தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுதி முடிவுரை

  • தொகுதி முடிவுரை

    நற்றிணைப் பாடல்களுள் ஆங்காங்கிருந்து தெரிந்தெடுத்த முப்பது பாடல்களையும், குறுந்தொகையில் அதேபோலத் தெரிந்தெடுத்த நாற்பது பாடல்களையும் உள்ளடக்கம், உத்தி, உருவம் என வகைப்படுத்தி நாம் பயின்றவற்றை ஒரு மீள்பார்வை பார்த்து அவற்றில் தெரியும் சிறப்பியல்புகள் சிலவற்றைக் கீழ்வருமாறு தொகுக்கலாம்.

    1. பாடல்கள் பல ஒரே மாதிரி அமைப்பில் இருப்பதை உணர முடிகிறது. திணை, துறை இலக்கண மரபுகளை ஒட்டிப் படைக்கப்பட நேர்வதால் தலைவன் - தலைவியர், தோழி செவிலி போன்றோர் உணர்ச்சிகளும் கூற்றுகளும் எண்ணங்களும் பெருமளவுக்கு வேறுபாடின்றி ஒரே மாதிரியான தோற்றம் தருகின்றன. இது தவிர்க்க முடியாதது. இருப்பினும் புலவர்கள் சுற்றி வளைக்காத நேரடி மொழி, செறிவான சொல்லாட்சி, சிறப்பான அடைமொழிகள், படிக்கும் போதே நெஞ்சைப் பற்றிப் பிணித்துக் கொள்ளும் உவமைகள், உள்ளுறை போன்றவைகள் மூலம் சங்கஅக இலக்கியத்தைக் காலம் கடந்தும் கவிதைச் சுவை குன்றாமல் நீடிக்குமாறு படைத்துள்ளனர். அகவுலகத்தில் இலட்சிய வாழ்வை (idealism) யும் அற உணர்வுகளையும் (ethics) இணைத்துப் படைக்கும் சங்க இலக்கியம் தமிழின் பெருமைக்குரிய தலைமையான இலக்கியமாகும்.

    2. இந்தப் பாடப்பகுதிப் பாடல்களிலிருந்து பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கைக் கூறுகள், கருத்தோட்டங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், நம்பி்க்கைகள் போன்றவற்றை ஓரளவேனும் கண்டறிந்திருப்பீர்கள். இப்பாடப்பகுதி, பாடமாகத் தரப்படாத எஞ்சிய பகுதிகளை நீங்களே தேடிப் படிக்கத் தூண்டி, நீங்களும் முயன்றால், சங்க இலக்கியம் பழந்தமிழர்களின் அரசியல், சமூக, பண்பாட்டு வாழ்வின் முழுமையை உங்களுக்குக் காட்டத் தயாராக இருக்கிறது.

    உழவு, நாற்றுநடல், களைபறித்தல், உப்பு வியாபாரம், வேட்டையாடல், மீன்பிடித்தல், மீனைக் காய வைத்து விற்றல், உலையில் நடைபெறும் கொல்லத்தொழில், ஆனிரை மேய்த்தல் போன்ற வாழ்க்கைத் தொழில்களை இந்தக் கவிதைகளில் பார்த்தீர்கள். ‘தொழில்’ என்று அன்றும், இன்றும் ஒப்புக்கொள்ள முடியாத ஆறலை கள்வரின் வழிப்பறித் தொழிலையும் கண்டீர்கள்.

    உணவு தொடர்பாக - இனிய மோர்க் குழம்பு தலைவன் உண்டாலும் உங்களுக்கும் சுவைத்திருக்கும். பெரிய வரால்மீன் துண்டுகளுடன் கை நிறைய அள்ளி அள்ளி உண்ட உழவன் உங்களை நாவூறச் செய்திருக்கக் கூடும். நெய்கலந்த வெண்ணெய் வெண்சோறு, தேன் கலந்த பால், அவல், கள் - என உண்ணும் பொருள்களைக் கவிதைகளில் கண்டீர்கள்.

    மகளிர் கைகோத்து ஆடும் துணங்கைக் கூத்து, குரவைக்கூத்து, பெண்கள் மணலில் ஆடும் வண்டல் (மணல் வீடு, பாவை செய்து விளையாடும்) விளையாட்டு, சிறுவர்கள் நெல்லிக்காயைப் பயன்படுத்தி ஆடும் நெல்லி வட்டாடல். கடலாடல், சோலையில் விளையாடல், வீரர்களின் வீரவிளையாட்டு போன்றவற்றை இக்கவிதைகளில் ஆங்காங்குக் கண்டீர்கள்.

    மகளிர் அணியும் அணிகலன்கள், ஆசையுடன் தழைகளைப் பறித்து அணிந்து கொள்ளும் தழையாடை, ஐம்பால் என்றும், பின்னல் என்றும் பலவிதமாகச் செய்து கொள்ளும் கூந்தல் அலங்காரம் - இவைகளும் இப்பாடல்களில் காணப்படுகின்றன.

    குறிகேட்டல், விரிச்சி (நற்சொல்) கேட்டல் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதையும் ‘காக்கை கரைந்தால் விருந்துவரும்’ என்ற நம்பிக்கை இருந்தது என்பதையும் கவிதைகள் காட்டுகின்றன.

    ‘விருந்து’ என்பது அறிமுகமில்லாத விருந்தினர்களையே குறிக்கும். விருந்தோம்பல் என்பதைத் தம் பண்பாட்டின் சிறந்த அம்சமாகத் தமிழர்கள் கொண்டிருந்தனர். தலைவியைச் சந்திக்க வந்த களவுக் காதல் தலைவன் விருந்தினர்களோடு விருந்தினனாக அவள் வீட்டில் தடையின்றி நுழைந்தான் (குறுந்தொகை-292) என்பதைக் கண்டோம்.

