Primary tabs
4.3 இகர ஈற்றுச் சிறப்பு விதிகள்
நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் உள்ள நூற்பாக்கள் சிலவற்றில் இகர ஈற்றுச் சிறப்பு விதிகளைப் பற்றிப் பேசுகிறார்.
- நாழி, உரி என்னும் சொற்களுக்குப் புணர்ச்சி விதி
நாழி, உரி என்பன பழங்காலத்தில் வழங்கிய முகத்தல் அளவைப் பெயர்கள். நாழி என்ற சொல் ஒரு படியையும், உரி என்ற சொல் அரைப் படியையும் குறிக்கும்.
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் (நல்வழி, 28:1)
என்ற ஔவையாரின் நல்வழிப் பாடலில் நாழி என்ற சொல் வந்திருப்பது காணலாம்.
நன்னூலார் நாழி என்ற சொல்லின் முன்னர் உரி என்ற சொல்லும், உரி என்ற சொல்லின் முன்னர் ஏற்ற பிற சொற்களும் புணரும் முறை பற்றி இரண்டு விதிகளைக் கூறுகிறார்.
1.
நாழி என்னும் முகத்தல் அளவைப் பெயர் நிலைமொழியாக நிற்கும்போது, உரி என்னும் மற்றொரு முகத்தல் அளவைப் பெயர் வருமொழியாக வந்தால், நாழி என்பதன் ஈற்றில் உள்ள ழி என்னும் உயிர்மெய் நீங்க, அவ்விடத்தே டகரமெய் வரும்.
சான்று:
நாழி + உரி
நா + உரி (நாழி என்பதன் ஈற்று உயிர்மெய் ழி நீங்கியது)
நாட் + உரி (ழி நீங்க அவ்விடத்தே டகரமெய் வந்தது)
= நாடுரி(நாடுரி என்பதற்கு ஒன்றரைப்படி என்று பொருள்)
2.
உரி என்னும் முகத்தல் அளவைப் பெயர் நிலைமொழியாக நிற்கும்போது, அதன் முன்னர் ஏற்ற சொற்கள் வந்து சேரும்போது, நிலைமொழியின் பின் யகர உயிர்மெய் வந்துசேரும்.
சான்று:
உரி + உப்பு = உரியவுப்பு
உரி + பயறு = உரியபயறு
உரி + மிளகு = உரியமிளகு
உரி + வரகு = உரியவரகுநன்னூலார் இவ்விரு புணர்ச்சி விதிகளையும் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.
உரிவரின் நாழியின் ஈற்றுஉயிர் மெய்கெட
மருவும் டகரம்; உரியின் வழியே
யகரஉயிர் மெய்யாம் ஏற்பன வரினே (நன்னூல், 174)(மருவும் - வரும்; ஏற்பன = ஏற்ற சொற்கள்)
- புளி என்னும் சொல்லுக்குப் புணர்ச்சி விதி
புளி என்னும் இகர ஈற்றுச் சொல் புளியமரம், புளியம்பழம், புளிப்புச்சுவை என்னும் பல பொருளை உணர்த்தும் ஒரு சொல்லாகும். இவற்றுள் புளிப்புச்சுவை என்பது அறுவகைச் சுவைகளுள் ஒன்று.
சுவையை உணர்த்தும் புளி என்ற சொல்லின் முன்னர், வல்லினத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால், அவ்வல்லினம் ‘இயல்பினும் விதியினும்’ என்ற பொதுவிதிப்படி மிகுவதோடு, அதற்கு இனமான மெல்லினமும் சில சமயம் மிகும் என்கிறார் நன்னூலார். இதனை,
சுவைப்புளி முன்இன மென்மையும் தோன்றும் (நன்னூல், 175)
என்ற நூற்பாவில் குறிப்பிடுவார்.
சான்று:
புளி + கறி = புளிங்கறி
புளி + சோறு = புளிஞ்சோறு
புளி + தயிர் = புளிந்தயிர்
புளி + பாளிதம் = புளிம்பாளிதம் (பாளிதம் - சோறு )இவை பொதுவிதிப்படி முறையே புளிக்கறி, புளிச்சோறு, புளித்தயிர், புளிப்பாளிதம் என வல்லினம் மிக்கே பெரும்பாலும் வரும்.
- அல்வழிப் புணர்ச்சியில் இகர, ஐகார ஈற்று அஃறிணைப் பெயர்கள்
அல்வழிப் புணர்ச்சியில் இகர, ஐகார ஈற்று அஃறிணைப் பெயர்கள் முன்னர் வல்லினம் வருமாயின், அவ்வல்லினம் இயல்பாகவும், மிகுந்தும், விகற்பமாகவும் வரும்.
அல்வழி ‘இ, ஐ’ம் முன்னர் ஆயின்
இயல்பும், மிகலும், விகற்பமும் ஆகும் (நன்னூல், 176)இந்நூற்பாவில் கூறப்படும் புணர்ச்சி விதி இகர ஈற்றிற்கும், ஐகார ஈற்றிற்கும், ஒரு சேர உரியதாக உள்ளதால், நன்னூலார் இங்கே இகர ஈற்றோடு, ஐகார ஈற்றையும் உடன்வைத்துக் கூறினார்.
(i) வல்லினம் இயல்பாதல்
எழுவாய்த் தொடரிலும், உம்மைத் தொகையிலும் இ, ஐ முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.
சான்று :
புலி + சிறியது = புலி சிறியது
யானை + பெரியது = யானை பெரியதுஇவை எழுவாய்த் தொடர்.
செடி + கொடி = செடி கொடி (செடியும் கொடியும்)
யானை + குதிரை = யானை குதிரை (யானையும் குதிரையும்)இவை உம்மைத் தொகை.
(ii) வல்லினம் மிகுதல்
இருபெயரொட்டுப் பண்புத்தொகையிலும், உவமைத் தொகையிலும் இ, ஐ முன்னர் வரும் வல்லினம் மிகும்.
சான்று :
மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள் (மார்கழி ஆகிய திங்கள்)
சாரை + பாம்பு = சாரைப் பாம்பு (சாரை ஆகிய பாம்பு)இவை இருபெயரொட்டுப் பண்புத் தொகை.
காவி + கண் = காவிக்கண் (காவி மலர் போன்ற கண்)
பனை + கை = பனைக்கை (பனைமரம் போன்ற கை)இவை உவமைத் தொகை.
(iii) விகற்பமாதல்
சில எழுவாய்த் தொடர்களில் இ, ஐ முன்னர் வரும் வல்லினம் விகற்பம் ஆகும். அதாவது ஒரே புணர்ச்சியில் இயல்பாகவும், வல்லினம் மிக்கும் வரும்.
சான்று:
கிளி + சிறிது = கிளி சிறிது, கிளிச்சிறிது
தினை + சிறிது = தினை சிறிது, தினைச் சிறிதுதன் மதிப்பீடு : வினாக்கள் - I