Primary tabs
-
4.6 சொல்லியல் மாற்றங்கள்
ஒரு சொல் இரட்டித்து வரும்போது அதில் சில குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது எழுத்துப்புணர்ச்சி போன்று இல்லாது ஒரு சொல்லின் தாக்கத்தை வெளிக்காட்டுகிறது. இதனையே சொல்லியல் மாற்றம் எனலாம்.
இதில் பல வகையான மாற்றங்கள் உள்ளன.
காலத்தைக் குறிக்கும் சொற்களைக் காலச்சொற்கள் என்கிறோம். இவை இரட்டித்து ஒவ்வொரு / சரியான என்ற பொருளைஉணர்த்தும்போது அச்சொற்கள் இரட்டிக்கும் வடிவத்தில் மாற்றம் காணப்படுகின்றது.
சான்று:
வாரம் - வாராவாரம் - ஒவ்வொரு வாரமும்
மாதம் - மாதாமாதம் - ஒவ்வொரு மாதமும்
வருஷம் - வருஷாவருஷம் - ஒவ்வொரு வருஷமும்
காலம் - காலாகாலம் - ஒவ்வொரு காலமும்
நேரம் - நேராநேரம் - ஒவ்வொரு நேரமும்இங்கே காட்டிய சான்றுகளில் வாரம், மாதம் போன்றகாலப்பெயர்கள் ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும் என்றபொருளில் இரட்டிக்கும்போது, நிலைமொழியின் (வாரம், மாதம்) இறுதியில் உள்ள மகரம் கெட்டு (வார, மாத), அதற்கு முன்னுள்ள அகரம் ஆகாரமாக (வார>வாரா, மாத>மாதா) மாறி, வாராவாரம், மாதாமாதம் என அமைவதைக் காணலாம். இம்மாற்றத்தைச் சொற்களில் ஏற்படும் மாற்றமாகக் கருதலாம்.
‘சம்பந்தம்’, ‘போட்டி’ போன்ற சொற்கள் இரட்டித்து வரும்போது மேலே கூறிய காலப்பெயர்களுக்குக் கூறப்பட்ட புணர்ச்சி விதியையே பெறுகின்றன.
சான்று:
‘சம்பந்தா சம்பந்தம்’ (சம்பந்தம் + சம்பந்தம்)
‘போட்டா போட்டி’ (போட்டி + போட்டி)இச்சான்றுகளில், ‘சம்பந்தா சம்பந்தம்’ என்ற தொடரில், ‘சம்பந்தம்’ என்ற நிலைமொழியின் ஈற்று மெய்யாகிய மகரம் கெட்டு (சம்பந்த), அதற்கு முன்னுள்ள அகர உயிர் ஆகாரமாக நீண்டு ‘சம்பந்தா’ என்று மாற்றம் பெற்று அமைவதைக் காணலாம்.
‘போட்டா போட்டி’ என்ற தொடரில், ‘போட்டி’ என்ற நிலைமொழியின் ஈற்று உயிராகிய இகரம் கெட்டு, அது ஆகாரமாக நீண்டு ‘போட்டா’ என்று மாற்றம் பெற்று அமைவதைக் காணலாம்.
‘ஏழை’ என்ற சொல் ‘மை’ என்னும் பண்பு விகுதியை ஏற்கும்போது ‘ஏழ்’ என்றாகிறது.
சான்று:
ஏழை + மை = ஏழ்மை
இங்கே ‘ஏழை’ என்ற சொல், ஈற்று உயிர் ஆகிய ‘ஐ’ கெட்டு ‘ஏழ்’ என்றாவதைக் காணலாம். மைவிகுதி சேரும்போது ஈற்று உயிர் கெட்டுவிடுகிறது என்ற புதிய புணர்ச்சி விதி இத்தகைய சொல்லுக்கு மட்டுமே பொருந்தும்.
பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபு ஏற்கும்போது சாரியை பெற்று வருவது இயல்பு. ஆனால் இன்றைய தமிழில் சாரியைகள் குறைவாகவே உள்ளன.
‘(அ)த்து’
(அ)ற்று’
‘அன்’
‘இன்’என்னும் சில சாரியைகள் உள்ளன. இவை யாவும் இன்றைய தமிழில் மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் பயன்பாடு குறித்துக் கீழே காண்போம்.
(அ)த்து
(அ)த்து சாரியை அகர உயிரை அடுத்து வரும் மகர ஈற்றுப் பெயர்களில் (மரம்) எல்லா வேற்றுமை உருபுகளுக்கு முன்னும் சேர்க்கப்படுகிறது.
சான்று:
படம் - படத்தை
- படத்தால்
- படத்தோடு
- படத்துக்கு
- படத்தில்இது போன்று தமிழில் வழங்கி வரும் பிற மொழிச் சொற்களுடனும் ‘(அ)த்து’ சாரியை வருகிறது.
சான்று:
பாரம் - பாரத்தை
- பாரத்தால்
- பாரத்தோடு
- பாரத்துக்கு
- பாரத்தில்இயற்பெயர்களோடும் ‘(அ)த்து’ச் சாரியை சேர்க்கப்படுகிறது.
சான்று:
ஆறுமுகம் - ஆறுமுகத்தை
- ஆறுமுகத்தால்
- ஆறுமுகத்தோடு
- ஆறுமுகத்துக்குஆனால் ஆகார, ஈகார, ஊகார மெய்யை அடுத்து வரும் மகரத்தை இறுதியாக உடைய சொற்கள் பிற மொழிச்சொற்களே ஆகும். அவை இது போன்று '(அ)த்து’ச் சாரியை ஏற்பதில்லை எனத் தெரியவருகிறது. ‘(அ)த்து’ச் சாரியை இல்லாமலேயே வேற்றுமை உருபுகளை ஏற்று வரும்.
சான்று:
முகாம் - முகாமுக்கு, முகாமில்
டீம் - டீமுக்கு, டீமால்
ரூம் - ரூமுக்கு, ரூமில்
முஸ்லீம் - முஸ்லீமுக்கு, முஸ்லீமோடு‘இன்’
‘இன்’ என்ற சாரியை இன்றைய தமிழில் ஆறாம் வேற்றுமைப் பொருளிலும், ஏழாம் வேற்றுமைப் பொருளிலும் வருவது ஓரளவு காணப்படுகிறது.
சான்று:
‘நூலின் விலை’ - ‘நூல் விலை’
‘ஏழையின் கண்ணீர் - ‘ஏழைக் கண்ணீர்’
‘வீட்டின் மேல்’ - வீடுமேல்