்துசெல் வோரை
            அழிந்தது இல்லை அறிந்தோம் யாமென
            மொழிந்துஇடை விலங்கி முன்நிற் போரும்
 
         35    கம்மப் பல்கலம் விம்மப் பெய்த
            பொறியமை பேழையொடு பூந்துகில் தழீஇக்
            குறிவயின் நின்ற குறள்வயின் நோக்கார்
            சோரும் கூந்தலர் வாரும் கண்ணினர்
            ஆரும் துன்பமொடு ஊர்வயின் நோக்கி
       40    வீழ்பூங் கொடியின் விரைந்துசெல் வோரும்
 
              பழிப்பின்று புனைந்த பட்டுஅணைப் படுகால்
            கழிப்பட மாடம் காலொடு துளங்க
            விழிப்பில் மேனிதம் இன்னுயிர் விடுமென
            வேகப் புள்ளின் வெவ்விசை கேட்ட
       45    நாக மகளிரின் நடுங்கு வோரும்
 
              ஓடுவிசை வெங்காற்று உருமொடு ஊர்தரப்
            பாடல் தண்ணுமைப் பாணியில் பிழையாது
            ஆடல் மகளிர் அரங்கம் புல்லெனச்
            சுவைசோர்ந்து அழிய நவைகூர்ந்து நடுங்கி
       50    மஞ்சிடைப் புகூஉம் மகளிர் போலத்தம்
            கஞ்சிகை எழினியில் கரந்துநிற் போரும்
 
              நடுங்கு வோரும் நவைஉறு வோரும்
            ஒடுங்கு வோரும் ஒல்கு வோரும்
            இனையர் ஆகத்தம் புனைநலம் புல்என
       55    நங்கையும் சேயள்நம் இறைவனும் நண்ணான்
            என்கொல் ஈண்டுநம் இன்னுயிர்த் துணையென
            மங்கையர் எல்லாம் மம்மர் எய்தக்
 
              கணிகை இரும்பிடி அணிநலம் நசைஇயப்
            பிடியொடு போந்த பெருங்களிற்று ஒருத்தலை
       60    வீரிய இளையர் வாரியுள் வளைஇ
            மதந்தலை நெருங்கி மதக்களிறு வலியாக்
            கதந்தலை அழியக் கந்தொடு ஆர்த்துச்
            சாம கீத ஓசையில் தணிக்கும்
            நூல்அறி பாகரொடு மேலறிவு கொள்ளாது
       65    இகழ்ச்சியின் விட்ட இறைவன் போல
            மகிழ்ச்சி எய்தி மணிமுடி வேந்தன்
            வத்தவர் இறைவனை விட்டனன் உழிதரல்
            நீதி அன்று நெறியுணர் வோர்க்குஎன
            ஒதியல் ஆளர் உடலுநர் உழிதரப்
 
         70    பௌவம் எல்லாம் படரும் ஈண்டெனக்
            கௌவை வேந்தனுங் காற்றொலிம் அஞ்சி
            யானையின் அருஞ்சிறை வளைஇ அதனுள்நம்
            சேனையும் உரிமையும் செறிக வந்தெனப்
            பிறிதில் தீரா நெறியினன் ஆகக்
 
         75    காற்றொடு கலந்த கார்முழக்கு இன்னிசை
            மாற்றுக்களிற்று எதிர்வென மறித்தன மயங்கி
            அந்தப் போதிகை இடைபரிந்து அழியக்
            கந்துமுதல் கிழித்துக் காரென உரறி
            மேலியன் முறைவர் நூலியல் ஓசை
       80    எஃகெறிந்து என்ன வெஃகறு செவிய
            அடக்கவும் அடங்காப் புதுக்கோள் யானை
            வால்வளை மகளிரொடு மைந்தரை உழக்கி
            ஏர்இருங் குலிகப் புனல்பரந்து இழிதரும்
            காரிருங் குன்றின் கவின்பெறத் தோன்றக்
 
         85    கொன்னே சிதைந்து கோவின் குறிப்புடன்
            நகரி முழக்கினும் மிகையெழு தீயினும்
            அளவில் ஆர்ப்பினும் அருந்தளை பரிந்து
            கடலென அதிர்ந்து காரெனத் தோன்றி
            விடலரும் சீற்றமொடு வேறுபட நோக்கிக்
       90    களமெனக் கருதிக் கனன்ற உள்ளமொடு
            நளகிரிக் கூற்றம் நகரம் உழக்க
            எதிர்எழு வோரை அதிர நூறி
            வத்தவர் கோமான் வயவர் திரிதர
            எத்திசை மருங்கினும் உட்குவரத் தோன்றிய
       95    இன்னாக் காலை ஒன்னா மன்னனும்
 
