Primary tabs
-
5.1 வரலாற்றியல் அணுகுமுறை
இலக்கியத்தை ஆராய்வதில் வரலாறு மிக முக்கியமான இடம் வகிக்கின்றது. இலக்கியத்தின் பின்னணிகள், இலக்கியம் கூறும் செய்திகள் முதலியவற்றை அறியப் பல வகைககளில் அது ஒளி பாய்ச்சியிருக்கின்றது; தொடர்ந்து பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. வரலாற்றியல் திறனாய்வு, சுய விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ, அகவய மனப்பதிவுகளின் முறையிலோ அமைவது அல்ல. சரியான தகவல்களுடன், திட்டமான வரலாற்றுக் கொள்கைகளுடனும் முறையான இலக்கியக் கோட்பாட்டுப் பின்னணிகளுடனும் அது அமையும். அங்ஙனம் அமைதல் வேண்டும். அங்ஙனம் அமைதலே சிறப்பான வரலாற்றுத் திறனாய்வு அணுகுமுறையாகக் கருதப்படும்.
இலக்கியம் என்பது வெற்றுவெளியில் தானாகத் தோன்றுவது கிடையாது. அப்படித் தோன்றவும் முடியாது. அது, குறிப்பிட்ட காலத்தின் பின்னணியில் குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்த படைப்பாளியினால் படைக்கப்படுவதாகும். மேலும் கூறுவதானால் இலக்கியம் என்பது குறிப்பிட்ட காலத்தின் வெளிப்பாடு என்பதனை மறுக்க முடியாது. இத்தகைய காரணங்களினால் அது, தான் தோன்றிய காலத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மற்றும் உடன்பாடாகவோ எதிர்நிலையாகவோ காட்டுகிறது.
- வரலாற்றின் அடிப்படையும் இலக்கியமும்
வரலாற்றிற்கு அடிப்படையாக அமைவன காலம், இடம் எனும் மையங்களாகும். இவற்றிலே காலூன்றி நிற்பது இலக்கியம். நினைவுகளையும் நிகழ்வுகளையும் எடுத்துக் கொண்டு எந்த இடத்தில் சுழன்றாலும் அதனுடைய ஈர்ப்பு, காலம் என்னும் மையத்தை நோக்கியதாகத்தான் அமையும். வரலாற்றில் ஏற்படும் மாற்றங்களை எடுத்துக் கொள்ளவும். அந்த மாற்றங்களுக்குத் தானும் ஒரு காரணமாக அமையவும் கூடிய திறன் பெற்றது இலக்கியம்.
மனிதகுலம், மிக இயல்பாகத் தன்னையே உற்பத்தி செய்து கொள்வது; மற்றும் பொருள்களை உற்பத்தி செய்வது எனும் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது. அதோடு காலம், இடம் என்னும் புற நிலைகளின் காரணமாகவும் அது வளர்ச்சி பெறக் கூடியது. இவை வரலாற்றிற்குரிய அடிப்படைக் கருதுகோள்களாகும். மேலும் காலம், இடம் என்ற அச்சுகளில் காரண-காரியங்களுடன் கூடிய முன்னோக்கிய மாற்றங்களைக் கொண்ட நிகழ்வுகளின இணைப்பை இது குறிப்பதாகும்.
