தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.4 தொகுப்புரை

        இலக்கியம், வாழ்க்கையை, அதன் பல்வேறு துறைகளுடன் சார்ந்து சித்தரிக்கும் ஒரு கலைவடிவம். அதன்மீது அதுபற்றி அமைந்த திறனாய்வும் பல துறைகேளாடு உறவு கொண்டும் அவற்றைச் சார்ந்தும் அமைகிறது.

        இலக்கியம், இசை, கூத்து, ஓவியம் முதலிய பலகலைகளின் பண்புகளைக் கொண்டிருக்கிறது. மேலும் அக்கலைகள் பற்றிய பல செய்திகளையும் சொல்கிறது. திறனாய்வு, அத்தகைய கலைகளைப் பற்றிய அறிவு பெற்றிருந்தால் தான், அத்தகைய இலக்கியங்களைச் சரிவர விளக்கமுடியும்.

    • கலைப்பண்பு கொண்ட அறிவியல்

        இலக்கியத் திறனாய்வு, கலையா? அறிவியலா? சொல்லுகிற நேர்த்தி, அழகு, படைப்பாற்றல் பண்பு முதலியன இருப்பதால் கலைப்பண்பு அதிலே உண்டு. ஆனாலும் தருக்கம், புறவயத்தன்மை, காரண காரிய முறையிலான பார்வை, திறனாய்வுக்கு அவசியம். ஆதலின் அறிவியல் என்ற நிலையும் அதற்குண்டு.     சுருக்கமாகச்     சொன்னால், திறனாய்வு கலைப்பண்பு கொண்ட ஓர் அறிவியல் முறையாகும்.

    • வரலாற்று அறிவு

        திறனாய்வுக்கு வரலாற்றியல் அறிவு மிகவும் அவசியம். முதலில், திறனாய்வின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அடுத்து, குறிப்பிட்ட இலக்கியத்தின் வரலாறும், மேலும் அது கூறும் செய்திகள் அல்லது சமூகம் பற்றிய வரலாற்றறிவும் திறனாய்வுக்கு வேண்டும்.

    • சமூகவியல் அறிவு

        திறனாய்வுக்குச் சமூக பின்புலம், சமூகத் தேவை, சமூகப் பொறுப்பு, இலக்கு முதலியன உண்டு. எனவே சமுதாயவியல், திறனாய்வாளனுக்கு மிகவும் தேவையான தொடர்புடைய ஒரு துறையாகும்.

    • மொழியியல் அறிவு

        திறனாய்வுக்கு மொழியியல் பின்புலம் உண்டு. திறனாய்வு, தான் சென்று சேர்கின்ற இலக்கினையும் முறையினையும் கொண்டிருக்கிறது. ஆதலால் அதற்குரிய தனிச்சிறப்பான மொழி நடையும் நேர்த்தியும் வேண்டும்.

    • தத்துவவியல் அறிவு

        திறனாய்வு     இலக்கியத்திலுள்ள     தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் திறனாய்வே, பல கொள்கைகளையும் சிந்தனைமுறைகளையும் சார்ந்து இருக்கிறது. எனவே, திறனாய்வுக்குத் தத்துவவியல் மிகவும் தொடர்புடைய ஒரு துறையாகும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.

    திறனாய்வில் காணப்பெறும் அறிவியலின் வழிமுறைகள் யாவை?

    2.

    திறனாய்வின் மொழி, எவ்வாறு அமைந்திருக்கும்?

    3.

    ம.பொ.சிவஞானம், சிலப்பதிகாரத்தை எவ்வாறு காணுகிறார்? அதற்குரிய அவருடைய சமூகப் பின்புலம் யாது?

    4.

    திறனாய்வு, வரலாற்றியலை அறிந்திருப்பது என்பது ஏன் தேவைப் படுகிறது?

    5.

    தத்துவம் என்றால் என்ன? அதன் வரையறைக் கூறுக.

    6.

    ‘பத்தினி’ எனும் தொன்மத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலக்கிய மாந்தர்கள் யாவர்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 13:39:04(இந்திய நேரம்)