தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முன்னிலை வினை, ஏவல் வினை முன் வல்லினம்

  • 2.5 முன்னிலை வினை, ஏவல் வினை முன் வல்லினம்

    உயிர் எழுத்துகளையும் ய,ர,ழ என்னும் மூன்று மெய் எழுத்துகளையும் இறுதியாகக் கொண்ட முன்னிலை வினைமுற்று, ஏவல் வினைமுற்று ஆகியவற்றின் முன்னர் வரும் க, ச, த, ப என்னும் வல்லின மெய் எழுத்துகள் இயல்பாயும், விகற்பமாயும் வரும்.

    ஆவி யரழ இறுதி முன்னிலை வினை,
    ஏவல் முன் வல்லினம் இயல்பொடு விகற்பே
    (நன்னூல்,161)

    விகற்பமாய் வருதலாவது, ஒரே புணர்ச்சியில் வல்லினம் இயல்பாகவும், மிக்கும் வருதலாகும். சான்றாக, கீழ்+குலம் என்பது கீழ்குலம் என இயல்பாகவும், கீழ்க்குலம் என வருமொழி முதல் எழுத்துக்கு ஏற்ற வல்லினம் மிக்கும் வருவதைச் சொல்லலாம். இதனை,

    கீழின்முன் வன்மை விகற்பமும் ஆகும்.         (நன்னூல்,226)

    என்ற நூற்பாவால் அறியலாம்.

    சான்று :

    முன்னிலை வினைமுற்று

    உண்டனை + கொற்றா = உண்டனை கொற்றா
    உண்டாய் + சாத்தா = உண்டாய் சாத்தா
    உண்பாய் + தம்பி = உண்பாய் தம்பி
    உண்டனீர் + புலவரே = உண்டனீர் புலவரே

    ஏவல் வினைமுற்று

    வா + கொற்றா = வா கொற்றா
    பாய் + சாத்தா = பாய் சாத்தா
    சேர் + தேவா = சேர் தேவா
    வாழ் + புலவா = வாழ் புலவா

    இங்கே காட்டிய சான்றுகளில் உயிர் எழுத்துகளையும், ய, ர, ழ என்னும் மெய் எழுத்துகளையும் இறுதியாகக் கொண்ட முன்னிலை வினைமுற்று, ஏவல்வினை முற்றுகளின் முன் வந்த க, ச, த, ப என்னும் வல்லின மெய் எழுத்துகள் மிகாது இயல்பாய் வந்தன.

    நட + கொற்றா = நட கொற்றா, நடக்கொற்றா
    எய் + கொற்றா = எய் கொற்றா, எய்க் கொற்றா

    இங்கே காட்டிய சான்றுகளில் முன்னிலை வினைமுற்றின் முன்வரும் வல்லினம் இயல்பாகவும், மிக்கும் வந்தது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-08-2017 17:36:15(இந்திய நேரம்)