Primary tabs
2.5 முன்னிலை வினை, ஏவல் வினை முன் வல்லினம்
உயிர் எழுத்துகளையும் ய,ர,ழ என்னும் மூன்று மெய் எழுத்துகளையும் இறுதியாகக் கொண்ட முன்னிலை வினைமுற்று, ஏவல் வினைமுற்று ஆகியவற்றின் முன்னர் வரும் க, ச, த, ப என்னும் வல்லின மெய் எழுத்துகள் இயல்பாயும், விகற்பமாயும் வரும்.
ஆவி யரழ இறுதி முன்னிலை வினை,
ஏவல் முன் வல்லினம் இயல்பொடு விகற்பே (நன்னூல்,161)விகற்பமாய் வருதலாவது, ஒரே புணர்ச்சியில் வல்லினம் இயல்பாகவும், மிக்கும் வருதலாகும். சான்றாக, கீழ்+குலம் என்பது கீழ்குலம் என இயல்பாகவும், கீழ்க்குலம் என வருமொழி முதல் எழுத்துக்கு ஏற்ற வல்லினம் மிக்கும் வருவதைச் சொல்லலாம். இதனை,
கீழின்முன் வன்மை விகற்பமும் ஆகும். (நன்னூல்,226)
என்ற நூற்பாவால் அறியலாம்.
சான்று :
முன்னிலை வினைமுற்று
உண்டனை + கொற்றா = உண்டனை கொற்றா
உண்டாய் + சாத்தா = உண்டாய் சாத்தா
உண்பாய் + தம்பி = உண்பாய் தம்பி
உண்டனீர் + புலவரே = உண்டனீர் புலவரேஏவல் வினைமுற்று
வா + கொற்றா = வா கொற்றா
பாய் + சாத்தா = பாய் சாத்தா
சேர் + தேவா = சேர் தேவா
வாழ் + புலவா = வாழ் புலவாஇங்கே காட்டிய சான்றுகளில் உயிர் எழுத்துகளையும், ய, ர, ழ என்னும் மெய் எழுத்துகளையும் இறுதியாகக் கொண்ட முன்னிலை வினைமுற்று, ஏவல்வினை முற்றுகளின் முன் வந்த க, ச, த, ப என்னும் வல்லின மெய் எழுத்துகள் மிகாது இயல்பாய் வந்தன.
நட + கொற்றா = நட கொற்றா, நடக்கொற்றா
எய் + கொற்றா = எய் கொற்றா, எய்க் கொற்றாஇங்கே காட்டிய சான்றுகளில் முன்னிலை வினைமுற்றின் முன்வரும் வல்லினம் இயல்பாகவும், மிக்கும் வந்தது.