Primary tabs
-
3.6 தொகுப்புரை
இதுவரை பல்ஊடகங்களில் தமிழ்மொழி கையாளப்படும் முறையைக் கண்டோம். அவற்றைத் தொகுத்து இங்கே காண்போம்.
• ஊடகங்கள் மொழியைக் கவனமாகப் பயன்படுத்தினால்தான் கூறவரும் கருத்து கேட்போரைச் சென்று சேரும்.
• பத்திரிகைத் தமிழில் தந்தை பெரியார் முதன் முதலில் ஆடம்பரம் அற்ற தமிழைப் பயன்படுத்திக் கருத்து இதழியலை வளர்த்தார்.
• திரு.வி.க. எளிய சிறுசிறு தொடர்களைப் பயன்படுத்தித் திருப்புமுனையாக அமைந்தார்.
• சி.பா. ஆதித்தனார் கொச்சை நீக்கி எழுதப்பட்ட பேச்சு வழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்தார். கடின நடையை எதிர்த்தார்.
• இன்றைய நாளிதழ்களில் செந்தமிழிலும் அல்லாமல், பல்வகை மொழிக் கலப்பும் இல்லாமல், இயல்பான மொழியில் எளிய நடையில் ஒரு கட்டுரை அமையும் முறைபோலக் கட்டுரை இயல்பு மொழி பயன்படுத்தப் படுகிறது.
• கவர்ச்சி மொழியும் உண்டு. பேச்சு மொழிப் பயன்பாடு, ஆங்கில மொழிக் கலப்பு, குறிப்பிட்ட ஆயத்தச் சொற்கள், சொற்றொடர்கள் பயன்பாடு, குறியீடு, பழமொழி, மரபுத் தொடர் கலப்பு, வட்டாரப் படுத்தி எழுதுதல் போன்றவை கவர்ச்சி மொழி உருவாக்கத்தில் முக்கியமானவை.
• வானொலி மொழியில் மொழி, ஒலி, உச்சரிப்புத் திறன் முதலியவற்றிற்குப் பங்கு அதிகம்.
• தொலைக்காட்சி மொழியில் பேச்சு மொழி முக்கியத்துவம் பெறுகிறது. ஆனாலும் ஆங்கில மொழிச் சொற்கலப்பு அதிகமாக இடம் பெறுவது பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. செய்திகள் எல்லாருக்கும் புரியும் வகையில் பொதுத் தமி்ழில் அமைகின்றன.
• திரைப்பட மொழி செந்தமிழில் ஆரம்பித்து, கடின நடை உடையதாகிப் பின்னர் சமூகக் கதைகளைச் சொல்ல ஆரம்பித்த போது பேச்சுத் தமிழுக்கு மாறி மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து வந்ததைக் காண்கிறோம்.