Primary tabs
4.3 சமய வரலாறு
சமய வரலாறு என்பது ஒவ்வொரு சமயமும் இவ்வுலகில் தோன்றி வளர்ந்த வரலாற்றுப் பின்னணியே ஆகும். இவ்வரலாற்றுப் பின்னணியில் அந்தந்தச் சமயங்களைத் தோற்றுவித்தவர்கள் முன்னணி வகிப்பர். காலத்தாக்கத்தால் அவ்வப்போது வந்த சமயத்தலைவர்களும் சிற்சில மாற்றங்கள் தேற்றங்கள் தந்தவர்களும் அச்சமய வரலாற்றில் இடம் பெற்று, சமய வரலாறு விரிவாக்கம் பெறும். இவ்வகையில் நோக்கும் பொழுது சமய வரலாறு என்பது சமயத் தத்துவங்களோடு கூடிய சமயச் சான்றோர்களின் வரலாறே எனலாம்.
மிகுராசு மாலையில் இஸ்லாம் சமயவரலாறு மிக விரிவாகவே காட்டப்பட்டுள்ளது. இஸ்லாம் சமயம் ஆதி மனு ஆதம் நபியிலிருந்து தொடங்குகின்றது. காலந்தோறும் வந்த சமயச் சான்றோர்களால் புனருத்தாரணம் பெற்று, அறபு நாட்டில் பிறந்த முகம்மது நபி நாயகம் (ஸல்) என்னும் ஆன்ற (ஆன்ற = மாட்சியமைப்பட்ட) பெயர் கொண்ட சான்றோரால் இவ்வுலகிற்கு அடையாளம் காட்டப்பட்டது. அன்னார் அடையாளம் காட்டுவதற்கு முன்னர், அறபு நாட்டில் இஸ்ரேலிய, யூத, கிறித்தவ சமயங்கள் ஆதிக்கம் பெற்றிருந்தன. மிகுராச மாலையில் இச்சமயங்களை நிறுவிய நாயகர்கள் தொட்டுக் காட்டப்பட்டுள்ளனர். இந்நான்கு சமயங்களும் இப்ராஹிம் நபி என்ற மூலப்பிதா ஒருவரிலிருந்தே தொடங்குவதால் மூலப்பிதாவின் வரலாறு சற்று விரிவாகவே அமைந்துள்ளது.
4.3.1 இப்ராஹிம் நபி (கி.மு. 2160-1985)
இஸ்ரேலிய, யூத, கிறித்தவ, இஸ்லாமிய சமயங்களுக்கு மூலப்பிதா இப்ராஹிம் நபி ஆவார். இஸ்ரேலிய, யூத, கிறித்தவ சமயங்கள் இவரை ஆப்ரஹாம் என்றும் இஸ்லாம் சமயம் இப்ராஹிம் நபி என்றும் அழைக்கின்றன.
இப்ராஹிம் நபி தென் இராக்கில் உள்ள ஊர் என்னும் பேரூரில் கி.மு. 2160 இல் பிறந்தார். அரூபியான ஏக இறைவன் (ஒரே கடவுள்) ஒருவனுக்கு முற்றிலும் சரணடைந்த தீர்க்கராக (அருட்செல்வராக) வாழ்ந்தார். அக்காலத்தில் அந்நாட்டை ஆண்ட நமுறூது என்ற மன்னனோ மக்களோ இவருடைய இறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இவர் அங்கிருந்த கோயிலுக்குள் புகுந்து பெரிய சிற்பம் ஒன்றைத் தவிர ஏனைய யாவற்றையும் சிதைத்து அழித்தார். அதனைக் கண்ணுற்ற மக்கள் மன்னனிடம் முறையிட்டனர். ஆத்திரமுற்ற மன்னன் இவரை நெருப்புக் குண்டத்தில் கிடத்துமாறு ஆணையிட்டான். நின் என்னும் சனீஸ்வரன் கோயிலுக்கு முன்பாக நெருப்பு மூட்டப்பட்டது. இப்ராஹீம் நபி நெருப்புக் குண்டத்தில் தூக்கிக் கிடத்தப்படும் போது பெருமழை பெய்து நெருப்பை அணைத்தது. அதேசமயம் தொகுதி தொகுதியாகக் கொசுக்கள் பறந்து வந்து மன்னன் நமுறூது மூக்கில் நுழைந்து மூளை வரை சென்று குடைந்து அவனை இறப்பிற்குள்ளாக்கியது. அவ்வாறே ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதோரும் மடிந்து வீழ்ந்தனர். இந்நிகழ்ச்சி மிகுராசு மாலையில் இப்ராஹிம் நபியின் கூற்றாக
உருப்பமாய் எனைநமு றூது போட்டதோர்
நெருப்புமா லதனிடை நின்று மேயெனை
பெருப்பமாய்க் காத்தவன் பெண்ணோ டாணல்லா
திருக்கும்நா யன்தனை ஏற்றிப் போற்றுவார்(செய். - 128)(பெருப்பமாய் = பெருக்கமாய், மிகுதியாய்)
என அமைந்துள்ளது.
