Primary tabs
5.5 குத்பு நாயகம்
கனகாபிசேக மாலைக்கு அடுத்த நிலையில் சிறந்த காப்பியமாகக் கருதப்படுவது குத்பு நாயகம் ஆகும்.
● பெயர்க் காரணம்
குத்பு என்னும் அரபுச் சொல்லின் பொருள் புனிதத் தன்மையிலே மிக உச்ச நிலை அடைந்தவர் என்பதாகும். குத்பு நாயகம் என்று அழைக்கப்படுபவர் முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ஆவார். இவரது வாழ்க்கை வரலாற்றினைப் பாடுவது குத்பு நாயகம் என்னும் காப்பியம்.
● ஆசிரியர்
இக்காப்பியத்தை இயற்றியவர் வண்ணக் களஞ்சியப் புலவர் என்னும் முகம்மது இப்ராகீம்.
● காப்பிய அமைப்பு
இக் காப்பியத்துள் காண்டப் பகுப்பு இல்லை. 39 படலங்கள், 1707 செய்யுட்களால் ஆனது. காப்பிய நாயகரின் மரபியல் படலம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
முகியித்தீன் ஆண்டகையினைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட காப்பியங்கள் பல. ஒவ்வொருவரும் அப்பெரியாரின் வாழ்க்கையின் வெவ்வேறு சிறப்புகளை, தம்மைக் கவர்ந்த செய்திகளை, தத்தம் காப்பியங்களில் முக்கியத்துவம் கொடுத்து விரிவாகவும் சுருக்கமாகவும் பாடியுள்ளனர். இவர் இறை நேசச் செல்வர்களுக்கு எல்லாம் தலைசிறந்தவர் எனப் போற்றப்படுவார். இவரால் காதிரிய்யா தரீக்கா (தரீக்கா = நெறி/பாதை) என்ற சூபிச ஞானப் பாதை நிறுவப்பட்டது. இதனைப் பின்பற்றி ஒழுகுபவர்கள் உலகத்தின் பல பாகங்களிலும் உள்ளனர். இவர் முகம்மது நபியின் நேரடி வழித் தோன்றியவர் ஆவர்.