தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வேற்றுமைகள் - I

  • 2.4 வேற்றுமைகள் - I

        பெயர்ப்பொருளை வேற்றுமை செய்வன வேற்றுமை எனப்படும். தமிழில் எட்டு வேற்றுமைகள் இருக்கின்றன. அவற்றுள் முதல் நான்கு வேற்றுமைகள் பற்றி இங்கே காண்போம்.

    2.4.1 எழுவாய் வேற்றுமை

        எழுவாய் வேற்றுமை என்ற பெயர் முதல் வேற்றுமையைக் குறிக்கும். தொல்காப்பியர் இதனைப் 'பெயர் வேற்றுமை' என்றும் குறிப்பிடுகின்றார்.

        அவை தாம்
        பெயர் ஐ ஒடு கு
        இன் அது கண் விளி யென்னும் ஈற்ற
                 (தொல்.சொல். 64)

    மற்ற வேற்றுமைகளுக்குத் தனி வேற்றுமை உருபுகள் இருப்பதனால் அவற்றை ஐ, ஒடு என்று குறிப்பிடுகின்றார். இவ்வேற்றுமைக்கு என்று தனி ஒரு வேற்றுமை உருபு இல்லாத காரணத்தால் இதனை முதல் வேற்றுமை என்று கூறலாம். எந்த வேற்றுமை உருபினையும் வினையினையும் இது ஏற்காது. பிற சொல்லோடு சேராது, தனித்து நிற்கும், ஒரு சொற்றொடரில் பயனிலைக்கு (வினைச்சொல்லுக்கு) எழுவாயாக - முதலாக (அந்த வினையில் செயல்பாட்டுக்குக் காரணமாக) அமைவதனாலேயே இது எழுவாய் வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

        அவற்றுள்
        எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே
                 (தொல்.சொல். 65)

        பிற்காலத்தில் - வேற்றுமைகளை வேற்றுமை உருபால் பெயரிட்டு அழைத்த காலத்தில் - உருபின்றி, பெயர் மட்டும் தனித்து நின்ற இவ்வேற்றுமையைப் ‘பெயர் வேற்றுமை' என்று அழைக்கத் தொடங்கினர். பின் வந்தோரும் அவ்வழக்கைத் தொடர்ந்தனர். இவ்வேற்றுமை, 'எழுவாய் வேற்றுமை' என்றும், 'முதல் வேற்றுமை' என்றும், 'ஒன்றாம் வேற்றுமை' என்றும் 'பெயர் வேற்றுமை' என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்வேற்றுமை
    எவ்விதமான உருபும் ஏற்காது. ஒரு சொற்றொடரில் உள்ள எழுவாய் திரிபு ஏதும் இல்லாது, பொருள் உணர்த்தும். இந்த எழுவாய் வேற்றுமை எந்த ஒரு வேற்றுமை உருபினையும் ஏற்காமல் இருந்தாலும் மொழியியலின்படி உருபனியியலில் (Morphology) மட்டும் இல்லாமல் தொடரியல் (Syntax) மற்றும் பொருண்மையியல் (Semantics) ஆகியவற்றில் வேற்றுமைப் பொருளை உணர்த்துகிறது. முதல் வேற்றுமை சங்ககாலம், இடைக்காலம், தற்காலம் ஆகிய முக்காலங்களிலும் எவ்விதமான வேற்றுமை உருபும் ஏற்காமல் நின்று பொருள் உணர்த்தி வருகின்றது.

  • சங்ககாலம்
  • சான்று:

        மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
                 (புறநானூறு . 191)

        மக்களும் - எழுவாய்; நிரம்பினர் - பயனிலை

        அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
                 (குறுந்தொகை . 40)

        நெஞ்சம் - எழுவாய்; கலந்தன - பயனிலை

  • இடைக்காலம்
  •     ஆ, அவன், மக்கள், சாத்தன் போன்ற பெயர்கள் பயனிலை ஏற்று, எழுவாய்ப்பொருள் உணர்த்தின. நன்னூல் போன்ற இடைக்கால இலக்கணங்கள் அவற்றின் நூற்பாவில் சுட்டிக் காட்டியுள்ளன.

