தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - D04126-பெயரடையின் வளர்ச்சி வரலாறு

  • 6.4 பெயரடையின் வளர்ச்சி வரலாறு

    பண்பு அடிச்சொல்லோடு பெயரடை விகுதியாகிய என்பது சேர்ந்து பெயரடைகள் தமிழில் உருவாகின்றன. இவை பெயர்ச்சொற்களுக்கு முன்னர் வந்து அப்பெயர்ச்சொற்களின் பொருளைச் சிறப்பிக்கின்றன அல்லது விளக்குகின்றன.

    சான்று :

    நல்ல பையன்

    இத்தொடரில் நல்ல என்பது பெயரடை. இது பையன் என்ற பெயருக்கு முன் வந்து, அவனுடைய பண்புகளைச் சிறப்பிக்கிறது. எனவே நல்ல என்பது பெயரடை ஆகும். நல்ல பையன் என்பதை ஆங்கிலத்தில் good boy என்று கூறுவர். எனவே ஆங்கிலத்தில் good என்பது பெயரடை (Adjective) எனப்படும்.

    இத்தகைய பெயரடைகள் சங்க காலந்தொட்டுத் தற்காலம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிய நூல்களில் வழங்கிவருகின்றன.

    6.4.1 சங்க காலத்தில் பெயரடைகள்

    சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் பெயரடைகள் காணப்படுகின்றன. நல் (நன்மை), சிறு (சிறுமை), பெரு (பெருமை), அரு (அருமை) முதலான பண்பு அடிச்சொற்கள் என்னும் பெயரடை விகுதியுடன் சேர்ந்து நல்ல, சிறிய, பெரிய, அரிய போன்ற பண்பு அடைகளாகி, பெயர்ச்சொற்களுக்கு முன்னர் வந்து அச்சொற்களின் பொருளைச் சிறப்பிக்கின்றன.

    சான்று :

  • நல்ல
  •  

    நல்ல பெருந் தோளேயே (நற்றிணை, 13 :5)

     

    (நல்ல பெரிய தோள்களை உடையவளே)

  • பெரிய
  • பெரிய
    கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை
    (அகநானூறு, 8
    :5-6)

      

    (பெரிய ஆண்பன்றியைக் கொன்ற பிளந்த வாயினை உடைய ஆண் புலி. கேழல் - ஆண்பன்றி ; ஏற்றை - ஆண்புலி)

  • சிறிய
  • துறைவன் எம்
    சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே
    (நற்றிணை, 388
    : 9-10)

      

    (தலைவன் எம்முடைய சிறிய உள்ளத்தினின்று நீங்குதலை அறியாதவன். துறைவன் = நெய்தல் நிலத் தலைவன்)

  • அரிய
  • அரிய கானம் சென்றோர்க்கு (குறுந்தொகை, 77 : 5)

    (கடத்தற்கு அருமை உடைய காட்டில் என்னைப் பிரிந்து சென்ற தலைவர்க்கு)

    நல்ல, பெரிய, சிறிய, அரிய போன்ற சொல் வடிவங்கள், சங்க இலக்கியங்களில் மேலே கூறப்பட்டதுபோலப் பெயரடைகளாக மட்டுமன்றி, வினைமுற்றுகளாகவும் பெயர்களாகவும் வழங்கின.

    அவை வந்த

    அவை சென்ற

    போன்ற தொடர்களில் வரும் வந்தன, சென்றன என்ற வினைமுற்றுகளின் இறுதியில் வரும் என்னும் விகுதி பன்மையைக் காட்டுகிறது.

    சி

    என்னும் பெயர்ச்சொற்களின் இறுதியில் உள்ள என்பது பன்மையைக் காட்டுகிறது.

    எனவே நல் என்னும் பண்பு அடியோடு சேர்ந்து நல்ல என்பது,

    1. ஒரு பெயரோடு சேர்ந்து அதற்கு முன்னர் வரும்போது பெயரடையாக வரும். இதனைத் தமிழிலக்கண நூலார் ‘குறிப்புப் பெயரெச்சம்’ என்பர்.

