Primary tabs
2.2 பொதுப்புணர்ச்சி விதி
உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும், குற்றியலுகரத்தையும் இறுதியாகக் கொண்ட நிலைமொழிகளின் முன்னர் மெல்லின மெய்களையும், இடையின மெய்களையும் முதலாகக் கொண்ட வரு மொழிகள் வந்து புணரும் முறை பற்றி மூன்று பொது விதிகளை நன்னூலார் உயிரீற்றுப் புணரியலின் தொடக்கத்தில் கூறுகிறார். அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சான்றுகளுடன் காண்போம்.
1. மொழிக்கு இறுதியில் வரும் எனக் கூறப்பட்ட இருபத்து நான்கு எழுத்துகளையும் ஈற்றில் கொண்ட எல்லா வகையான நிலைமொழிகளுக்கும் முன்னே, ஞ, ந, ம, வ, ய என்னும் ஐந்து மெய் எழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகள் வந்து சேரும்போது, அவ்வெழுத்துகள் அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் பொருளிலும் இயல்பாகவே வரும்.
சான்று :
அல்வழி
இள + ஞாயிறு = இளஞாயிறு
(அ முன் ஞகரமெய் இயல்பாக வந்தது)தென்னை + நீண்டது = தென்னை நீண்டது
(ஐ முன் நகரமெய் இயல்பாக வந்தது)பூ + மலர்ந்தது = பூ மலர்ந்தது
(ஊ முன் மகரமெய் இயல்பாக வந்தது)மரம் + வளர்ந்தது = மரம் வளர்ந்தது
(மகரமெய் முன் வகரமெய் இயல்பாக வந்தது)எஃகு + யாது = எஃகு யாது
(குற்றியலுகரம் முன் யகரமெய் இயல்பாக வந்தது)இங்கே காட்டப்பட்ட சான்றுகளில் இளஞாயிறு - பண்புத்தொகை; மற்றவை எழுவாய்த் தொடர்.
வேற்றுமை
ஒளி + ஞாயிறு = ஒளிஞாயிறு
(ஒளியை உடைய ஞாயிறு. இரண்டாம் வேற்றுமைத் தொகை)தென்னை + நீட்சி = தென்னை நீட்சி
(தென்னையினது நீட்சி. ஆறாம் வேற்றுமைத் தொகை)மனை + மாட்சி = மனைமாட்சி
(மனையினது மாட்சி. ஆறாம் வேற்றுமைத் தொகை)எஃகு + வாள் = எஃகுவாள்
(எஃகால் ஆன வாள். மூன்றாம் வேற்றுமைத் தொகை)கல் + யானை = கல்யானை
(கல்லால் ஆன யானை. மூன்றாம் வேற்றுமைத் தொகை)2. தனிக்குறிலை அடுத்து யகரமெய் அமையும் சொல், ஓர் எழுத்து ஒரு மொழியாக வரும் ஐகாரமாகிய சொல், நொ,து என்னும் ஓர் எழுத்துச்சொற்கள் நிலைமொழிகளாக இருந்து அவற்றிற்கு முன்னே ‘ஞ,ந,ம’ என்னும் மெல்லின மெய் எழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகள் வந்து சேரும்போது, அவ்வெழுத்துகள் அல்வழியிலும், வேற்றுமையிலும் மிகும்.
தனிக்குறிலை அடுத்து யகர மெய் வரும் சொல் மெய், பொய், நெய் என்பன. ஓர் எழுத்து ஒருமொழியாகிய ஐகாரச் சொல் கை, பை, தை, மை என்பன. இவை வழக்கில் உள்ளவை. நொ, து ஆகிய சொற்கள் வழக்கிழந்து போனவை. நொ = துன்பப்படு; து = உண்.
சான்று :
அல்வழி
மெய் + ஞான்றது = மெய்ஞ்ஞான்றது
மெய் + நீண்டது = மெய்ந்நீண்டது
மெய் + மாண்டது = மெய்ம்மாண்டதுகை + ஞான்றது = கைஞ்ஞான்றது
கை + நீண்டது = கைந்நீண்டது
கை + மாண்டது = கைம்மாண்டதுஇவை எழுவாய்த் தொடர்
நொ + நாகா = நொந்நாகா
து + நாகா = துந்நாகாஇவை வினைமுற்றுத் தொடர்
(ஞான்றது = தொங்கியது; மாண்டது = சிறந்தது; நொந்நாகா = துன்பப்படு நாகனே; துந்நாகா = உண்பாய் நாகனே.)