- மாற்றங்களும் வரலாற்றியலும்
மாற்றம் என்பது உயிருடைய பொருள்களின் தன்மை; மாற்றமில்லாதது என்பது சடப் பொருள்களின் தன்மை. மாறுதல் பெறுவதும், அதன் காரணமாக வளர்வதும் என்ற அடிப்படைப் பண்பைக் கொண்டு, குறிப்பிட்ட பொருள்களின் பண்பு மற்றும் உறவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியனவும், பொருளின் சாராம்சமாக விளங்கக் கூடியனவுமாகிய முன்னோக்கிய மாற்றங்களை, வரலாற்றியல், கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இதனடிப்படையில் இலக்கியத்தை ஆராய்வதற்குத் துணை நிற்கிற அணுகுமுறை வரலாற்றியல் அணுகுமுறையாகும். வரலாற்றியல் அணுகுமுறையில் முக்கியமாக மூன்று நிலைகள் இருக்கின்றன. அவை:(1)இலக்கியத்திலிருந்து வரலாறு காண்பது.(2)இலக்கியத்தினுடைய வரலாற்றினைக் காண்பது(3)இலக்கியத்தை வரலாற்றின் பின்னணியில் பார்ப்பதுஎன்பனவாகும்.ரெனிவெல்லாக்இலக்கியத்தின் வரலாறு காண்பது என்பது, இலக்கியங்களை ஒரு தொடர்ச்சியாக அல்லது தொடர்ச்சியின் ஒரு பகுதியாகக் காண்பதாகும். ஆங்கில இலக்கியக் கோட்பாட்டாளராகிய ரெனிவெல்லாக் (Rene Wellek) இலக்கியத் திறனாய்வும், இலக்கிய வரலாறும் இணை பிரிக்க முடியாதவை என்பார். அதாவது திறனாய்வாளனை அகவயமான சொந்த விருப்பு வெறுப்புக்களுக்குப் போகவிடாமலும், அவசர முடிவுகளுக்குச் சென்று விடாமலும், இலக்கியத்தின் வரலாறு பற்றிய அறிவு பாதுகாக்கிறது. திறனாய்வாளனுக்கு இலக்கியத்தின் வரலாறு தெரியவில்லையானால் அவனுடைய முடிவுகள் தவறாகப் போய் விடலாம். உதாரணமாகப் பரிபாடலையும் திருமுருகாற்றுப்படையையும் அகநானூறு, புறநானூறு ஆகியவற்றின் காலத்தோடு சேர்த்து வைத்துக் கணக்கிடும்போது, சங்க காலச் சமுதாய, பண்பாட்டு வரலாற்றினை ஆராய்வதில் குழப்பங்களும் சிக்கல்களும் ஏற்படுகின்றன. எனவே, இவ்விரண்டின் காலங்களையும் கணக்கில் எடுத்துச் சொல்வது திறனாய்வாளனுக்குத் தேவையாகி விடுகிறது. மேலும், இலக்கியத்திற்குரிய வரலாற்றுத் தொடர்புகளும் காரணங்களும் அறியப்படவில்லையென்றால், குறிப்பிட்ட இலக்கியத்தைப் புரிந்து கொள்வதிலும், அதன் இடத்தைத் தீர்மானிப்பதிலும் தொடர்ந்து தவறுகள் ஏற்படும். இந்த உறவு அறுபடுமானால் சீரழிவு ஏற்படும். இலக்கிய வரலாறு காணவும் எழுதவும் முற்படுபவர்கள் இந்தத் தவறிலிருந்து தப்புதல் வேண்டும்.இலக்கியத்திற்கு உள்ளே - சமூகம், அரசியல், பண்பாடு முதலியவற்றின் வரலாற்றினைக் காண முற்படுவது இலக்கியத்தில் வரலாறு காணும் முறையாகும். வரலாற்றியல் அணுகுமுறையில் இலக்கியத்தில் வரலாறு காண்பது இலக்கியத்தை வரலாற்று மூலமாகக் (Historical Source) கொள்ளுதலாகும்.- வரலாற்றுக் கொள்கலன்கள்
காலம் - இடம் எனும் தளத்திலிருந்து முகிழ்க்கும் இலக்கியம், அவ்வக் காலத்தின் வாழ்வுகளையும், உணர்வுகளையும் பதிவு செய்யும் கலை வடிவமாகும். எனவே வரலாறு எழுதுவதில் இலக்கியம் சான்று மூலமாக அமைகிற உரிமையும் தகுதியும் பெற்றுள்ளது எனலாம்.இலக்கியங்களை வரலாற்றுக்குரிய சான்று மூலங்களாகக் கொள்வதை, வரலாற்றுப் பேராசிரியர்கள் பலர் ஒத்துக் கொள்வதில்லை. எனினும் குறிப்பாக அகழ்வாராய்ச்சிகள், கல்வெட்டுகள், நாணயங்கள் முதலிய முதன்மைச் சான்றுகள் கிடைக்காத போதும் அல்லது சரிவரக் கிடைக்காத போதும் இவர்களுக்கு இலக்கியங்களின் துணை தேவைப்படுகிறது. ஆனால் தனித்தனியே அறிவுத் துறைகள் விரிந்து, கிளைத்து வளராத காலத்தில் இலக்கியமே அக்காலத்திய அறிவியலிலிருந்து மருத்துவம், சோதிடம் வரையிலான அறிவுத் துறைகள் பலவற்றிற்கும் சான்றுகள் தருகிற வரலாற்றுக் கொள்கலனாக இருந்திருக்கிறது.