              தன்ஆண் தொழில்துணிவு எண்ணும் ஆயினும்
            செறியக் கொள்ளும் செய்கை ஓரான்
            அறியக் கூறிய வன்பினண் அல்லதைத்
            தன்வயின் நின்றுதன் இன்னியம் கொள்ளும்
      100    என்மகள் உள்வழி இளையரொடு ஓடிக்
            காவல் இன்றுதன் கடன்எனக் கூரி
            மத்தவன் மான்தேர் வத்தவற்கு உரையெனப்
 
              பாய்மான் றானைப் பரந்த செல்வத்துக்
            கோமான் பணித்த குறைமற்று இதுவென
      105    ஏவல் இளையர் இசைத்த மாற்றம்
            சேதியர் பெருமான் செவியில் கேட்டு
            விசும்புமுதல் கலங்கி வீழினும் வீழ்க
            கலங்க வேண்டா காவல்என் கடன்எனக்
            காற்றிற்கு உலையாக் கடும்பிடி கடைஇ
      110    ஆற்றுத்துறை குறுகிய அண்ணலைக் கண்டே
 
              காவல் மாக்களும் காஞ்சுகி முதியரும்
            ஏவல் இளையரும் எதிர்எழுந்து ஓடி
            மாடமும் கடையும் மதில்புறச் சேரியும்
            ஓடெரி கவரலின் ஊர்புகல் ஆகாது
      115    வையமும் சிவிகையும் கைபுனை ஊர்தியும்
            காற்றுப்பொறி கலக்க வீற்றுவீற்று ஆயின
            போக்கிடம் எங்கட்குப் புணர்க்கல் ஆகாது
            ஆக்கிடம் எமக்கும்உண் டாக அருளி
            ஆய்ந்த நல்யாழ்த் தீஞ்சுவை உணர்ந்தநின்
      120    மாணாக் கியையெம் மன்னவன் அருளால்
            இரும்பிடி நின்னொடு ஒருங்குடன் ஏற்றிக்
            கொடுக்குவ வேண்டும்என்று எடுத்துஎடுத்து ஏத்தி
            அருந்திறல் காவலர் அச்சம் எய்திப்
            பெருந்திறல் மன்னர்க்குப் பணிந்தனர் உரைப்ப
 
        125    எவ்வாய் அமரும் இன்மொழிக் கிளவி
            அவ்வாய் மங்கலம் ஆகென விரும்பிக்
            கவ்வையும் பெருகிற்று உய்தலும் அரிதே
            இவ்வழி மற்றிவள் நிற்றலும் ஏதம்
            வருக ஈண்டென வத்தவன் வலிப்பத்
 
        130    தவாஅக் காதலொடு தகையாழ் காட்டும்
            உவாத்தி ஆதலின் உறுதியும் அதுவெனச்
            செய்கையின் அறியாச் சிதைவிற் றாகிக்
            கௌவை எரியும் காற்றினொடு எழுந்தது
            அரிமான் அன்னநம் பெருமான் சேரத்
      135    திருமா நூதலியைத் தீதொடு வாராது
            உதயண குமரன் ஒருபிடி ஏற்றிப்
            போவது பொருளெனக் காவலர் இரப்பப்
 
              பெரியோர்க்கு உதவிய சிறுநன்று எய்ப்பக்
            கரவாது பெருகிக் கைஇகந்து விளங்கும்
      140    உள்ளத்து உவகை தெள்ளிதின் அடக்கி
            மதர்வை வண்டொடு சுரும்புமணந்து ஆடும்
            குயில்பூங் கோதையொடு குழல்குரல் வணரும்
            கயில்எருத் திறைஞ்சிக் கால்நிலம் கிளைஇ
            உருகு நெஞ்சத்து உதயண குமரனைப்
      145    பருகும் வேட்கையள் பையுள் கூர
            நிறையும் நாணும் நிரந்துமுன் விலங்க
            நெஞ்சு நேர்ந்தும் வாய்நேர்ந்து உரையா
            அஞ்சில் ஒதியை நெஞ்சு வலியுறப்
 
              பயிற்சி நோக்கின் இயற்கையின் திரியாக்
      150    காஞ்சன மாலை கையிசைந்து ஒருங்கே
            ஏந்தினள் ஏற்ற இரும்பிடி இரீஇ
            முடியா ஆள்வினை முடித்தனம் இன்றென
            வடியேர் தடம்கண் வாளென மிளிரும்
            கொடியேர் சாயலைக் குடங்கையில் தழீஇப்
      155    பிடியேற் றினன்ஆல் பெருந்தகை உவந்தென்.