    பரத்தமை ஒழுக்கத்தை, அதனால் பாதிப்புற்ற தலைவியும் அவள் சார்பாகத் தோழியும் கண்டித்தனர் என்பது தவிர, அதுமிகப் பெரும் தவறு என்றோ பாவச்செயல் என்றோ கருதப்படவில்லை என்பது தெரிகிறது. இந்த இடத்தில் ஒன்றை மனத்தில் கொள்ள வேண்டும். மருதத் திணைப் பாடல்கள் பலவற்றில் தலைவன் பரத்தையிற் பிரிந்து சொல்வதாகக் கூறப்படுவது முழு நடப்பியல் உண்மையன்று. மருதத்திணைக்குரிய உரி்ப்பொருள் ஊடல், ஊடலுக்குச் சொல்லப்படவேண்டிய காரணம் பரத்தையிற்பிரிவு. அதனால் தான் பரத்தமை ஒழுக்கம் சொல்லப்படுகிறது.

    பழந்தமிழர் கருத்தோட்டங்கள் சிலவற்றை இப்பாடல்களில் எதிர்கொண்டீர்கள். இம்மை - மறுமை, எழுபிறப்பு எனும் கருத்துகள் இடம்பெற்றாலும் மறுமைபற்றிய ஆழ்ந்த சிந்தனை, தத்துவ நோக்கம் காணப்படவில்லை. அமைப்பு அடிப்படையிலான மதக்கோட்பாடு எதனையும் நீங்கள் பார்க்கவில்லை. கடவுள் நம்பிக்கை, விழாக்கள், வழிபாடு உண்டு என்பதைமட்டும் பார்த்தீர்கள். ஆன்மிகக் கோட்பாடுகளைவிட மனித வாழ்வியல் கோட்பாடுகளே பழந்தமிழரை வழிநடத்தியிருக்கின்றன .நாடி நட்பின் அல்லது நட்டுநாடார்தம் ஒட்டியோர் திறத்தே(நற்றிணை-32) என்ற அடிகளில் நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள்பவர்க்கு (குறள்-791) என்ற திருக்குறள் கருத்து இடம்பெறுகிறது. உள்ளது சிதைப்போர் உளரெனப்படார், இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிந்தன்று (குறுந்தொகை-283) போன்ற கருத்துகளையும் காணலாம்.

    3. அரசு அதிகாரம், அரசியல் தொடர்பாக வந்த ஒன்றிரண்டு குறிப்புகள் உங்களுக்குச் சில உண்மைகளை உணர்த்தியிருக்கும். சங்ககாலம் பொற்காலம் எனச் சொல்லப்பட்டாலும், அதற்கு மாறாத களங்கம் உண்டாக்கிய நிகழ்வுகள் சில நிகழ்ந்திருக்கலாம் என ஊகிக்கலாம். ஒரு மாங்காயை உண்டதற்காக அனைவர் வேண்டுகோளையும் புறக்கணித்து ஒரு மன்னன் ஒரு பெண்ணைக் கொன்றான்.புறநானூற்றில் இதற்கு நேர் மாறான ஒரு நிகழ்ச்சியைக் காணலாம். ஆயுளை நீட்டிக்கும் அருங்கனியைத் தான் உண்ணாமல் ஒளவை என்ற புலவருக்குக் கொடுத்து வாழவைத்தான் அதியமான். பரணரின் குறுந்தொகைப் பாடல் ஒன்று (292) மற்றுமோர் உண்மையை வெளிப்படுத்துகிறது. தன் மகளின் களவுக்காதல் பற்றிய ஐயத்தில் இரவு முழுதும் உறங்காத தாய்க்கு உவமையாகப் போர்க்களத்துக்கு அருகில் உள்ள ஊர்மக்களைச் சுட்டுகிறார் புலவர். போருக்குத் தொடர்பில்லாத அப்பாவிப் பொதுமக்களும் போரினால் பாதிக்கப்பட்டனர் என்ற உண்மையை உணர்கிறோம்.

    4. புலவர்கள் சான்றோர்கள் எனப்பட்டனர். உயர் பண்புகளையும் நெறிகளையும் தங்கள் கவிதைகளில் போற்றினர். சொல்லும் கருத்தே முக்கியம்,தான் முக்கியமில்லை என நினைத்தான் சங்கக் கவிஞன். அதனால்தான் நற்றிணையில் பல பாடல்களும் குறுந்தொகையில் சில பாடல்களும் ஆசிரியர் பெயர்காணாப் பாடல்களாக உள்ளன. அப்பாடல்களில் வரும் உவமைகள், நல்ல தொடர்கள்கொண்டு சில புலவர்களுக்குப் பெயரிடப்பட்டிருப்பதை அறிவீர்கள். பாடப்பகுதிப் புலவர்களுள் சிலர் அந்தந்த ஒருபாடலை மட்டுமே படைத்தவர்கள். (அல்லது அவர்கள் படைத்த மற்ற பாடல்கள் கிடைக்காது போயிருக்கலாம்). போதனார், விழிக்கண்பேதைப் பெருங்கண்ணனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார், புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான், கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார், இறையனார், கல்பொரு சிறுநுரையார், கங்குல் வெள்ளத்தார், மோதாசானார், மிளைக்கந்தனார் ஆகியோர் இப்புலவர்கள். ஒவ்வொரு பாடல்மட்டுமே எனினும் அப்பாடல்கள் பல பாடல்கள் பாடிய புலவர்களின் பாடலுக்குச் சளைத்தவை அல்ல என்பதை நீங்களே ஒப்பிட்டுக் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:18:43(இந்திய நேரம்)