தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஐகார ஈற்றுச் சிறப்பு விதிகள்

  • 4.7 ஐகார ஈற்றுச் சிறப்பு விதிகள்

    அல்வழிப் புணர்ச்சியில், ஐகாரத்தை ஈற்றிலே உடைய அஃறிணைப் பெயர்களின் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகவும், மிகுந்தும், விகற்பமாகவும் வரும் என்பதை இகர ஈற்றுச் சிறப்பு விதிகளில் ஏற்கெனவே பார்த்தோம்.

    வேற்றுமைப் புணர்ச்சியில் ஐகார ஈற்றுச் சொற்கள் நிலைமொழிகளாக நின்று, வருமொழிகளோடு புணரும் முறை குறித்து நன்னூலார் இரண்டு நூற்பாக்களில் கூறுகிறார். அவற்றைச் சான்றுடன் காண்போம்.

    • ஐகார ஈற்றுச் சொற்களின் முன்னர் மெய் எழுத்துகள் புணர்தல்

    ஐகார ஈற்றுச் சொற்கள் சில வேற்றுமைப் புணர்ச்சியில் வரும்போது, ஈற்றில் உள்ள ஐகாரம் கெடுதலுடன், அம் என்னும் சாரியையைப் பெற்று முடிவதும் உண்டு.

    வேற்றுமை ஆயின் ஐகான் இறுமொழி
    ஈற்று அழி வோடும்அம் ஏற்பவும் உளவே                  (நன்னூல், 202)

    (அழிவோடும் - கெடுதலுடன்; அம் - ஒரு சாரியை)

    சான்று:

    தென்னை + தோப்பு > தென்ன் + தோப்பு >
                        தென்ன் + அம் + தோப்பு = தென்னந்தோப்பு

    ஆவிரை + வேர் > ஆவிர் + வேர் >
                      ஆவிர் + அம் + வேர் = ஆவிரம் வேர்

    இச்சான்றுகளில் தென்னை, ஆவிரை ஆகிய சொற்கள், ஈற்று ஐகாரம் கெட்டு, அம் சாரியை பெற்று முடிந்தது காணலாம்.

    நூற்பாவில் அழிவொடும் என்ற உம்மை கொடுத்துக் கூறியதனால், ஈற்றில் உள்ள ஐகாரம் கெடாமலேயே அம் என்னும் சாரியையைப் பெற்று முடிவதும் உண்டு என்பது பெறப்படும்.

    சான்று:

      புன்னை + கானல் > புன்னை + அம் + கானல் = புன்னையங் கானல்
      முல்லை + புறவம் > முல்லை + அம் + புறவம் = முல்லையம் புறவம்

    (புன்னை - ஒரு மரம்; கானல் - கடற்கரைச் சோலை ; முல்லை - ஒரு மலர்; புறவம் - காடு)

    இச்சான்றுகளில் புன்னை, முல்லை ஆகிய சொற்கள், ஈற்று ஐகாரம் கெடாமலேயே அம் சாரியை பெற்று முடிந்தது காணலாம்.

    • பனை என்னும் சொல்லுக்குப் புணர்ச்சி விதி

    வேற்றுமைப் புணர்ச்சியில் பனை என்னும் பெயர் நிலைமொழியாக வரும்போது வருமொழிகளுடன் புணரும் முறை பற்றி நன்னூலார் நான்கு விதிகள் கூறுகிறார்.

    1.

    பனை என்னும் பெயரின் முன்னர், கொடி என்னும் பெயர் வருமாயின், வருகின்ற மொழி முதல் ககர மெய் மிகும்.

    சான்று:

    பனை + கொடி = பனைக்கொடி

    (பனைக்கொடி - கண்ண பிரானின் அண்ணனாகிய பலராமனுடைய கொடி)

    2.

    பனை என்னும் பெயரின் முன்னர்க் க, ச, த, ப என்னும் வல்லின மெய்கள் வருமாயின், நிலைமொழி (பனை) ஈற்று ஐகாரம் கெட்டு, அம் என்னும் சாரியை பெறும்.

    சான்று:

    பனை + கிழங்கு = பனங்கிழங்கு
    பனை + சாறு = பனஞ்சாறு (பதநீர்)
    பனை + தோப்பு = பனந்தோப்பு
    பனை + பழம் = பனம்பழம்

    3.

    பனை என்னும் பெயரின் முன்னர்த் திரள் என்ற சொல் வருமாயின், வருகின்ற மொழி முதல் தகர மெய் மிக்கும், ஈற்று ஐகாரம் கெட்டு அம் சாரியை பெற்றும் வரும்.

    சான்று:

    பனை + திரள் = பனைத்திரள், பனந்திரள்

    4.

    பனை என்னும் பெயரின் முன்னர் அட்டு என்னும் பெயர் வருமாயின், நிலைமொழி ஈற்றில் உள்ள ஐகாரம் கெட்டு, வருமொழி முதலில் உள்ள அகரம் ஆகாரமாக நீளும்.

    சான்று:

    பனை + அட்டு
    பன் + அட்டு (ஐகாரம் கெட்டது)
    பன் + ஆட்டு (அகரம் ஆகாரமாக நீண்டது)
    = பனாட்டு

    (பனாட்டு - பனைவெல்லக் கட்டி)

    மேலே சொன்ன நான்கு புணர்ச்சி விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

    பனைமுன் கொடிவரின் மிகலும், வலிவரின்
    ஐ போய் அம்மும், திரள்வரின் உறழ்வும்,
    அட்டு உறின் ஐ கெட்டு அந் நீள்வுமாம் வேற்றுமை                     (நன்னூல், 203)

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 18:56:09(இந்திய நேரம்)