வேற்றுமை
மெய் + ஞாற்சி = மெய்ஞ்ஞாற்சி (மெய்யினது ஞாற்சி)
மெய் + நீட்சி = மெய்ந்நீட்சி (மெய்யினது நீட்சி)
மெய் + மாட்சி = மெய்ம்மாட்சி (மெய்யினது மாட்சி)இவை ஆறாம் வேற்றுமைத் தொகை
கை + ஞாண் = கைஞ்ஞாண் (கையின்கண் ஞாண்)
கை + நீளம் = கைந்நீளம் (கையினது நீளம்)
கை + மலர் = கைம்மலர் (கையின்கண் மலர்)இவற்றில், கைஞ்ஞாண், கைம்மலர் - ஏழாம் வேற்றுமைத் தொகை; கைந்நீளம் - ஆறாம் வேற்றுமைத் தொகை. (ஞாற்சி = தொங்கல்; மெய் = உடம்பு, உண்மை; மாட்சி = சிறப்பு; ஞாண் = கயிறு.)
3. ‘ண, ள, ன, ல’ என்னும் மெய்களை இறுதியாகக் கொண்ட நிலைமொழிகளின் முன்னே, நகர மெய்யை முதலாகக் கொண்ட வருமொழிகள் வந்து புணரும்போது, வருமொழியின் முதலில் உள்ள நகரமெய் அல்வழி, வேற்றுமை என்னும் இருபொருளிலும் வேறொரு மெய்யாகத் திரியும்.
சான்று :
அல்வழி
மண் + நீண்டது
= மண்ணீண்டதுமுள் + நீண்டது
= முண்ணீண்டதுபொன் + நீண்டது
= பொன்னீண்டதுகல் + நீண்டது= கன்னீண்டதுஇவை எழுவாய்த் தொடர்
வேற்றுமை
மண் + நீட்சி
= மண்ணீட்சி(மண்ணினது நீட்சி)முள் + நீட்சி
= முண்ணீட்சி(முள்ளினது நீட்சி)பொன் + நீட்சி= பொன்னீட்சி(பொன்னினது நீட்சி)கல் + நீட்சி= கன்னீட்சி(கல்லினது நீட்சி)இவை ஆறாம் வேற்றுமைத் தொகை
இங்கே காட்டிய சான்றுகளில் ண, ள முன்னர் வந்த நகர மெய் ணகர மெய்யாகவும், ன,ல முன்னர் வந்த நகர மெய் னகர மெய்யாகவும் அல்வழி, வேற்றுமை ஆகிய இரு பொருள்களிலும் திரிந்தமை காணலாம்.
மேலே கூறிய மூன்று பொதுப்புணர்ச்சி விதிகளை நன்னூலார் பின்வரும் நூற்பாவில் ஒரு சேரக் குறிப்பிடுகிறார்.
எண்மூ எழுத்து ஈற்று எவ்வகை மொழிக்கும்
முன்வரு ஞநமய வக்கள் இயல்பும்;
குறில்வழி யத்தனி ஐந்நொது முன்மெலி
மிகலுமாம்; ணளனல வழிநத் திரியும். - (நன்னூல்,158)(எண்மூ எழுத்து - இருபத்துநான்கு எழுத்து; எவ்வகை மொழிக்கும் -பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல், திசைச்சொல், வடசொல் என்னும் பலவகைப்பட்ட சொற்களுக்கும்.)
இந்நூற்பாவில் கூறப்படும் பொதுப்புணர்ச்சி அல்வழி, வேற்றுமை ஆகிய இரு பொருளிலும் நிகழும் என்று நன்னூலார் எங்கும் கூறவில்லை. புணர்ச்சி பற்றிக் கூறும் நூற்பாக்களில் இதுபோல, அல்வழி, வேற்றுமை இரண்டனுள் ஒன்றை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ கூறாத இடங்களில் எல்லாம் அவ்விரண்டையும் கொள்ள வேண்டும் என்று நன்னூல் உரையாசிரியர் கூறுகின்றனர். எனவே இந்நூற்பாவில் கூறப்பட்ட பொது விதிகளுக்குச் சான்றுகள் அல்வழி, வேற்றுமை இரண்டிற்கும் காட்டப்பட்டன.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I