    சான்று:

        எழுவாய் உருபு திரிபில் பெயரே     (நன்னூல்.295)

        ஆடலன், ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே
                 (தேவாரம் 1.105:1)

        ஆதிரையன் - எழுவாய்; அமர்ந்தான் - பயனிலை

  • தற்காலம்
  • சான்று:

        கண்ணன் கதவைத் திறந்தான்

        கண்ணன் - எழுவாய்; திறந்தான் - பயனிலை

    2.4.2 இரண்டாம் வேற்றுமை

        இரண்டாம் வேற்றுமை 'ஐ' என்ற வேற்றுமை உருபேற்று வரும்.

         இரண்டா குவதே
         ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
         எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு
         அவ்விரு முதலின் தோன்றும் அதுவே
                 (தொல்.சொல். 71)

    இவ்வேற்றுமையைச் 'செயப்படுபொருள் வேற்றுமை' என்றும் 'ஐ' வேற்றுமை என்றும் அழைப்பர். அன்று முதல் இன்று வரை 'ஐ' என்னும் வேற்றுமை உருபே இரண்டாம் வேற்றுமை உருபாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

  • சங்ககாலம்
  • சான்று:

        ................. ஒளிரும் தாழ்இருங் கூந்தல்
        பிறரும் ஒருத்தியை நம்மனைத் தந்து
                 (அகநானூறு 46 : 9)

  • இடைக்காலம்
  •     இடைக்காலத்திலும் எவ்வித மாற்றமும் இன்றி இது வருதலைக் காணலாம்.

    சான்று:

        செயிர்தரும் கொற்ற மன்னர்
        சேனை
    யை மானும் அன்றே
                       (கம்ப. பால. ஆற்றுப்படலம்.25)

        அந்தியம் போதில் அரியுரு ஆகி
        அரி
    யை அழித்தவனை
                   (நாலாயிரம். திருப்பல்லாண்டு. 5.3)

  • தற்காலம்
  • சான்று:

        கண்ணனைப் பார்த்தான்

        அன்று முதல் இன்று வரை பெரும்பாலும் பொருள் மயங்கி வராத சூழலில் இவ்வேற்றுமை உருபு 'ஐ' யினைப் பயன்படுத்துவது இல்லை.

    சான்று:

        மரம் வெட்டினான்
        கண்ணன் நாற்காலி செய்தான்

    ஏனென்றால் இவ்வாறு எழுதுவது உயர்ந்த நடையென்று எண்ணி, அவ்விரண்டாம் வேற்றுமை உருபினைப் பயன்படுத்தாமல்
    இருப்பதும் உண்டு.

    2.4.3 மூன்றாம் வேற்றுமை

        மூன்றாம் வேற்றுமை உருபு 'ஒடு' ஆகும்.

         மூன்றா குவதே
         ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
         வினை முதல் கருவி அனைமுதற் றதுவே
                                  (தொல்.சொல். 73)

    இவ்வேற்றுமையை     'ஆயுத     வேற்றுமை'     என்பர். இவ்வேற்றுமைக்கான வேற்றுமை உருபு 'ஒடு' என்பதாகும். இவற்றோடு     'ஆன்'     என்பதனையும்     தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ளமை தெரியவருகிறது. ஆனால் எவ்வேற்றுமைக்கு இதனைப் பயன்படுத்தினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    சான்று:

         சொல்லிய முறையான் சொல்லவும் படுமே
                 (தொல்.பொருள். 5)

    இருப்பினும் இவ் 'ஆன்' மூன்றாம் வேற்றுமைக்குப் பயன்பட்டது தெரியவருகிறது. நாளடைவில் 'ஆன்' என்னும் வேற்றுமை உருபு கருவி வேற்றுமைப் பொருளைப் பெறத் தொடங்கியது.

        'வாளான் வெட்டினான்'

        ஒருசொல் எவ்வாறு எந்த நிலையில் நடந்தது என்பதைக் குறிக்க அது மாறியது எனலாம். மேலே கூறப்பட்ட சான்றினை நாம் ஆங்கிலத்தில் 'with' (Instrumental case marker preposition) என்பது கருவிப்பொருளும் (துணை செய்தல்) உடனிகழ்ச்சிப் பொருளையும் (கூடவே இடம்பெறுதல்) பெற்றுள்ளமையை ஒப்பு நோக்கலாம்.

