Primary tabs
5.4 இயற்கை வருணனை
காப்பியங்களில் இயற்கை வருணனைகள் இடம் பெறுவது இயல்பு. இயற்கை இனிமையானது; இன்பந்தருவது. வருணனைகளில் அணிகளை அமைத்துப் பாடுவர் கவிஞர். வண்ணக்களஞ்சியப் புலவர் உவமையும் உருவகமும் கலந்து இயற்கை வருணனையைப் பாடுகிறார்.
சுலைமான் நபி ஒரு சோலைக்கு வந்தார். அந்தச் சோலையை ஒரு சிறு மன்னனாகப் புலவர் உருவகப்படுத்துகிறார். பெரிய மன்னரான, இராஜ நாயகரான சுலைமான் நபி, அச்சோலைக்கு வருவதால் சோலையான சிறு மன்னன் தனது வரியைச் (Tax) செலுத்துவதாகப் பாடுகிறார்.
சுலைமான் நபி காலடியில் மகிழ மலர்கள் உதிர்கின்றன. அவை, அந்தச் சோலையாகிய சிற்றரசன் வரியாகச் செலுத்தும் பட்டை தீட்டிய பதுமராக மாணிக்கக் கற்களாகக் காட்சி தருகின்றன. புன்னை அரும்புகள் முத்துகளாகக் காட்சி அளிக்கின்றன. புலவரின் உருவகக் கற்பனை அழகாக அமைந்துள்ளது.
வரம்செய்வோன் நபிவரவு அறிந்து
எழில் பொழின் மன்னன்
திருந்து சாணை செய்பதும
ராகங்களைத் திறையாகப்
பொருந்தவே இடற்கு இணைதரு
மகிழலர் புன்னை
அரும்பு எலாந்தர ளங்களை
இடுவது ஒத்தருளும்(எறும்புகள் விருந்திடு படலம் - 6)
(எழில் = அழகு; பொழில் = சோலை; சாணை = பட்டை தீட்டுதல்; திறை = வரி; பதுமராகம் = நவமணிகளில் ஒன்று; அரும்பு = பூக்கள்; தரளம் = முத்து)
என உவமையும் உருவகமும் இணைந்த இப்பாடல் மூலம் இயற்கை வருணிக்கப்படுகிறது. இவ்வாறு காப்பியத்தின் பல இடங்களில் இயற்கை வருணனை மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
உயர்ந்த நிலைமாடத்தில் (upstairs) பளிங்கினால் (marble) ஆகிய தளம் அமைக்கப்பட்டிருந்தது. அத் தளத்தில் பெண்கள் சிலர் நின்றிருந்தார்கள். அவர்கள் கண்களின் சாயல் பளிங்குத் தளத்தில் தெரிகிறது. அந்த ஒளிரும் கண்களின் தோற்றத்தை, குளத்தில் உள்ள மீன்கள் என நினைக்கிறது மீன்கொத்திப் பறவை. அப் பறவை அந்தரத்தில் வேகமாக வந்து பற்றக் கருதி, பளிங்குத் தரையில் மோதியது.
பொருது வெண்பளிங்குத் தளத்தில் நின்றிடில்அத்
தளம்குளிர் புனல்என நெடிய
கருவிழி இரண்டு கயல்எனத் தோன்றக்
கண்டுவந்து உடல்அசை யாது
விரிசிறை அசைத்துஅந்த ரத்தின்நின்று எழில்சேர்
மீன்எறி பறவைவீழ்ந் திடுமே(நகரப் படலம் - 3 (13)
(கயல் = மீன்; சிறை = சிறகு; எழில் = அழகு; தளம் = தரை; புனல் = தண்ணீர்; விழி = கண்)
இவ்வாறு புலவரின் கற்பனைத் திறம் சிறப்புற அமைந்து வியப்பும் மகிழ்ச்சியும் அடையச் செய்கிறது.
1)
கனகாபிசேக மாலை காப்பியச் சிறப்புகளைக் கூறுக.
2)
நபிகள் நாயகத்தின் மறைவுக்கு இரங்கிய நிகழ்ச்சிகளை விளக்குக.
3)
மன்னன் தாய் போல் கடமை ஆற்றுவதை எவ்வாறு கனகாபிசேக மாலை ஆசிரியர் விளக்குகிறார்?
4)
இராஜநாயகம் - பெயர்க் காரணம் கூறுக.5)
இராஜநாயகக் காப்பிய ஆசிரியர் - குறிப்பு எழுதுக.6)
சுலைமான் நபிக்கு வரி செலுத்திய சோலை நிகழ்ச்சியினை விவரிக்க.