தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.3 இரண்டாம் வேற்றுமையும் அதன் பொருள்களும்

  • 5.3 இரண்டாம் வேற்றுமையும் அதன் பொருள்களும்

    இரண்டாம் வேற்றுமையின் உருபு என்பது மட்டுமே. இதன் பொருள் தன்னை ஏற்ற பெயர்ப்பொருளை ஆக்கப்படு பொருளாகவும், அழிக்கப்படு பொருளாகவும், அடையப்படு பொருளாகவும் இவை போல்வன பிறவாகவும் வேற்றுமை செய்வதாகும். ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமையாகும். எனவே இது செயப்படுபொருள் வேற்றுமை எனவும் கூறப்படும். செயப்படுபொருளாக வேறுபடுத்தப் பெயர்ச்சொல்லின் இறுதியில் ‘ஐ’ என்னும் உருபு வந்து சேரும். இதன் பொருள் செயப்படுபொருள் ஆகும்.

    எடுத்துக்காட்டு

    குடத்தை வனைந்தான்
    - ஆக்கப்படுபொருள் (உருவாக்குதல்)
    கோட்டையை இடித்தான்
    - அழிக்கப்படும் பொருள்
    காட்டை அடைந்தான்
    - அடையப்படுபொருள்
    வீட்டைத் துறந்தான்
    - துறக்கப்படுபொருள் (விட்டு
    விலகுதல்)
    புலியைப் போன்றான்
    - ஒத்தல் பொருள் (ஒப்புமை)
    பொன்னை உடையான்
    - உடைமைப் பொருள்

    செயப்படுபொருள், செய்பொருள், கருமம், காரியம் என்பன ஒரே பொருளைத் தருவன.

    வினைமுதல் (எழுவாய்) செய்யும் தொழிலின் பயனை ஏற்பது எதுவோ அது செயப்படுபொருள் எனப்படும்.

    வாக்கியத்தில், (சொற்றொடரில்) கருத்தை முடிக்கும் சொல் பயனிலை ஆகும். பயனிலையைக் கொண்டு, யாரை, எதை, எவற்றை என்ற கேள்விகளில் பொருத்தமான ஒன்றைக் கேட்டால் அதற்கு வரும் விடை செயப்படுபொருள் ஆகும்.

    இரண்டாவதன் உருபு ஐயே ; அதன் பொருள்
    ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல்
    ஒத்தல் உடைமை ஆதி ஆகும்

    (நன்னூல் : 296)


    கோடிட்ட இடத்தை நிரப்புக.

    1.

    பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது ---------- எனப்படும்.

    2.

    இரண்டாம் வேற்றுமை உருபு ------- ஆகும்.

    3.
    வளவன் ------- (வினைப் பயனிலை ஆக்குக)
    4.
    வளவன் -------- (வினாப் பயனிலை ஆக்குக)
    5.
    வளவன் --------- (பெயர்ப் பயனிலை ஆக்குக.)
    6.
    கண்ணன் வந்தான் -------- (வினாப் பயனிலை ஆக்குக.)

    கோடிட்ட இடங்களில் பொருத்தமான செயப்படு பொருள்களை அமைத்து எழுதுக.

    7.
    கண்ணன் ------- கற்றான்.
    8.
    இராமன் -------- அடைந்தான்.
    9.
    பாண்டியன் ------- அழித்தான்.
    10.
    இளங்கோ அண்ணனுக்காக ------ துறந்தார்.
    11.

    புகழ்ந்தாரைப் போற்றி வாழ். (இதில் வந்துள்ள வேற்றுமை உருபை எடுத்து எழுதுக.)

    12.
    முதல் வேற்றுமையாவது யாது?
    13.
    வேற்றுமை என்றால் என்ன? விளக்குக.
    14.

    இரண்டாம் வேற்றுமைக்கு உருபு என்ன? பொருள் என்ன?

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 13:23:21(இந்திய நேரம்)