Primary tabs
1.1 கிறித்தவக் கவிதைகள் - I (மரபுக் கவிதை)
கிறித்தவ நெறிக் கவிதைகள் பக்தி உணர்வையும் சமுதாய உணர்வையும் புலப்படுத்துகின்றன. கிறித்தவக் கவிதைகள் தமிழைப் போற்றுவன; தமிழ்ப் பக்தி இலக்கிய மரபைத் தழுவி அமைந்துள்ளன; இயேசு பெருமானின் சிறப்பைப் பாடுவன; விவிலியத்தின் சாரமாக அமைந்துள்ளன. கிறித்தவக் கவிதைகள் பல்வகை யாப்பு வடிவங்களில் அமைந்துள்ளன. பலவகையான உத்திகளும் கற்பனை நயங்களும் இக்கவிதைகளில் வெளிப்படுகின்றன.
திட்டூர் தேசிகர், ஜே.எஸ்.ஆழ்வார் பிள்ளை, மு.நல்லசாமி பண்டிதர், அந்தோணிமுத்துப் பிள்ளை, வீ.ப.கா.சுந்தரம், பொன்னு. ஆ.சத்திய சாட்சி. பவுல் இராமகிருட்டினர், சி.தேவராசன், ச.மரியதாஸ், மோசசு மைக்கேல் பாரடே, பொன், சூசை மாணிக்கம் முதலியோர் குறிப்பிடத்தக்க கிறித்தவக் கவிதைப் படைப்புகளை ஆக்கியுள்ளனர்.
கடவுளைப் போற்றுவதும், தம் குறைகளுக்காக வருந்துவதும், இறை அருளுக்காக ஏங்குவதும் பக்திப் பாடல்களின் பண்புகளாகும். எத்தகைய துன்பங்கள் வந்தாலும் கடவுளை உறுதியாகப் பற்றிக் கொள்ளும் பக்தி வெளிப்பாட்டையும் கிறித்தவக் கவிதைகளில் காண முடிகிறது.
• தருவாய் மோட்ச வாழ்வு
அருட்கடலாகிய இயேசுவிடம், நிலையான மோட்ச வாழ்வை அருள வேண்டும் எனக் கவிஞர் ஆழ்வார் பிள்ளை வேண்டுகிறார். பக்தி இலக்கிய மரபைத் தழுவி, கடவுளின் திருவடிகளைத் தன் தலை மீது சுமந்து, இரு கை கூப்பித் தொழுகிறார் கவிஞர்.
இந்நேரம் வரைக்கும் என் உயிர்காத்த
அருட்கடலே!, இருகை கூப்பி
இந்நேரம் உனைத் தொழுதேன் இனி மேலும்
தொழுவேன்; உன்இருதாள் தூக்கிச்
சென்னிமிசை யிடுகிறேன்: திருமுகத்தோடு
எனது முகம் சேர்த்தேன்: உன்னை
முன்னியே உலவுகின்றேன்: தவறாமல்
அளித்தருள்வாய் மோட்ச வாழ்வே!(கிறிஸ்தவ அருட்பாக்கள் - பக்:5)
(சென்னி = தலை, முன்னி = நினைத்து)
• இதயத்தில் புகுந்த விந்தை
தம்முடைய இதயமாகிய மனையில் குடியிருக்கும் இயேசுவை வியந்து பாடுகிறார் கவிஞர் மோசசு மைக்கேல் பாரடே. இயேசுவின் வாழ்வு வியக்கத்தக்கது; அவர் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. ஆயினும் அற்பனாகிய தம் இதயத்தில் வந்து அவர் குடிகொண்டிருப்பது. கவிஞருக்கு விந்தையாகத் தோன்றுகிறது. இதனை நயமாகப் புலப்படுத்துகிறார் கவிஞர்.
கன்னியின் உதரத்தில் கருவாக நின்றதும்
கட்டாயம் விந்தை இல்லை
‘கானா’ எனும் ஊரில் தண்ணீரை இரசமாகத்
தந்ததும் விந்தை இல்லை
கண்ணினை - காலினை - கையினை இழந்தோரைக்
கைதொட்டுச் சுகமளித்துக்
கனிவோடு அனுப்பிய கருணையின் கதை எல்லாம்
கடவுளே விந்தை இல்லை
. . . . . . . . . . . . . . . . . . . .
புன்மகன் புலைமகன் என்னுடை இதயத்தில்
புகுந்ததே விந்தை! விந்தை!(சிலுவையினடியில் சிந்திய மலர்கள்- பக்:3-4)
(உதரம் = வயிறு, ‘கானா’ = இந்த ஊரில் நிகழ்ந்த திருமணத்தில்தான் இயேசு தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றினார், புன்மகன்= அற்பன், புலைமகன் = தாழ்ந்தவன்)
மேற்குறிப்பிட்டவாறு, இயேசு மீது கொண்ட பக்தியைத் தமிழ்க் கவிதை வாயிலாகச் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றனர்.
கிறித்தவக் கவிஞர்கள் விவிலியச் செய்திகளை இனிய பாக்களில் பாடியுள்ளனர். இயேசுவின் பிறப்புத் தொடங்கி மறு உயிர்ப்பு வரையிலான வரலாற்றைப் பாடல்களாகப் புனைந்துள்ளனர். இயேசுவோடு தொடர்புடைய இறை மாந்தர்களின் வரலாற்றையும் கிறித்தவக் கவிஞர்கள் பாடியுள்ளனர்.