        'He came with me'
        'He came with a sword'
        'He cut it with his sword'

  • சங்ககாலம்
  • சான்று:

        'ஒடு'

         கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு
         பெருந்தேன் இழைக்கும் நாட
    னொடு நட்பே
                 (குறுந்தொகை: 3:3-4)

        'ஆன்'

         அறியாமையான் மறந்து, துப்பு எதிர்ந்தநின்
         பகைவர் நாடும் கண்டு வந்திசினே
                 (பதிற்றுப்பத்து : 15:14-15)

    அக்காலத்தில் 'ஒடு' என்னும் வேற்றுமை உருபுக்கு 'ஓடு' என்னும் மாற்றுருபு பயன்பாட்டில் இருந்தது.

    சான்று:

         ஆவோடு அல்லது யகரம் முதலாது
                 (தொல்.எழுத்து. 65)

    என்கிறார். ஆக 'ஆன்', 'ஒடு', 'ஓடு' போன்ற வேற்றுமை உருபுகள் தமக்குள் வேற்றுமையின்றி மாறி மாறி வந்தது தெரிய வருகிறது.

  • இடைக்காலம்
  •     'ஆன்' என்ற வேற்றுமை உருபு 'ஆல்' ஆக மாற்று வடிவமுற்று வழங்கலானது. இம்மாற்றம் சங்க மருவிய காலம் என்று சொல்லக்கூடிய இடைக்காலத்திற்கும் சற்று முன்பாக மாறலானது.

    சான்று:

        வெல்லல் ஆம் இராமனால்; பிறரும் வெல்வரோ?
                      (கம்ப, 5949)

    ஆக மொத்தம் நான்கு வடிவங்கள் வழக்கில் இருந்தன (ஆல், ஆன், ஒடு, ஓடு). இக்காலகட்டத்தில் இம் மூன்றாம் வேற்றுமை உருபு 'ஆன்', 'ஓடு' இவ்விரண்டு உருபுக்குள்ளே ஆழமான ஒரு பிரிவு ஏற்பட்டது. அதாவது 'ஆன்' கருவியையும் 'ஓடு' உடனிகழ்ச்சியையும் குறிக்க வந்தன.

        மூன்றாவதன் உருபு ஆல், ஆன், ஓடு, ஒடு
        கருவி கருத்தா உடனிகழ்வு அதன்பொருள்
                    (நன்னூல் - 297)

  • கருவிப்பொருள்
  •     வாளால் வெட்டினான் (நன்னூல் உரை - 297)

  • உடனிகழ்ச்சி
  •     இடைக்காலத்தில் 'ஆல்', 'ஆன்' வேற்றுமை உருபுகள் வரும் இடங்களில் 'கொண்டு' என்பதும், 'ஒடு', 'ஓடு' வேற்றுமை உருபுகள் வரும் இடங்களில் 'உடன்' என்பதும் சொல்லுருபுகளாக வந்து நின்றன. ’சொல்லுருபு' (Postposition) என்பது வேற்றுமை உருபைப்போல் செயல்பட்டு வரும்.

    சான்று:

        வாள் கொண்டு வெட்டினான் (நன்னூல் உரை.297)
        தந்தையுடன் மைந்தன் வந்தான் (நன்னூல் உரை.297)

  • தற்காலம்
  •     தற்காலத்தில் இம் மூன்றாம் வேற்றுமையை மொழியியலார் இரண்டாகப் பிரித்துப் பயன்படுத்தி வருகிறார்கள்.

        1. கருவி வேற்றுமை (Instrumental Case)
        2. உடனிகழ்ச்சி வேற்றுமை (Associative Case)

    என்கிறார்கள்.

  • கருவிவேற்றுமை (Instrumental Case)
  • சான்று:

        'ஆல்'

        'கண்ணன் கத்தியால் பழத்தை வெட்டினான்'

    இச்சொற்றொடர் சாதாரணமாகத் தமிழில் பயன்படுத்தப்படும் எடுத்துக்காட்டு. இச்சொற்றொடரைத் தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள்,

        'கண்ணன் கத்திகொண்டு பழத்தை வெட்டினான்'

    என்கின்றனர். இச்சான்றினை நோக்கும்போது இடைக்காலத்தில் சொல்லுருபாக வந்த 'கொண்டு' தமிழகத்தின் ஒரு பகுதியில் வேற்றுமை உருபாகப் பயன்பட்டு வருவது தெரியவருகிறது. இதனை வட்டாரவழக்கு (regional dialect) என்பர்.

