Primary tabs
5.1 எச்சம் - விளக்கம்
(1)எச்சம் என்பது, தன் அளவில் பொருள் முற்றுப் பெறாததாய் இருக்கும்.(2)பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ கொண்டு முடிவதாய் அமையும்.(3)காலம் காட்டும் செயலை உணர்த்தும்.(4)திணை, பால், எண், இடம் உணர்த்தாது.(5)வினைப்பகுதியைக் கொண்டிருக்கும், எச்சத்திற்கு உரிய விகுதியைப் பெற்றிருக்கும்.
(எ.கா)(1)பெயர்ச்சொல் கொண்டு முடிவன :வந்த பையன்உண்ட குதிரை(2)வினைச்சொல் கொண்டு முடிவன:உண்டு வந்தான்ஓடி வந்தது5.1.1 எச்சமும் முற்றும்
பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியும் ‘உண்ட’ என்னும் எச்சச் சொல்லை, ‘உண்+ட்+அ’ எனப் பிரிப்பர். இதில் உள்ள ‘அ’ என்னும் விகுதியைக் கொண்டு, திணை, பால், எண், இடங்களை அறிய இயலாது. அடுத்து வரும் பெயர்ச் சொல்லைக் கொண்டே பொருள் முழுமை பெறும்.
வினைச் சொல்லைக் கொண்டு முடியும் ‘உண்டு’ என்னும் எச்சச் சொல்லை, ‘உண்+ட்+உ’ எனப் பிரிப்பர். இதில் உள்ள ‘உ’ என்னும் விகுதியைக் கொண்டு, திணை, பால், எண், இடங்களை அறிய இயலாது. அடுத்து வரும் வினைச் சொல்லைக் கொண்டே பொருள் முழுமை பெறும்.
வினைமுற்றுச் சொல்லாகிய ‘உண்டான்’ என்பதை, ‘உண்+ட்+ஆன்’ எனப் பிரிப்பர். இதிலுள்ள ‘ஆன்’ என்னும் விகுதியைக் கொண்டு, உயர்திணை, படர்க்கை, ஆண்பால், ஒருமை என அனைத்தையும் அறிகின்றோம்.
எனவே, பொருள் எஞ்சி நிற்பது எச்சம் எனவும், பொருள் முற்றுப்பெற்று நிற்பது முற்று எனவும் அழைக்கப்பட்டன.
5.1.2 எச்ச வகைகள்
எச்சம் இரு வகைகளில் முடியும் என்று கண்டோம். அவற்றுடன், பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியும் எச்சம், பெயரெச்சம் எனப்படும். வினைச் சொல்லைக் கொண்டு முடியும் எச்சம், வினையெச்சம் எனப்படும்.
(எ.கா)பெயரெச்சம்- உண்ட பையன்வினையெச்சம்- உண்டு வந்தான்