Primary tabs
-
2.3 எழுத்து வருகை வரலாறு
எழுத்து வருகை என்றால் தமிழ் எழுத்துகள் சொல்லின் எப்பகுதியில் அமைந்து வருகின்றன என்பது பற்றியது எனப் பார்த்தோம். அவ்வாறு வரும் தமிழ் எழுத்துகளை உயிர்எழுத்து, மெய்எழுத்து என இரண்டாகப் பிரித்து அவை சொல்லின் எப்பகுதியில் வருகின்றன என்பதைப் பற்றியும், இவ்வருகை சங்க காலத்திலும், இடைக்காலத்திலும், எவ்வாறு அமைந்திருந்தது, தற்காலத்திலும் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதைப் பற்றியும் வரலாற்று ரீதியாக இங்குக் காண இருக்கிறோம்.
உயிர் எழுத்துகள் (vowels) (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள) பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும் என்கிறார் தொல்காப்பியர்.
பன்னீர் உயிரும் மொழிமுதல் ஆகும்
(மொழி = சொல்) (தொல்.எழுத்து.59)
‘அடை, ஆடை, இடை, ஈயம்’ போன்ற சொற்களின் மூலம் அவ்வுயிர் எழுத்துகள் மொழி முதலில் வருகின்றன.
உயிர்மெய் எழுத்துகள் மொழிமுதலில் இடம் பெறும். ஆனால் தனி மெய் எழுத்துகள் (consonants) மொழி முதல் வரலாகாது என்கிறார் தொல்காப்பியர்.
உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா
(தொல்.எழுத்து.60)
அதுபோலவே சகரம் என்ற மெய் அ, ஐ, ஒள ஆகிய மூன்று உயிர்களுடன் சேர்ந்து சொல்லின் முதலில் வருவதில்லை என்கிறார் தொல்காப்பியர்.
சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே
அ, ஐ, ஒள எனும் மூன்று அலங்கடையே(தொல்.எழுத்து.62)
ச- சை- சௌ- போன்று மொழிமுதலில் வருவது கிடையாது. ஆனால் சாளரம், சிலை, சுரும்பு போன்ற சொற்களில் ஏனைய உயிர்களுடன் சேர்ந்து மொழிமுதலில் சகரம் வருகிறது.
தொல்காப்பியத்தை அடுத்துத் தோன்றிய சங்க இலக்கியத்தில் சகரமெய் அகர உயிரோடு சேர்ந்து பல சொற்களிலும், ஐகார உயிரோடு சேர்ந்து ஒரு சொல்லிலும் மொழி முதலில் வரும் நிலையைக் காணலாம்.
சகடம்(நற்றிணை. 4:9)சடை(புறநானூறு. 166:1)சண்பகம்(கலித்தொகை. 150:21)சையம்(பரிபாடல். 11:14)‘வ’ எனும் மெய் எழுத்து ‘உ, ஊ, ஒ, ஓ’ என்னும் நான்கு உயிர்களுடன் சேர்ந்து மொழிமுதல் வருவதில்லை என்கிறது தொல்காப்பியம்.
‘உ, ஊ, ஒ, ஓ’ என்னும் நான்கு உயிர்‘வ’ என் எழுத்தோடு வருவ தில்லை(தொல். எழுத்து.63)
‘பிற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து மொழிமுதலில் வகரம் வருகின்றது. வளை, வாளி என வரும்.
‘ஞ’ என்னும் மெய் ஆ,எ,ஒ என்னும் மூன்று உயிர்களோடு கூடி மட்டுமே மொழி முதலாகும் என்கிறார் தொல்காப்பியர்.
‘ஆ, எ, ஒ’ எனும் மூவுயிர் ஞகாரத்து உரிய(தொல். எழுத்து.64)
சங்க இலக்கியத்தில் ஞகரமெய் இம்மூன்று உயிர்களோடு மட்டும் அல்லாமல் அ, இ என்னும் இரண்டு உயிர்களோடு சேர்ந்தும் மொழி முதலாகி வருகிறது.
சான்று:
ஞமலி(அகநானூறு. 140 : 8)ஞிமிறு(அகநானூறு. 124 : 5)‘ய’ என்னும் மெய், ஆகார உயிரோடு கூடி மட்டுமே மொழிமுதலில் வரும் என்கிறார் தொல்காப்பியர்.
