தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வைதருப்பம் - இன்பம்

  • 4.6 வைதருப்பம் - இன்பம்

    சொற்களின் வகையாலும் மற்றும் அதன் பொருளின் வகையாலும் சுவைபடச் சொல்வது ‘இன்பம்’ என்னும் குணப்பாங்கு ஆகும்.

    இன்பம் - இனிமையுடையது.

    சொல்லினும் பொருளினும் சுவைபடல் இன்பம்
    (தண்டியலங்காரம் : 19)

    என்பது தண்டியலங்காரம். எனவே, செய்யுளில் இடம்பெறும் இன்பத்தைச் சொல்லின்பம், பொருளின்பம் என இருவகைப்படுத்தலாம்.

    4.6.1 சொல்லின்பம்

    எதுகை, மோனை, சிலேடை, மடக்கு, முரண், வந்தசொல்லே வருதல் ஆகிய நிலைகளில் சொல்லின்பம் அமையும்.

    எதுகை

    இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ஆகும். எதுகையழகு சொல்லின்பம் தரும்.

    சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்துசும் மாஇருக்கும்
    ல்லையுள் செல்ல எனைவிட் டவா! இகல் வேலன்நல்
    கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக்
                         கொவ்வைச் செவ்வாய்
    ல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள்அண்ணல் வல்லபமே
    (கந்தர் அலங்காரம் : 10)

    (இகல்வேலன் = தீமைக்குப் பகையான வேலினையுடைவன்
    கொல்லி = ஒருவகைப் பண்
    சொல்லி = வள்ளி
    வல்லி = கொடி
    வல்லபம் = திறமை
    புல்லுதல்
    = அணைத்தல்)

    இப்பாடலில் முதலடியில் 1, 2, 3 சீர்களிலும், இரண்டாம் அடியில் 1, 2 சீர்களிலும், மூன்றாம் அடியில் 1, 3, 4 சீர்களிலும், நான்காம் அடியில் 1, 2, 5 சீர்களிலும் லகர ஒற்று எதுகையாய் அமைந்து இன்பம் பயக்கின்றது.

    ‘வலிமையான வேலுடைய முருகப் பெருமான், சொல்ல இயலாத எல்லையில் சும்மா இருக்கும் அனுபவ எல்லையில் என்னைச் சேர்த்தார். கொல்லிப் பண்ணை ஒத்த வள்ளியம்மையாகிய கொவ்வைப் பழமொத்த செவ்வாயினையுடைய கொடியை அணைக்கின்ற பெரிய தோளாகிய மலையினையுடைய அப்பெருமானின் வல்லபத்தை என்னென்பேன்’ என்பது பொருளாகும்.

    மோனை

    முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத் தொடை ஆகும்.

    முன்னைத்தம் சிற்றில் முழங்க கடல்ஓதம்
        மூழ்கிப் போக
    ன்னைக்கு உரைப்பன் றிவாய் கடலேஎன்று
        லறிப் பேரும்
    ன்மை மடவார் ளர்ந்துஉகுந்த வெண்முத்தம்
        யங்கு கானல்
    புன்னை அரும்புஏய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும்
        புகாரே எம்மூர்

    (சிற்றில் = மணலால் ஆன சிறுவீடு
    பேரும் = பெயரும், திரும்பும்
    உகுத்தல்
    = உதிர்த்தல்
    தயங்குதல்
    = விளங்குதல்
    கானல் = பொழில்
    ஏய்ப்ப = ஒப்ப
    பேதுறுத்தல்
    = மயக்குதல்)

    இப்பாடலில் அடிதோறும் 1, 3, 5-ஆம் சீர்கள் மோனை அமைந்துள்ளது. ஓரடியில் இடையிட்டு வரும் மோனை வழிமோனை எனப்படும். இவ்வாறு வழிமோனை அமைந்து திகழ்கின்றது.

