Primary tabs
5.5 ஆய்வு சார்ந்த விளைவுகள்
இலக்கியங்களைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்வதற்கான பல்வேறு அணுகுமுறைகள் பற்றி 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்து ஆய்வு அணுகுமுறை நூல்கள் வெளிவந்தன.
‘இருபதாம் நூற்றாண்டின் இருபது முப்பதுகளில் தோன்றி நாற்பது, ஐம்பதுகளில் தனிச் செங்கோலோச்சி, தான் ஏற்றுக்கொண்ட சில மாற்றங்களால் அறுபது, எழுபதுகளிலும் சிறுபான்மை வழக்காகத் தொடர்ந்து, எண்பது, தொண்ணூறுகளில் வரலாறாகி நிற்கின்ற இலக்கியக் கோட்பாட்டின் பெயர்தான் புதுத் திறனாய்வுக் கோட்பாடு என்பது’ என்று அ.அ.மணவாளன் (இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.) குறிப்பிடுவது இலக்கிய ஆய்வின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்னதாகக் கருதலாம்.
1920,30களில் டி.எஸ் எலியட், ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ் என்பவர்களால் பிரிட்டனில் உருவாகிய புதிய திறனாய்வு வளம் பெற்று வலுவடைந்து ஏறக்குறைய அனைத்துலகக் கோட்பாடாக உயர்ந்தது.
ஜான்குரோ ரான்சம், கிளியந்த் புருக்ஸ், ஆலன் டேட், வாரன், விம்சாத் ஆகியோரையும் ராபர்ட் பென்வாரன், ஆஸ்டின் வாரன், கென்னத் பர்க், ஜான் எல்லிஸ் போன்றோரையும் திறனாய்வு என்ற கோட்பாட்டின் முன்னோடிகள் எனலாம்.
மேற்கண்டோரின் நூல்களில் ஆஸ்டின் வாரன், ரெனி வெல்லாக் போன்றோரின் திறனாய்வு நூல்கள் சில தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலக்கிய ஆய்வில் இத்தகைய அணுகுமுறைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
மொழியியல் ஆய்வில் பெர்டினான் டி சசூர், புளும்பீல்டு போன்ற அறிஞர்களின் கோட்பாடுகள் தமிழ்மொழி ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.