ஆவோடு அல்லது யகரம் முதலாது(தொல். எழுத்து.65)
சங்க இலக்கியத்திலோ யகர மெய் ஆகாரத்தோடு மட்டுமன்றி, அகர உயிரோடும் ஊகார உயிரோடும் கூடி மொழி முதலாகும் வழக்கைக் காணலாம்.
சான்று:
யவனர்(அகநானூறு. 149 : 9)யூபம்(புறநானூறு. 15 : 21)இதுவரை நாம் சகரமும், வகரமும், ஞகரமும், யகரமும் குறிப்பிட்ட உயிர் எழுத்துகளுடன்தான் மொழிமுதல் வரும் எனவும், ஒருசில உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து மொழிமுதல் வருவதில்லை எனவும் கண்டோம்.
க, த, ந, ப, ம என்னும் ஐந்து மெய் எழுத்துகளும் பன்னிரண்டு உயிர் எழுத்துகளுடனும் சேர்ந்து மொழிமுதல் வரலாயின.
க, த, ந, ப, மஎனும் ஆவைந்து எழுத்தும்எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே(தொல். எழுத்து. 61)
சான்று:
கலை, காளி, கிளி, கீரி,... தந்தை, தாடி, தீமை,... நடம், நாரை, நிலம், நீர், படை, பாடி, பிடி, மடம், மாலை, மிடறு, மீனம்.
மேலே குறிப்பிட்ட க, ச, ஞ, த, ந, ப, ம, வ, ய என்னும் ஒன்பது மெய் எழுத்துகளே சங்க காலத்தில் மொழி முதலாயின. ஏனைய ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் ஒன்பது மெய் எழுத்துகளும் சங்க காலத்தில் எந்த ஓர் உயிரோடும் சேர்ந்து மொழி முதலில் வரவில்லை.
எல்லா உயிர் எழுத்துகளும், அனைத்து மெய் எழுத்துகளும் சொல்லின் இடையில் வருகின்றன. ஆனால் சொல்லின் இறுதியில் குறிப்பிட்ட எழுத்துகள் மட்டுமே வருகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ‘ஒள’ சொல்லின் இறுதியில் வருவது கிடையாது.
உயிர்ஒள எஞ்சிய இறுதி ஆகும்(தொல். எழுத்து. 69)
இந்நூற்பா ‘ஒள’ இன் உயிர்மெய்க்கும் பொருந்தும். அதாவது ‘ஒள’ என்ற உயிர் எழுத்துடன் யாதொரு மெய்எழுத்தும் சேர்ந்து மொழியின் இறுதியில் வருவதில்லை.
மெய் எழுத்துகளைப் பொறுத்தவரை ‘ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள’ எனும் பதினொன்றே சொல்லின் இறுதியில் புள்ளியுடன் வருகின்றன.
‘ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள’ என்னும்அப்பதி னொன்றே புள்ளி இறுதி(தொல். எழுத்து. 78)
சான்று:
உரிஞ், மண், வெரிந், மரம், பொன், பேய், வேர், வேல், யாழ், தேள்.
இவை தவிர ஏனைய மெய்கள் சொல்லின் இறுதியில் வராது என்ற ஒரு வழக்கம் சங்ககாலத்தில் இருந்தது. இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட எழுத்துகள் குறிப்பிட்ட இடத்தில்தான் வந்து அமைந்திருந்தமை தெரியவருகிறது.
2.3.2 இடைக்காலம்இடைக்காலத்தில் பிற மொழிகளின் தாக்கம் இருந்தது. சங்க காலத்தில் பிறமொழிச் சொற்கள் தமிழுடன் கலந்திருந்தாலும் அச்சொற்களைத் தமிழ்மொழியின் ஒலியமைப்பிற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டார்கள். எந்த ஒரு நிலையிலும் வடமொழிச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இடைக்காலத்தில் தோன்றிய வீரசோழியம் போன்ற இலக்கண நூல்கள் வடமொழி இலக்கணத்தைத் தழுவியே தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்தன. இதனால் வடமொழி போன்ற பிறமொழிச் சொற்களின் ஆதிக்கம் வேரூன்ற ஆரம்பித்தது. இதுபோன்று ஏற்பட்டதால் எழுத்து வருகை வரலாற்றில் சற்று மாறுதல் ஏற்பட்டது எனலாம். ஏனெனில் கல்வெட்டு எழுத்துகள் என்று கூறக்கூடிய கிரந்த எழுத்துகள் பயன்பாட்டுக்கு வரலாயின. இதனால் அவ்வெழுத்துகள் சொல்லின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் நிலைபெற்று வழங்கலாயின.