  • உடனிகழ்ச்சி வேற்றுமை (Associative Case)
  • சான்று:

        'ஒடு'

        'கண்ணன் அவனோடு போனான்' இவ்வேற்றுமையின் மற்றொரு உருபு 'உடன்' என்பதாகும். இவ் 'உடன்' என்னும் வேற்றுமை உருபு எழுத்துத்தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பேச்சுத்தமிழில் 'ஓடு' என்பதையே பயன்படுத்து கின்றனர்.

        இவ்வாறாக இம் மூன்றாம் வேற்றுமை ஒரே வேற்றுமை உருபு கொண்ட ஒரு வேற்றுமையாகச் சங்க காலத்திலும் பல வேற்றுமை உருபுகளைக் கொண்ட ஒரு வேற்றுமையாக இடைக் காலத்திலும் விளங்கியது. தற்காலத்தில் இரண்டு வேற்றுமைகளாகப் பிரித்து மொழியியலார் கையாளுவதும் தெரிய வருகிறது.

    2.4.4 நான்காம் வேற்றுமை

        இவ்வேற்றுமைக்கான உருபு 'கு' ஆகும்.

        நான்கா குவதே
        குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
        எப்பொரு ளாயினுங் கொள்ளும் அதுவே
                 (தொல்.சொல். 75)

        இவ்வேற்றுமைையைக் 'கொடை வேற்றுமை' என்பர். இதனை ஆங்கிலத்தில் 'Dative Case' என்பர். Dative எனும் ஆங்கிலச் சொல் 'Dativus' எனும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. இது 'கொடுத்தல்' எனும் பொருள் தரும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானதாகும்.

  • சங்ககாலம்
  • சான்று:

        வரிமணல் புனைஇய பாவைக்குக்
        குவவுச் சினைப் பூக்கொய்து     (புறநானூறு - 1)

  • இடைக்காலம்
  •     இடைக்காலத்தில் 'கு' என்னும் நான்காம் வேற்றுமை உருபோடு 'பொருட்டு' என்ற இன்னும் ஒரு உருபு வழங்கலானது.

    சான்று:

        கூழின் பொருட்டு (நன்னூல் உரை.298)

  • தற்காலம்
  •     தற்காலத்தில் 'கு' என்ற வேற்றுமை உருபே நான்காம் வேற்றுமை உருபாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மொழியியலின்படி பிரித்துப் பார்க்கும்போது '-க்கு', -உக்கு', '-கு' போன்ற மாற்றுருபுகள் வருகின்றன என்பர் மொழியியலார். மொழியியலின்படி இவ்வுருபினை விளக்குமுகமாக,

        -க்கு என்னும் மாற்றுருபு, பெயர்ச்சொல் திரிந்து (Oblique form) வரும் போது இ, ஈ, ஐ, ஆய் போன்றவை ஈற்றில் வரும்போது பயன்படுத்தப்படுகிறது.

    சான்று:

        மரத்துக்கு - மர+த்து+க்கு
        தம்பிக்கு - தம்பி+க்கு

        -உக்கு என்னும் மாற்றுருபு எல்லாப் பெயர்ச்சொல்லுக்கும் வருகிறது.

    சான்று:

        'குழந்தை பாலுக்கு அழுகிறது' - (பால்+உக்கு)

    -கு என்னும் மாற்றுருபு ஒலி நிரவல்களான (Euphonic increment)
    இன், அன் போன்றவைகளை அடுத்துவரும்.

    சான்று:

        'பாலிற்கு' - பால்+இன்+கு - பால்+இற்+கு

        'அதற்கு' - அது+அன்+கு - அது+அற்+கு

    இங்கு வருகிற 'அன்', 'இன்' போன்ற ஒலி நிரவலுக்கு அடுத்ததாகப் பின்னண்ண ஒலி (velar sound) வருவதால் அந்த 'இன்', '-ற்-' ஆக மாறிவிடுகிறது.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    வேற்றுமையாவது யாது?
    2.
    எழுவாய் வேற்றுமை என்னென்ன பெயர்களால்
    அழைக்கப்படுகின்றது?
    3.
    தற்காலத்தில் மூன்றாம் வேற்றுமையை மொழியியலார்
    எவ்வாறு பிரிக்கின்றனர்?
    4.
    நான்காம் வேற்றுமை உருபு இடைக்காலத்தில்
    என்னென்ன உருபுகளைக் கொண்டு வழக்கிலிருந்தது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-08-2017 13:13:59(இந்திய நேரம்)