• இயேசுவின் துன்பம்
கவிஞர் எம்.எஸ்.பொன்னையா தம் சிலுவைச் சிந்து என்னும் கவிதையில் இயேசுவின் துன்பங்களையும், அதனைக் காணும் பெண்களின் நிலையினையும் பாடுகிறார். வேதனையால் இயேசுவின் கால்கள் தள்ளாடுவதையும், இரத்தம் சிந்துவதையும், முகம் சோர்ந்து இருப்பதையும் காணும் பெண்களின் கண்ணீர் ஆறுபோல ஓடுவதாகக் கவிஞர் பாடுகிறார்.
வேதனையால் இயேசு கால்கரங்கள்தடு மாறுதே
குருதி மீறுதே முகம் சோருதே - ஐயோ
வீதியின் நின்றழு மாதரின் கண்ணீரும்
ஊறுதே - ஓடும் - ஆறதே!(இறையியல் மலர் 3:9,10 : பக்.79)
(குருதி = இரத்தம்)
• குறள் பாக்களில் விவிலியச் செய்திகள்
பாவலர் வீ.ப.கா. சுந்தரம் அருள் குறள் என்றும் தலைப்பில் 1200 குறள் பாக்கள் பாடியுள்ளார். இவை கிறித்தவ நெறியை உணர்த்துபவை: விவிலிய வசனங்களைத் தழுவி அமைந்தவை. குறள் பாக்களுக்கு அடிப்படையான விவிலியப் பகுதியையும் அவர் ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளார்.
• தேனும் மாமறையும்
வான் வாழ்வுக்கு நம்மைக் கூட்டிச் சேர்க்கும் திருமறை, தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளிவான தேனைக் காட்டிலும் இனிமையானது என்று குறிப்பிடுகிறார் கவிஞர். இதனை,
தேன் கூட்டில் வார்க்கும் தெளிதேனில் மிக்கினிதாம்
வான் கூட்டு மாமறை வார்ப்பு(சங்கீதம் 19:10)
(அருள் குறள் : பக்.4)என்னும் பாடல் எடுத்துரைக்கிறது.
• ஊசியும் நூலும்
ஊசியை நூலானது பின் தொடர்ந்து செல்வது போல இயேசுவை நாம் பின்பற்றுவது பொருத்தமானது என்று குறிப்பிடுகிறார்.
ஊசியைப் பின்தொடரும் நூலாய் எக் காலமும்
யேசுவைப் பின் தொடர்தல் ஏற்பு(விவிலியம், மத்தேயு 8:19)
(அருள் குறள் : பக்.50)என்ற கவிதை இக்கருத்தை வெளிப்படுத்துகிறது.
• நிலைத்து நிற்கும் சொல்
கவிஞர் தே.மனுவேல் ‘திருமறைத் தேன்’ என்னும் தலைப்பில் இறைவாக்கினரான ஏசாயாவின் கருத்தைப் பின்வருமாறு குறள்பாக்களில் ஆக்கியுள்ளார்.
புல்லுலரும் பூவுதிரும்: பொற்பரனின் வாக்காம்
சொல்லதுவோ நிற்கும் நிலைத்து(ஏசாயா 40:8)
(இறையியல் மலர் 1:5, பக்:5)புல் உலர்ந்து போகும்; பூ உதிர்ந்து போகும்; பொற்பரனாகிய இயேசுவின் சொல் என்றும் நிலைத்து நிற்கும்.
இயேசுவின் பேச்சும் செயலும் சமுதாய மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டவை. கிறித்தவத் தமிழ்க் கவிதைகள் சமுதாயச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் களைய முற்படுகின்றன. இக்காலக் கவிதைகளின் பொதுப் பண்பாகவும் இதனைக் கருதலாம்.
• இயேசுவை எங்கே காணலாம்?
இறைவனின் தன்மைகளைக் குறிப்பிடும் முறையிலும் கிறித்தவக் கவிஞர்களின் சமுதாய நோக்கு வெளிப்படுகிறது. கவிஞர் சத்தியசாட்சி இயற்றியுள்ள ‘தாமஸ் மலைக் குறவஞ்சி’ என்னும் கவிதை உருவகமாக அமைந்த இக்காலக் காவியமாகும். உலா வரும் இயேசுவைக் கண்டு மேதினியாள் காதல் கொள்கிறாள்; பின்னர் அவரைக் காணாது தவிக்கிறாள். தன் தோழி அபரஞ்சி என்பவளைத் தூது அனுப்புகிறாள். தலைவனாகிய இயேசு எங்கே இருப்பார் எனத் தோழி வினவுகிறாள். அதற்குத் தலைவி கூறும் பதில் கவிஞரின் சமுதாய நோக்கைப் புலப்படுத்துகிறது.
• தலைவியின் கூற்று
‘மாடி வீடுகளில் இயேசுவைக் காணமுடியாது; கொத்தடிமைகள் கூட்டத்திலும், குப்பை பொறுக்குவோர் கூட்டத்திலும் அவரைக் காணலாம்’ என்கிறாள் தலைவி. கல்லுடைக்கும் பெண்மணிகளின் கண்ணீர்த் துளியிலும், குண்டடிபட்டுப் பாயும் குற்றமற்ற இரத்தத்திலும் அவர் இருப்பார் என மேலும் கூறுகிறாள் தலைவி. தலைவியின் கூற்றாக அமைந்த அந்தப் பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாடிவீடுகளில் அவன்மலரடி வைப்பதில்லை
தேடித் துருவிப் பாரடி - ஏழைகள்
தெருவினில் திரிவானடி - தேவன்
திருமகன் அவன்தானடி(தாமஸ் மலைக் குறவஞ்சி - பக்.41)
(மலரடி = மலர் போன்ற அடி, துருவி = ஊடுருவி)
இவ்வாறு, எங்குச் சென்றால் இயேசுவைப் பார்க்கலாம், அவர் எங்கெங்கு இருப்பார் என்பதைக் கூறுகிறார் கவிஞர். இதில் ஏழைகளின் தோழன் இயேசு என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார்.