    2. ஒரு சொற்றொடரின் முடிவில், அத்தொடரின் பொருளை முற்றுவித்து (முடியச்செய்து) வரும்போது, வினைமுற்றாக வரும். இதனைத் தமிழ் இலக்கண நூலார் ‘குறிப்பு வினைமுற்று’ என்பர்.

    3. ஒரு வினைச்சொல்லுக்கு முன்னால் வரும்போது பெயராக வரும். இதனைத் தமிழ் இலக்கண நூலார் ‘குறிப்பு வினையால் அணையும் பெயர்’ என்பர்.

    நல்ல என்னும் சொல் வடிவம் இம்மூன்று நிலைகளிலும் வருவதைச் சங்க இலக்கியத்தில் காணலாம்.

  • நல்ல - பெயரடை
  • சான்று :

    நல்ல பெருந்தோ ளோயே (நற்றிணை, 13 : 5)

    இங்கே நல்ல என்பது, பெருந்தோள் என்னும் பெயர் கொண்டு முடிந்திருப்பதால் பெயரடை ஆகும்.

  • நல்ல - வினைமுற்று
  • சான்று :

    அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே
    (ஐங்குறுநூறு, 193
    : 4)

    (ஒலிக்கின்ற கடலில் உள்ள வெண்மையான சங்கால் செய்யப்பட்ட வளைகள் நல்லனவோ?)

    ஈண்டு நல்ல என்பது நல்லன என்ற வினைமுற்றுப் பொருளில் வந்திருப்பதால் வினைமுற்று ஆகும்.

  • நல்ல - பெயர்
  • சான்று :

    கல்உயர் நனந்தலை நல்ல கூறி
    (குறுந்தொகை, 297
    : 5)

    (மலைகள் ஓங்கி உயர்ந்த அகன்ற இடத்தில் தலைவர் நல்ல சொற்களைக் கூறி)

    இங்கே நல்ல என்பது, நல்ல சொற்கள் என்ற பெயராக வந்திருப்பது காணலாம்.

    6.4.2 இடைக்காலத்தில் பெயரடைகள்

    இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் பெயரடைகள் அதிக அளவில் வழங்கின. இனிய, வல்ல, நல்ல, சிறிய, பெரிய, எளிய போன்ற பெயரடைகள் வழங்கின.

  • இனிய
  • இனிய தென் தமிழ்நாடு சென்று எய்தினார்
    (கம்பராமாயணம், 4751 4)

  • வல்ல

    வல்ல மந்திரியரோடு (கம்பராமாயணம், 4451 : 1)

  • (அறிவிலும் சூழ்ச்சித்திறத்திலும் வல்ல அமைச்சரோடு)

  • சிறிய
  • சிறிய என்ஆருயிர் உண்ட திருவருளே
    (நாலாயிர திவ்வியப் பிரபந்தம், 3722 : 4)

  • பெரிய

    நாவலம் பெரிய தீவினில் வாழும்
    (நாலாயிர திவ்வியப் பிரபந்தம், 274
    : 1)

  • நல்ல
  • நல்ல சொல் வல்லீர்
    (கம்பராமாயணம், 4802
    : 3-4)

  • எளிய
  • எளிய எம்பெருமான்
    (நாலாயிர திவ்வியப் பிரபந்தம், 2807 : 2)

     

    சங்க காலத்தைப் போலவே இனிய, சிறிய, பெரிய என்பன போன்ற சொற்கள் பெயரடை, வினைமுற்று, பெயர் என்னும் மூன்று நிலைகளிலும் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் வழங்குகின்றன. சான்றாக இனிய என்ற சொல் இம்மூன்று நிலைகளில் வழங்குவதைக் காண்போம்.