சங்ககாலத்தில் சொல்லப்பட்டதுபோல் உயிர் எழுத்துகளும், உயிர் மெய், மெய் எழுத்துகளும் அதன்படியே இடைக்காலத்திலும் வரலாயின. ஆனால் ஒருசில மெய் எழுத்துகள் சொல்லின் இறுதியில் சங்ககாலத்தில் உள்ளதுபோல் வராமல் போயிற்று எனலாம்.
சான்று:
‘வெரிந்’
இங்குக் கடைசியில் வரும் /ந்/ இடைக்கால இலக்கியங்களில் காணப் படவில்லை.
கிரந்த எழுத்துகளின் வருகை
‘ஷ்- முஷிக(திருப்புகழ் 13. திருச்செந்தில்)‘ஜ்- கவிராஜ( ’’ 19. திருப்பழநிமாலை)‘ஹ்- ஜெயஹர( ’’ 427. திருச்செந்தூர்)‘க்ஷ்- மோக்ஷத்தை( ’’ 52. குமரக் கோட்டம்)‘ஸ்ரீ- ஸ்ரீபாத நூபுரி( ’’ 131. திருச்செந்தூர்)மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள ‘ஸ்ரீ’ என்ற எழுத்துச் சொல்லின் முதலில் மட்டும் வருகிறது; இடையிலோ, அல்லது கடைசியிலோ வருவது இல்லை. ஏனைய எழுத்துகள் சொல்லின் இடையிலும் கடைசியிலும் வருகின்றன.
சங்ககாலத்தில் சொல்லின் இறுதியில் வந்த எழுத்து /ந்/ இடைக்காலத்தில் வழக்கொழிந்தது. அதுபோலவே சங்ககாலத்தில் யகாரம் சொல்லின் முதலில் வந்து இடைக்காலத்தில் ஆகாரம் ஆக மாறியது, இருப்பினும் மொழிமுதல் யகரம் கெட்டு விட்டது எனலாம். இதனால் யகரம் மொழி முதல் வராத சூழல் இருந்து வந்தது தெரிய வருகிறது.
சான்று:
ஆரிக் கொடுமை செய்தாரென்று அன்னை அறியின்
(சிலம்பு.7:38-4)
ஆரெனக் கேட்டீங் கறிகுவம் என்றே(சிலம்பு.1:22)
இச்சான்றுகளில் யார் என்பது ஆர் என (யா>ஆ) மாறி வழங்குவதைக் காணலாம்.
சகரமெய் அ,ஐ,ஒள என்னும் மூன்று உயிர்களோடு சேர்ந்து மொழிமுதல் வாராது என்று தொல்காப்பியம் விதித்திருக்க, சங்க இலக்கியத்தில் அகர உயிரோடும், ஐகார உயிரோடும் சேர்ந்து மொழி முதலானதை மேலே கண்டோம். ஆனால் இடைக் காலத்தில் ஒளகாரத்துடன் இணைந்தும் மொழிக்கு முதலில் வருவதைக் காணமுடிகிறது.
சான்று:
‘சௌபலர்’ (வில்லிபாரதம். 3:4)
அது போன்றே சங்க காலத்தில் ரகரமும், லகரமும் முதலில் வருவது கிடையாது. இடைக்காலத்தில் இவ்விரண்டு எழுத்துகளும் முறையே ‘இ’, ‘உ’ என்னும் உயிர்களை மொழிமுதல் துணையாகக் கொண்டு வழங்கி வருகின்றன.
சான்று:
‘இராமன்’ (மணிமேகலை. 27:53)
‘இரவி குலத்து’ (மணிமேகலை. 24:58)
‘உலோகாயதம்’ (மணிமேகலை. 27:78)சங்க இலக்கியங்களில் யகரம் அகரத்தோடும், ஆகாரத்தோடும், ஊகாரத்தோடும் இணைந்து வர இடைக் காலத்தில் தோன்றிய நூல்களிலோ ஓகாரத்தோடும் ஒளகாரத்தோடும் இணைந்து வருகிறது.
சான்று:
‘யோகம்’ (மணிமேகலை. 3)
‘யோசனை’ (மணிமேகலை. 6:211)
‘யௌவனம்’ (சூடாமணி நிகண்டு)சொல்லின் இடையில் உயிர் எழுத்துகள் இரண்டு (vowel cluster) சேர்ந்து வருவதில்லை. அவ்வாறு வந்தால் அவற்றை உடன்படுத்த வகரம் அல்லது யகரம் அவற்றிற்கு இடையில் உடம்படுமெய்யாக வரும். சொல்லின் இடையில் மெய் எழுத்துகள் தன்னுடன் தானும் தன்னுடன் பிறவும் என்று பலவாறு மயங்கிவரும்.