    ‘சிறுமிகள் குழுமிக் கடற்கரையில் மணலால் சிறு வீடு கட்டி விளையாட, கடல் அலை வந்து அவ்வீடுகளைக் கரைத்து அழிக்க, அவர்கள் எம் அன்னையரிடம் உன்னைப் பற்றி உரைப்போம் எனக் கடலிடம் சினம் கொண்டு கூறித் தம் கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையை அறுத்துதிர்த்த முத்துகள், கடற்கரையின் புன்னை அரும்புகளைப் போல் காட்சியளித்துக் காண்போரை மயக்கிக் குழம்பச் செய்யும் காவிரிப்பூம்பட்டினமே எம் ஊர் ஆகும்.’ என்பது இப்பாடலின் பொருளாகும்.

    சிலேடை

    சிலேடை என்பது ஒரு சொல் அல்லது சொற்றொடர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள் தருமாறு அமைவதாகும்.

    பாம்புக்கும் எலுமிச்சம் பழத்துக்கும் சிலேடையாகக் காளமேகப் புலவர் பாடிய பாடலாவது :

    பெரியவிட மேசேரும் பித்தர்முடி ஏறும்
    அரியுண்ணும் உப்புமே லாடும் - எரிகுணமாம்
    தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில்
    பாம்பும்எலு மிச்சம் பழம்
    (காளமேகம் : 52)

    பாம்பு :

    1)
    பெரிய விடமே சேரும் -
    மிகுதியான விடத்தை உடையதாயிருக்கும்.
    2)
    பித்தர்முடி ஏறும் -
    பித்தராகிய சிவபெருமானின் திருமுடிமேல் விளங்கும்.
    3)
    அரி உண்ணும் -
    காற்றைப் புசிக்கும்.
    4)
    உப்பும் மலோடும் -
    உடலை உப்பிக் கொள்ளும் ; மலோகத் தலைதூக்கி ஆடும்.
    5)
    எரிகுணமாம் -
    சினமுடைய குணத்தினதும் ஆகும்.

    எலுமிச்சம்பழம் :

    1)
    பெரிய இடமே சேரும்
    -
    பெரியவர்களிடத்திலே கொடுக்கப்பட்டுச் சேர்ந்திருக்கும்.
    2)
    பித்தர் முடிமேல் இருக்கும்
    -
    பித்துடையவர்களின் தலையில் தேய்க்கப்பட்டுப் பித்து தீர்க்கும் மருந்தாகும்.
    3)
    அரி உண்ணும்
    -
    அரியப்படும்.
    4)
    உப்பு மலோடும்
    -
    உப்பிட்டு ஊறுகாய் ஆக்கப்படும்.
    5)
    எரிகுணமாம்
    -
    சாறுபட்டால் எரிச்சல் தரும் குணம் உடையது ஆகும்.

    திருமலைராயனின், தேன் பொழிகின்ற சோலைகள் சூழ்ந்த திருமலையில் பாம்பும் எலுமிச்சம் பழமும் ஒப்பாகும்.

    மடக்கு

    ஒரு முறை வந்த சொல்லோ சொற்றொடரோ மீண்டும் வந்து வேறொரு பொருள் தருவது மடக்கு எனப்படும்.

    மாலை அருளாது வஞ்சியான் வஞ்சியான்
    மேலை அமரர் கடைவேலை வேலை
    வளையார் திரைமேல் வருமன்ன மன்ன
    இளையாள் இவளை வளை

    (வஞ்சியான் = வஞ்சிநாட்டுச் சேரன், வஞ்சிக்க மாட்டான்
    வேலை
    = பொழுது,
    வரும் அன்னம் அன்ன
    = வரும் அன்னம் போன்ற
    இவளை வளை
    = இவளது அழகிய வளையல்கள்)

    ‘முன்பு பாற்கடல் கடைந்த போது, சங்கு நிறைந்த அலையமைந்த நீர்நிலையில் வந்த அன்னம் போன்ற இளையவள் இத்தலைவி. இவளது அழகிய வளையலை, தன் மாலையைத் தராதவனாகச் சேரன் வஞ்சித்துவிட மாட்டான்’ என்பது இப்பாடலின் பொருள்.

    வஞ்சியான், வேலை, மன்ன, வளை என்பனவாகிய சொற்கள் மடங்கி வந்து வெவ்வேறு பொருள் தந்தன.

    முரண்

    முரண்பட்ட சொற்களமைய வருவது முரண் அணி. இவ்வணி பாடலில் அமைந்து சொல்லின்பம் பயக்கும்.