  • இனிய - பெயரடை
  • யாதினும் இனிய நண்ப ! இருத்திஈண்டு எம்மொடு
    என்றான்
    (கம்பராமாயணம், 2060 :
    4)

      

    இங்கே இனிய என்பது, நண்பனே என்னும் பெயர்கொண்டு
    முடிந்திருப்பதால் பெயரடை ஆகும்.

  • இனிய - வினைமுற்று
  • பொன் நகரத்தினும் பொலம்கொள் நாகர்தம்
    தொல் நகரத்தினும் தொடர்ந்த மாநிலத்து
    எந் நகரத்தினும் இனிய
    (கம்பராமாயணம், 3462
    : 1-3)

      

    (இந்திரனின் பொன் அமராவதி நகரத்தைக் காட்டிலும் நாகர் உலகத்தில் உள்ள பழைய நகரத்தைக் காட்டிலும் உலகில் உள்ள எல்லா நகரங்களைக் காட்டிலும் எம் இலங்கை மாநகரம் இனியது.)

    இங்கே இனிய என்பது, தொடரின் பொருளை முற்றுவித்து நிற்பதால் வினைமுற்று ஆகும்.

  • இனிய - பெயர்
  • இருக்க என இருந்தபின் இனிய கூறலும்
    (கம்பராமாயணம், 221
    : 2)

      

    (இனிய கூறலும் - இனிய சொற்களைக் கூறலும்)

    இங்கே இனிய என்பது, இனிய சொற்கள் என்று பெயராக வந்து நிற்பது காணலாம்.

    6.4.3 தற்காலத்தில் பெயரடைகள்

    தற்காலத்தமிழில் பெயரடைகளின் எண்ணிக்கையும் அவற்றின் ஆட்சியும் மிக அதிகம். ஆங்கிலச் சொல்பாகுபாட்டில் பெயரடை (Adjective) என்ற ஒரு தனிப்பிரிவு வகுக்கப்பட்டது போலத் தற்காலத்தில் தமிழ்ச்சொல் பாகுபாட்டிலும் பெயரடை என்பது மொழியியலாரால் ஒரு தனிப் பிரிவாகக் கொள்ளப்பட்டது.

    சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் நல்ல, இனிய, பெரிய, சிறிய போன்ற சொற்கள் மூன்று நிலைகளில் வழங்கலாயின எனப் பார்த்தோம். ஆனால் தற்காலத்தில் அச்சொற்கள் பெயரடை என்ற ஒரு நிலையில் மட்டுமே வழங்கி வருகின்றன. அச்சொற்கள் வினைமுற்றாகவும் பெயராகவும் வழங்கிவந்த பழைய நிலை முற்றிலும் வழக்கிழந்தது. எனவே, தற்காலத்தில் பண்படியுடன் - என்ற ஒட்டு (பெயரெச்ச விகுதி) சேர்த்துப் பெயரடையாக வழங்குகின்ற முறை மட்டுமே உள்ளது.

    சான்று :

    நல்ல பையன்

    இனிய புதல்வன்

    பெரிய நாடு

    சிறிய வீடு

    மொழியியலார் தற்காலத்தமிழில் வழங்கும் பெயரடைகளைத் தனிப்பெயரடை (Simple adjective) எனவும், ஆக்கப் பெயரடை (Derived adjectives) எனவும் இருவகையாகப் பிரித்து விளக்கிக் காட்டுகிறார்கள்.

  • தனிப்பெயரடை
  • பண்பு அடிச்சொல்லோடு என்னும் விகுதி சேர்ந்து வருகின்ற பெயரடைகள் எல்லாம் தனிப்பெயரடைகள் என்று கூறப்படும்.

    சான்று :

    நல்ல பையன்

    கெட்ட பழக்கம்

    தீய ஒழுக்கம்

    பழைய பாடல்

    புதிய நட்பு

    சிறிய உள்ளம்

    பெரிய வீடு

    இத்தகைய பெயரடைகளையே ஆங்கிலத்தில் ‘Adjectives என்று கூறுகின்றனர்.

