தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    சிறந்த இலக்கியங்கள் பலவற்றின் கருவூலமாக விளங்கும் தமிழுக்குக் கிறித்தவ சமயம் வழங்கியுள்ள இலக்கியக் கொடைகள் பலவாகும். அவற்றுள்ளும் காப்பியங்களின் வரிசையில் அமைவன பல. அத்தகு கிறித்தவக் காப்பியங்களுள் எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை இயற்றிய இரட்சணிய யாத்திரிகமும், வீரமாமுனிவர் படைத்த தேம்பாவணியும் பற்றி முன்னைய இரு பாடங்களிலும் விரிவாக விளக்கப்பட்டன. பலரும் நன்கறிந்த இவ்விரு காப்பியங்களே அன்றி, வேறு சில கிறித்தவக் காப்பியங்களும் உள்ளன. அவற்றைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ளலாமா?

    சுகாத்தியர் (Scot) எழுதிய சுவிசேட புராணம், ஜான் பால்மர் எழுதிய கிறிஸ்தாயணம், சாமிநாத பிள்ளை எழுதிய ஞானாதிக்க ராயர் காப்பியம், ஈழத்துப்பூராடனார் எழுதிய இயேசு புராணம், அருளப்பர் நாவலர் எழுதிய திருச்செல்வர் காவியம், கனகசபைப் பிள்ளை எழுதிய திருவாக்குப் புராணம், மாணிக்கவாசகம் ஆசீர்வாதம் எழுதிய திரு அவதாரம், சங்கைஸ்தொஷ் ஐயர் எழுதிய கிறிஸ்து மான்மியம், ஆரோக்கியசாமி எழுதிய சுடர்மணி, கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம் ஆகிய நூல்களும் கிறித்தவக் காப்பியங்களாக, கிறித்தவ இலக்கிய ஆய்வாளர்களால் சுட்டப்படுகின்றன. எனினும், இவற்றுள் பல நூல்கள் இப்போது அச்சில் இல்லை. பல நூல்கள் கிடைப்பதற்கு அரியனவாக உள்ளன.

    மேற்சுட்டப்பட்ட நூல்களில் திருவாக்குப் புராணம், திரு அவதாரம், கிறிஸ்து மான்மியம், சுடர்மணி, இயேசு காவியம் ஆகிய ஐந்து காப்பியங்களைப் பற்றிய செய்திகளை இப்பாடத்தில் தொகுத்துக் காண்போம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 12:24:06(இந்திய நேரம்)