Primary tabs
- 2.4 காப்பியமும் விவிலியமும்
தேம்பாவணிக் காப்பியத்தை ஆழ்ந்து கற்பவர்கள், இந்நூல் விவிலியத் திருமறைச் செய்திகளை, சூசையப்பர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, காப்பியப் போக்கில் உரைக்க எழுந்ததே என எளிதில் உணரலாம். அந்த அளவுக்குத் தேம்பாவணி, விவிலியத் திருமறையின் சாரமாக விளங்குகிறது. காப்பியம் முழுவதும் விவிலிய மறையின் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு எனும் இரு பிரிவுகளிலும் அமைந்துள்ள வரலாற்றுக் கதைகளும், உண்மைகளும் பல முறைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர், பல இடங்களில் விவிலியத் திருமறையை விதித்த நுண் அருநூல் வேதம் (கடவுள் வகுத்த நுட்பமான அரிய நூல்), திவ்வியநூல் (தெய்வீக நூல்), பரமன் அருளிய சுருதிநூல் (கடவுள் கொடுத்த திருமறை நூல்) என்றெல்லாம் பாராட்டுகிறார். திருமறைக் கருத்துகளை அம்மறையைப் பின்பற்றுபவர்கள் ஆழமாக உணர்ந்து கொள்ளவும் பிறசமயத்தினரும் தெரிந்து கொள்ளவுமே தேம்பாவணி படைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட திருமறை விளக்கங்களே நூலில் நிறைந்து காணப்படுகின்றன. சில சான்றுகளைக் காண்போம்.
விவிலியத்தில் இடம்பெறும் வரலாற்றுக் கதைகள் தேம்பாவணிக் காப்பியத்தில் பல நிலைகளில் எடுத்துரைக்கப்படுகின்றன. விவிலியக் கதைகள், தக்க நேரத்தில் உண்மைகளை வெளிப்படுத்தி, காப்பிய மாந்தரை ஊக்குவிப்பதற்காகவே காப்பியத்தில் கிளைக்கதைகளாக எடுத்துரைக்கப் படுகின்றன. சான்றாக, ஏரோது அரசனுக்குப் பயந்து தெய்வக்குழந்தையை ஊர்விட்டு ஊர் எடுத்துச்செல்ல வேண்டியநிலை, சூசைக்கும் மரிக்கும் மனச்சோர்வைத் தருகிறது. அப்போது உடன் வரும் வானவர்கள் இறைவனின் பேராற்றலையும் இறைநீதியின் பெருவன்மையையும் விவிலியக் கதைகள் வழியாக அவர்களுக்கு எடுத்துரைக்கின்றனர்.
● மோயீசன் கதைஎகித்து அரசன் பாரவோன் இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இசுரவேலரைப் பலவாறு கொடுமை செய்தான். மக்கள் அல்லற்பட்டு அழுதனர். அப்போது இறைவன் அவர்கள் கூக்குரலைக் கேட்டு, மோயீசன் என்னும் ஒரு தலைவனை உருவாக்கினார். அவன் கையில் ஒரு கோலையும் தமது ஆற்றலையும் வழங்கினார். எனினும் பாரவோன் மன்னன் இசுரயேல் மக்களை நாட்டை விட்டு வெளியே விடவில்லை. அரசனைப் பணியவைக்க, இறைவன் அவர்களுக்கு வெப்பமிக்க இரத்தம், தவளை, உண்ணிகள், ஆலங்கட்டிமழை, செறிந்த இருள் முதலிய ஒன்பது துன்பங்களையும் இறுதியில் பத்தாவதாக எகித்தியரின் தலைப்பிள்ளைகளின் இறப்பையும் கட்டளையிட்டார். பிறகுதான் பாரவோன் மன்னன் அவர்களை விடுவித்தான். இந்த வரலாற்றை விரித்துரைத்து வானவர்கள், திருக்குடும்பத்தினருக்கு ஊக்கமூட்டுகின்றனர்.