கார்லைல்இந்த அடிப்படையில்தான் “ஒரு நாட்டின் கவிதை வரலாறு என்பது அந்நாட்டின் அரசியல், விஞ்ஞான சமய வரலாற்றின் சாராம்சமேயாகும்.” என்று கார்லைல் (Carlyle) அவர்களும், “இலக்கியம் என்பது காலங்கள் தோறும் காட்சி விளக்கக் குரல்களாகக் கேட்கும் ஒரு கூட்டுக்குரல் ஒலியே” என்று ரெனிவெல்லாக்கும் குறிப்பிடுகின்றனர். இதே போல் பிரடெரிக் எங்கல்ஸ் (Frederik Engels) “பிரெஞ்சு நாவலாசிரியரான பால்ஜாக்கின் எழுத்துகள் தொழில்முறை வரலாற்றறிஞர்கள், பொருளாதாரவாதிகள், புள்ளிவிவரக்காரர்கள் ஆகியவர்களை விடவும் உண்மையாகவும் அற்புதமாகவும் பிரெஞ்சு வரலாற்றைத் தருகின்றன” என்று கூறுகிறார்.பிரடெரிக் எங்கல்ஸ்இலக்கியம், குறிப்பிட்ட வரலாற்றின் சூழமைவில் தோன்றுகிறது; வளர்கிறது; ஏற்றுக்கொள்ளப்படுகிறது; போற்றப்படுகிறது. இலக்கியத்தை வரலாற்றின் தளமாகவும், தாக்கமாகவும், எதிரொலியாகவும், வரலாற்றைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் பார்க்க வேண்டும். உதாரணமாக, கா.சீ.வேங்கடரமணியின் முருகன் ஒர் உழவன், தேசபக்தன் கந்தன் ஆகிய நாவல்களை ஆராயவும், ந.சிதம்பர சுப்பிரமணியத்தின் மண்ணில் தெரியுது வானம், நா.பார்த்தசாரதியின் ஆத்மாவின் ராகங்கள் முதலிய நாவல்களை ஆராயவும், சுதந்திரப் போராட்டம், காந்திய யுகம் என்ற வரலாற்றுப் பின்னணிகள் மிகவும் அவசியமாகும். அதுபோல், பாரதியார் கவிதைகளை ஆராயவும், இந்திய சுதந்திரப் போராட்டம் என்ற காலப் பின்னணி மிகவும் அவசியமாகும்.
- பின்புலத்தைக் காணுதல்
நடப்பியல் உண்மைகளை அல்லது வரலாற்றுச் செய்திகளை இலக்கியம் அப்படியே தருவதில்லை; நேரடியாகத் தருவதில்லை. அது, கலைவடிவம் ஆகும் போது படைப்பாளி, அவனுடைய சூழல், அவனுடைய நலன், நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மைகள் பிரதிபலிக்கப்படு்கின்றன. எனவே, கலையாக்க முறைகளைப் புரிந்து கொண்டு, கற்பனையின் பாங்கினை அறிந்து கொண்டு பின்புலத்தைக் காணுதல் வேண்டும்.
இலக்கிய வரலாறு எழுதுவதில், நடைமுறையில் ஐந்து கோணங்கள் அல்லது வகைகள் இருப்பதை அவதானிக்கலாம்.(1)நூற்றாண்டுக் கால வரிசை(2)அரச மரபு வரிசை(3)இலக்கிய வகைகளின் வழி(4)இலக்கிய இயக்கங்களின் வழி(5)கருத்து நிலைகளின் வழிஇவற்றைப் பொதுவாகவும் தனித்தனிப் போக்குகளாகவும் எடுத்துக் கொண்டு வரலாற்று முறையியல்களை ஆராயலாம்.
இங்ஙனம் இவ்வரலாற்றியல் அணுகுமுறை இலக்கிய உலகினைச் சரியாகவும், தெளிவாகவும் புலப்படுத்தும் திறன் பெற்றுள்ளது. கடந்த காலம் சமைத்த பாதையில் மட்டுமல்லாமல் நிகழ்வின் வெளிப்பாடுகளிலும் எதிர்வின் தரிசனங்களிலும் இது ஒளி பாய்ச்சும் எனலாம்.4)கா.சீ.வேங்கடரமணி, ந.சிதம்பர சுப்பிரமணியன் முதலியோருடைய நாவல்களைத் திறனாய்வு செய்யத் தேவைப்படும் வரலாற்றுப் பின்னணிகள் யாவை?
-