  • ஆக்கப் பெயரடை
  • பெயர்ச்சொற்களுடன் ஆன என்னும் ஆக்க விகுதியைச் சேர்ப்பதால் தற்காலத்தமிழில் எண்ணற்ற பெயரடைகள் உருவாக்கப்படுகின்றன. அழகு, மோசம், உயரம், குட்டை, வட்டம், நீளம், அகலம், நாகரிகம் முதலான பண்புப் பெயர்ச் சொற்களுடன் ஆன என்னும் ஆக்க விகுதி சேர்ந்து,

    அழகான பெண்

    மோசமான வேலை

    உயரமான மாப்பிள்ளை

    குள்ளமான மனிதன்

    வட்டமான முகம்

    நீளமான மூக்கு

    அகலமான மார்பு

    நாகரிகமான பெண்

    என்ற ஆக்கப்பெயரடைகள் தோன்றி வழங்குகின்றன.

    பண்பை உணர்த்தும் உண்மை, மென்மை, வலிமை, எளிமை, கடுமை, செம்மை என்னும் மை ஈற்றுச்சொற்களுடன் ஆன என்ற ஆக்க விகுதி சேர்ந்து,

    உண்மையான ஒழுக்கம்

    மென்மையான இதயம்

    வலிமையான உடல்

    எளிமையான வாழ்க்கை

    கடுமையான தோற்றம்

    செம்மையான வாழ்க்கை

    என்ற ஆக்கப்பெயரடைகளஉருவாகி வழங்குகின்றன.

    பெயர்ச்சொற்களுடன் ஆன என்னும் ஆக்க விகுதி சேர்ந்து ஆக்கப் பெயரடைகள் உருவாவதுபோல, அற்ற என்ற எதிர்மறைப் பெயரெச்ச வடிவம் சேர்ந்து பல பெயரடைகள் தற்காலத்தமிழில் தோன்றி வழங்குகின்றன.

    அழகற்ற பெண்

    நாகரிகமற்ற வாழ்க்கை

  • வினையடிச்சொற்களினின்று பெயரடை உருவாதல்
  • பெயரடைகள் பண்பு அடிச்சொற்களினின்றே தோன்றி அமைகின்றன. ஆனால் தற்காலத்தமிழில் தாழ், உயர் என்னும் வினையடிச்சொற்களுடன், இறந்தகால இடைநிலையாகிய த் என்பது சேர்ந்து வரும் தாழ்ந்த, உயர்ந்த என்னும் பெயரெச்சங்களும் பெயரடைகளாக வருகின்றன. ஆனால் இவை பெயரடைகளாக வரும்போது காலம் காட்டுவது கிடையாது.

    சான்று :

    தாழ்ந்த நிலை வரும்

    உயர்ந்த வேலையில் இருக்கிறான்

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    மரபு இலக்கண அறிஞர்கள் தமிழ்ச்சொற்களை
    எத்தனை வகையாகப் பிரித்தார்கள்? அவை யாவை?
    2.
    உரிச்சொல்லுக்கான ஒரு சான்று தருக.
    3.
    இலக்கணக்கூறு என்றால் என்ன?
    4.
    இலக்கணத் தொழிற்பாடு என்றால் என்ன?
    5.
    சங்க காலத்தில் ‘நல்ல’ என்ற சொல்வடிவம்
    எத்தனை நிலைகளில் வழங்கியது? அவை யாவை?
    6.
    பெயரடையை மொழிநூலார் எத்தனை வகையாகப்
    பிரிக்கின்றனர்? அவை யாவை?
    7.
    மேல்நாட்டுத் தமிழ் அறிஞர்கள் தமிழுக்குச் செய்த
    எட்டுவகைப் பாகுபாடுகள் யாவை?

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 13:43:19(இந்திய நேரம்)