    காலையும் மாலையும் கைகூப்பிக் கால்தொழுதால்
    மேலை வினையெல்லாம் கீழவாம் - கோலக்
    கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப்
    பெருமானைச் சிற்றம் பலத்து

    இப்பாடலில் காலை, மாலை ; கை, கால் ; மேலை, கீழ்; கருமை, வெண்மை, செம்மை, பசுமை; பெருமான், சிற்றம்பலம் என்பன தம்முள் முரண்பட வந்துள்ளன.

    அழகிய கரிய யானைத் தோலையும், வெண்மையான திருநீற்றையும் சிவந்த திருமேனியையும், பசிய கொன்றை மாலையையும் உடைய சிவபெருமானைச் சிற்றம்பலம் சென்று காலைமாலை வேளைகளில் கைகூப்பித் திருவடிகளைத் தொழுதவர்களுக்கு முற்பிறவி வினைகள் எல்லாம் கீழ்ப்பட்டு நீங்கிவிடும் என்பது பாடலின் பொருளாகும்.

    ஒரே சொல் பயின்று வருதல்

    ஒரு செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் இடம்பெறுதல்.

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு
    (திருக்குறள் : 350)

    ‘எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறி என்று மனத்துக் கொள்க; விடாது வந்த பற்று விடுவதற்குப் பற்றுக் கொண்டு அதன்கண் உபாயத்தை அம்மனத்தால் செய்க’ என்பது பரிமேலழகர் உரை.

    இவ்வாறு ‘பற்று’ என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து, இன்பம் பயக்கின்றது.

    சொல்லின்பம் இவ்வாறு பலவகைகளில் அமைகிறது.

    4.6.2 பொருளின்பம்

    சிறந்த பொருளின்பம் தரும் செய்யுள்கள் தமிழில் பல உள்ளன. கற்பனை நயத்துடன் கூடியதாக்ச் சிவப்பிரகாச சுவாமிகள் பாடும் பாடல் ஒன்று பின்வருமாறு :

    சான்று: 1

    கையன்று தாமரை கண்ணன்று இளமென் கயல்எனவே
    பொய்யன்று கங்கையை நீர்என்று சாதிப்பர் போர்விடையார்
    மெய்யென்று நீகொண் டிரேல்அறல் ஆயின்என் மென்கையிடைப்
    பெய்யென்று பின்னை அறிவாய்தென் குன்றைப் பெரியம்மையே
    (பெரிய நாயகியம்மை கட்டளைக் கலித்துறை : 4)

    [கயல் = மீன்
    போர்விடையார் = சிவபெருமான்
    அறல் = ஆற்று மணல்
    குன்றை = திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)]

    ‘பெரியநாயகியம்மையே! பழமலைநாதர் தம் தலையில் செஞ்சடையில் கங்கையாகிய பெண்ணை வைத்துள்ளார். உன்னிடம் அங்கிருப்பது பெண் அன்று ; நீர் (ஆறு) என்று கூறுவார். நீ அதனை நம்பிவிடாதே! கங்கைக்குக் கை காணப்படுகிறதே என நீ கேட்டால் அது கை இல்லை தாமரை என்பார். அதோ அவள் கண் உள்ளதே என்றால் அது கண்இல்லை மீன் என்று சாதிப்பார். கூந்தலை நீ இது ஏது எனக் கேட்டால் அது பாசியென்று கூறினும் கூறுவார் ஆதலால் என் கையில் அவ்வறல்நீரைப் பெய்வாயாக என்று கேள். அதற்கு அடுத்து அங்கிருப்பது நீர்நிலை அன்று; கங்கையாகிய பெண் என்னும் உண்மையை உணர்வாய்’ என்பது இப்பாடலின் பொருளாகும்.

    உவமை, உருவகம் என வரும் தன்மையைப் புராணக் கதையுடன் இயைத்து நயம்பட உரைத்த பொருள்நலம் உணர்ந்து மகிழத்தக்கது.

    கௌடநெறியும் இவ்வாறே சொல்லின்பம், பொருளின்பம் குறித்து ஒத்த கருத்துடையதாக விளங்குகின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 10:25:08(இந்திய நேரம்)