சான்று:
பக்கம், அச்சம் - தன்னுடன் தான் மயங்கியது.
தங்கம், பஞ்சம் - தன்னுடன் பிற மயங்கியது.தற்காலத் தமிழில் எல்லா உயிர் எழுத்துகளும் மொழிமுதல் வருகின்றன. அதுபோலவே ஆய்த (ஃ) எழுத்தும் மொழி முதல் வருகிறது. இது தற்காலத் தமிழில் காணப்படும் குறிப்பிடத்தக்க இயல்பாகும்.
சான்று:
ஃபைட் - ‘fight’
பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்து விட்டன எனப் பார்த்தோம். ஆதலால் அம்மொழிகளில் உள்ள சொற்களை அவற்றின்படியே உச்சரிப்பதற்காகத் தமிழ்மொழியில் அதற்கு இணையான எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டி வருகிறது. இதனால் பழைய தமிழ் இலக்கண மரபினைப் பின்பற்ற முடியாமல் போய் விடுகிறது.
தொல்காப்பியர் மெய் எழுத்துகள் தனியே மொழி முதலில் வருவதில்லை என்றார். ஆனால் தற்காலத் தமிழில் பிற மொழிச்சொற்கள் கலந்துள்ளதால் தொல்காப்பியர் கூற்று வலுவிழந்து விட்டது எனலாம். வேற்றுமொழிச் சொற்களை அவற்றின் ஒலியமைப்பிற்கு ஏற்ப அப்படியே எழுதும்போது மெய் எழுத்துகள் தனித்து மொழி முதலில் வருவதைக் காணலாம்.
சான்று:
க்ராஸ் ரோடு - ‘cross road’
ககர மெய்யில் சொல் ஆரம்பம் ஆவதைக் காண முடிகிறது.
மற்றும் எல்லாக் கிரந்த எழுத்துகளும் மொழி முதலில் வருகின்றன. சொல்லின் இடையில் அனைத்து உயிர் எழுத்துகளும், மெய்எழுத்துகளும் வருகின்றன.
சொல்லின் இறுதியில் தொல்காப்பியர் சுட்டிக்காட்டிய மெய்களே அல்லாமல், வேறுபல மெய் எழுத்துகளும் வருவதைக் காணமுடிகிறது. பழந்தமிழில் ஙகரம் சொல்லின் இறுதியில் வருவது கிடையாது. இன்றும் அவ்வாறே உள்ளது. இருப்பினும் பிறமொழிச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்வதால் ஙகரம் இறுதியில் வருகிறது.
சான்று:
‘வி.பி.சிங்’
இதுபோன்று இன்னும்பல மெய் எழுத்துகள் இறுதியில் வருகின்றன. (க், ச், ட், த், ப், வ்)
சான்று:
‘பேங்காக்’
‘பீச்’
‘வெங்கட்’
‘பாக்தாத்’
‘பஞ்சாப்’
‘மாதவ்’இவை அல்லாமல் கல்வெட்டு எழுத்துகள் என்று கூறக்கூடிய கிரந்த எழுத்துகளில் (ஸ், ஷ், க்ஷ், ஜ், ஹ், ஸ்ரீ) சில எழுத்துகள் மொழி முதலிலும் கடைசியிலும் வருகின்றன.
சான்று:
‘ஸ்போர்ட்ஸ்’
‘ஹஜ்’
‘பிரஷ்’இவ்வாறான வருகையால் மெய்மயக்கங்களிலும் (consonant cluster) பலவிதமான மாற்றங்கள் சங்க காலத்திலிருந்து இடைக்காலத்திலும், இடைக்காலத்திலிருந்து தற்காலத்திலும் தோன்றி நிலைபெற்றன.
தற்காலத்தில் ‘கட், தவ், க்த், ஹஜ், ரஷ், ட்ன், ட்ல, ட்ஜ், ன்ச் , ன்ய், ன்ஜ், ர்ர், ர்ஜ், லஷ்’ போன்ற புதிய புதிய மெய்மயக்கங்கள் பிறமொழிச் சொற்களால் தமிழினுள் வந்து புகுந்துவிட்டன எனலாம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I