● சேதையோன் கதைமேலும் வானவர்கள், சேதையோன் என்ற மாவீரனின் வெற்றி வரலாற்றைச் சூசைக்கு விளக்கிக் கூறுகின்றனர். சேதையோன் ஓர் உழவன். மிக்க வீரம் படைத்தவன். இறைவன் தனது யூத மக்களைப் பகைவர்களிடமிருந்து மீட்க, சேதையோனைப் படைத்தளபதியாகத் தேர்ந்து கொண்டார். இதனை இறைத்தூதன் ஒருவன் மூலம் சொல்லி அனுப்பினார். முதலில் இறைத்தூதனின் அழைப்பை ஐயுற்ற சேதையோன், பின்னர் இறைக்கட்டளையை ஏற்றுக் கொண்டு, தன் யூத மக்களை ஒன்று திரட்டினான். பகையரசரும் ஒன்று திரண்டனர். அவர்களது படையின் பெருக்கமோ அளவிட முடியாதவை. எனினும் இறைவன் செய்த திருவிளையாடலால் சேதையோனுக்கும் அவன் பின்னின்ற யூதருக்குமே வெற்றி கிட்டியது. 32,000 வீரரைத் திரட்டினான். இதனைக் கண்ட இறைவன் 'யான் வெல்வதற்கு இவ்வளவு படை தேவையா?' என எண்ணினார். "போருக்கு அஞ்சுவோர் நீங்கிச் சினம்மிக்க வீரர் மட்டும் நிற்பாராக” எனக் கட்டளையிட்டார். அவருள் 10,000 பேர் நின்றனர். மீண்டும் இறைவன் "ஆற்றின் நீரை நாவால் நக்கி உண்போர் நீங்க, கையால் அள்ளிப் பருகுவோர் நிற்க" என்று கட்டளையிடவும், 3000 பேர் அணி வகுத்தனர். எதனையும் திருவிளையாடலாக நடத்தும் தேவன் போருக்குரிய வேல் எதுவும் இன்றி, ஒவ்வொருவருக்கும் ஓர் எக்காளம், ஒரு மண்பானை, ஒரு விளக்கு ஆகியவற்றைக் கொடுக்குமாறு கூறினார். மூன்று அணியாகப் பிரிந்து பகைவரின் இடத்திற்கு ஓசையின்றிச் சென்றனர். தீபத்தை மறைக்கப் பானையைப் பயன்படுத்தினர். பகைவரிடம் சென்று எக்காள ஒலி எழுப்பிப் பானைகளை உடைத்ததும், திடுக்கிட்டெழுந்த பகைவர் தடுமாறினர். தங்களைத் தாங்களே பகைவரெனக் கருதி, தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொண்டு, தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர்.
● யோசேப்பு கதைஇவ்வாறே, சித்திரக்கூடப் படலத்தில், சூசை முனிவர்களுக்கு விளக்கிக் கூறிய யோசேப்பு எனப்படும் ஆணரன் என்பவனின் வரலாறு, நம் உள்ளத்தைக் கவரும் நல்ல கதையாகும். ஆணரன் தன் சொந்த சகோதரர்களாலேயே பகைக்கப்பட்டான்; துன்புறுத்தப்பட்டான். எனினும் அவனது உண்மை, நேர்மை, தூய்மை, இறைப்பற்று முதலியவற்றால் உயர்நிலையை அடைந்தான். இறுதியில் தன்னைப் பகைத்து அழிக்க முயன்ற சகோதரர்களையே காப்பாற்றும் இறைத் தொண்டன் ஆனான் அந்த ஆணரன்.
இவ்வாறு பல்வேறு கிளைக்கதைகளாக, விவிலியக் கதைகள் காப்பியத்தில் வெளிப்படுகின்றன. அவையெல்லாம் இறைவனின் அளவிட முடியாத கருணையை எடுத்துக்காட்ட விளக்கப்பட்டன.
விவிலியக் கதைகள் மட்டுமன்று, விவிலிய உண்மைகள், கொள்கைகள், கோட்பாடுகள் முதலியனவும் காப்பியத்தில் நன்கு விளக்கப் பெறுகின்றன. சான்றாக விவிலியத் திருமறையின் வழிநின்று, இறைவனின் இயல்புகளைக் காப்பிய ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். சூசையின் வாய்மொழியாக, இறைவனின் ஆறு பண்புகளை எடுத்தியம்பும் பாடல் இதோ:
தன்வயத்த னாதல், முதலில னாதல்,
தகும்பொறி உருவில னாதல்
மன்வயத் தெல்லா நலமுள னாதல்,
வயின்தொறும் வியாபக னாதல்
பின்வயத் தின்றி ஒருங்குடன் அனைத்தும்
பிறப்பித்த காரண னாதல்
பொன்வயத் தொளிர்வான் முதலெலா உலகும்
போற்றுமெய் இறைமையின் நிலையே(ஞாபகப் படலம், 157)
(தன்வயத்தனாதல் - தானே தனித்து இயங்குதல்; முதலிலனாதல் - தொடக்கம் இல்லாதவன் ஆதல்; பொறி உருவிலனாதல் - வடிவம் இல்லாதவன் ஆதல்; வயின் தொறும் - எல்லா இடத்திலும்; வியாபகன் ஆதல் - பரவிஇருத்தல்)
இதே செய்தியைத் தன்நேரில்லான் தன் வயனாகி என வரும் இன்னொரு பாடலிலும் மீண்டும் கூறி, கற்பார் நெஞ்சில் இந்த உண்மையைப் பதிய வைக்கிறார்.
● பத்துக்கட்டளைகள்மேலும் விவிலிய மறையில் இறைவன் மனிதகுலம் அனைத்துக்கும் வழிகாட்டியாக, சட்ட விதிகளாக, மோயீசன் வழியாக வழங்கியருளிய பத்துக் கட்டளைகளை முனிவர் எடுத்துரைக்கிறார். இரு கல்லில் அமைந்த பத்துக் கட்டளைகளையும் கவிஞர் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்:
மின்னல்லால் நிகர்ப்பரிதோர்
எழுத்துத் தீட்டி விதித்திருகல்
என்னல்லால் இறைமையுளார்
உமக்கில் லாவீர் எனைமெய்மை
தன்னல்லால் சாட்சிவையீர்
திருநாள் ஆடித் தவிர்கில்லீர்
மன்னல்லா ரணமிதென்று
ஒருகல் கொள்முவ் வாசகமே
தந்தையாயை வணங்குமின்நீர்
கொலையே செய்யீர் தவிர்காம
நிந்தையாய் ஊடுஇல்லீர்
கரவீர் பொய்யீர் நிலைப்பிறரில்
சிந்தையாய் இரீர்பிறர்கைப்
பொருளை வெஃகீர் தீங்கிதென்று
எந்தையாய்ந் திரண்டாங்கல்
தீட்டி வைத்த ஏழ்விதியே
(சீனயிமா மலைகாண் படலம், 21,22)
(மின்னல்லால் - மின்னலைத் தவிர; திருநாள் - பரிசுத்தமான நாள்; ஒருகல் - முதல் கற்பலகை; மன்னல்லாரணம் - காமநிந்தை, தீயஒழுக்கத்தால் வரும் பழி; கரவீர் - ஏமாற்ற வேண்டாம்; வெஃகீர் - விரும்பவேண்டாம்; இரண்டாங்கல் - இரண்டாம் கற்பலகை)
இவ்விரு பாடல்களிலும் குறிக்கப்பட்டுள்ள பத்துக் கட்டளைகள் பின்வருமாறு:
1.
என்னைத் தவிரத் தெய்வங்கள் ஒருவரும் உமக்கு இல்லை என்று கொள்ளக் கடவீர்.
2.
உண்மைக்கே அன்றிப் பொய்மைக்கு ஆணையிட்டு என்னைச் சாட்சியாக வையாதீர்.
3.
குறிக்கப்பட்ட திருநாட்களை முறைப்படி கொண்டாடத் தவறாதீர்.
4.
தந்தையையும் தாயையும் வணங்குவீர்.
5.
கொலையே செய்யாதீர்.
6.
தவிர்க்கத்தக்க காமம் பழிப்புக்கு உரியதெனக் கொண்டு அதனோடு உறவாடாதீர்.
7.
களவு செய்யாதீர்.
8.
பொய் சொல்லாதீர்.
9.
பிறர் மனைவி மீது சிந்தையே கொள்ளாதீர்.
10.
பிறர் கைப்பொருளை விரும்பாதீர்.
● திருச்சிலுவையின் சிறப்புஇயேசு பெருமான் மனிதகுலத்தின் உயர்வுக்காக உயிர் நீத்த திருச்சிலுவை, கிறித்தவ நம்பிக்கைக்கு ஆதாரமான அடிப்படையாக விளங்குகிறது. தாம் உயிர்விடப் போகும் சிலுவையைப் பற்றித் திருமகன் தாமே வருணித்துப் பாடும் பாடல் ஒன்றைக் கவிஞர் காப்பியத்தில் அமைக்கிறார்.
ஏரணியே! என்னன்பே! என்னன்பிற்கு இரதமிதே!
சீரணியே! உயர்வீட்டைத் திறக்கும் கோலிதே!இன்பத்து
ஆரணியே! எங்கணும்நான் ஆண்டு ஓச்சும் செங்கோலே!
பேரணியே! எனதுயிரின் பேருயிரே! வாழியவே!(மீட்சிப்படலம், 30:119)
(ஆரணி - அருமையான ஆபரணமே, ஓச்சும் - ஆட்சி செலுத்தும்)
என்ற இப்பாடலில் வீரமாமுனிவரின் சிலுவைப் பற்றும் வெளிப்படுகிறது. எவ்வாறெல்லாம் இயேசு சிலுவையை நோக்குகிறார் என இப்பாடலில் தெளிவுபடுத்துகிறார். இவ்வாறு பல்வேறு விவிலியக் கோட்பாடுகளையும் உண்மைகளையும் காப்பியத்தில் அமைத்துள்ளார் கவிஞர்.