இப்ராஹிம் நபி இருதாரங்களை மணம் கொண்டிருந்தார். மூத்த மனையாள் சாரா என்பார் நெடுங்காலம் பிள்ளைப் பேறில்லாமல் இருந்தார். இளையநங்கை ஹாஜிரா என்பார் இஸ்மாயில் என்னும் மகனைப் பெற்றார். 16 ஆண்டுகள் கழிந்த பின்னர், மூத்தவரான சாரா, இஸ்ஹாக் என்னும் ஆண் மகனைப் பெற்றார். இஸ்ஹாக்கின் மகன் யாக்கூப்; யாக்கூபின் பிள்ளை லேவி என்பாரின் வழியில் இஸ்ரேலிய மார்க்கத்தை நிறுவிய மூசா (மோசஸ்) நபியும், இன்னொரு பிள்ளையான யூதாவின் வழியில் யூத, கிறித்தவ மார்க்கங்களை நிறுவிய தாவீது (தாவீது ராசன்), ஈசா (இயேசு நாதர்) நபியைப் பெற்ற அன்னையாரும் தோன்றினர். தலைமகனான இஸ்மாயில் நபியின் மரபில் இஸ்லாம் சமயத்தைக் காட்டிய நபிகள் நாயகமும் பிறந்தார்.
- உயிர்ப் பலி
இறைவன் இப்ராஹிம் நபிக்குச் சில கட்டளைகள் இட்டுச் சோதித்தான். அவற்றில் ஒன்று தலை மகனைப் பலியிடக் கூறியதாகும். இப்ராஹிம் நபி தன் மகன் இஸ்மாயிலை இறைவழியில் பலியிடக் கனவு கண்டார். பொழுது புலர்ந்ததும் அதனைத் தன் மகனிடம் கூறினார். மகனும் மகிழ்வுடன் மனம் ஒப்பினார். தந்தையும் மகனும் மோரியா மலைக்கு விரைந்தனர். மலையின் மேல் சிறிது தூரம் ஏறியதும் சமவெளி ஒன்றைக் கண்டனர். மகனைப் பலியிட அதுவே ஏற்ற இடம் என இப்ராஹிம் தேர்ந்தார். மகன் இஸ்மாயிலின் கைகால்களைக் கட்டிப் படுக்க வைத்தார். கத்தியைக் கூர்மையாகத் தீட்டினார். தன்னுடைய கண்களையும் கட்டிக் கொண்டு கழுத்தில் கத்தியைச் செலுத்தினார். ரத்தம் பீரிட்டுப் பாய்ந்தது. பகீரென்ற மனத்துடன் தன்னுடைய கண்களில் கட்டி இருந்த கட்டை அகற்றினார். அறுபட்ட இடத்தை நோக்கினார். ஆடு ஒன்று அறுபட்டுக் கிடந்தது. மகன் இஸ்மாயில் எவ்விதச் சேதமும் இன்றி அருகில் நின்றிருக்கக் கண்டார். இறையருள் பாலிப்பு எய்தப் பெற்றார். இதனை ஆலிப்புலவர்,
எந்தனன் மகனிசு மாயீல் தன்னையே
வந்த நல்லேவலால் வதைக்கக் கத்தியை
கந்தரத் திருத்திய காலந் தன்னிலே
அந்தநற் கத்தி கொண்டறுப்ப தன்றியே(செய். - 129)(கந்தரம் = கழுத்து)
என்றும்
தாக்கிய கத்தியின் தாரை மேல்வர
வாக்கிய செம்மறி யருங் கடாய்தனை
நோக்கியே விடுத்து மென்னுறு மைந்தனைக்
காக்குநா யனுக்கெல்லாம் புகழ்ச்சி காணுமே
(செய். - 130)என்றும் காட்டுகின்றார்.
இப்ராஹிம் நபி இறை வழியில் தன் மகனைப் பலிதர அதற்குப் பரிகாரமாக இறைவன் ஆடு ஒன்றை அளித்த இவ்வரலாற்றை இஸ்லாமியர் ஹஜ்ஜுப் பெருவிழா நாளில், பக்ரீத் பண்டிகை என ஆடு பலியிட்டுக் கொண்டாடுவதை இன்றும் காணலாம். இஸ்ரேலிய, யூத, கிஸ்துவர்களிடம் இச்சடங்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்லாம் சமயத்தை நிறுவியவர் முஹம்மது நபி நாயகம் (ஸல்) ஆவார். இவர் அறபு நாட்டில் கி.பி. 571ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இப்ராஹிம் நபியின் தலைமகனான இஸ்மாயில் நபியின் கிளையில் வந்தவர் ஆவார். மிகுராசு மாலையில் நபிகள் பெருமானாரின் வாழ்வியல் நிகழ்ச்சிகள் பலவற்றை ஆலிப்புலவர் குறிப்பிடுகின்றார்.
- இல்வாழ்க்கை
நபிகள் பெருமானாரின் துணைவியார் கதீஜா பிராட்டியார் ஆவார். இவர், குவைலீது என்னும் செல்வரின் மகள். மேலும் அவர் சிறந்த கொடை வள்ளலும் ஆவார். இதனை,
கணங்கொள் முகிற் செங்கைக் குவைலீது செல்வி கதீஜா(செய். - 324)எனக் குறிப்பிடுகின்றார்.
- வியத்தகு நிகழ்ச்சிகள்
நபிகள் பெருமானார் வாழ்வில் நிகழ்ந்த வியத்தகு நிகழ்ச்சிகள் சில மிகுராசு மாலையில் காட்டப்பட்டுள்ளன. அவைகளும் இங்குக் காணத்தக்கவை.
- மேகக்குடை
நபிகள் பெருமானார் இளமையில் கதீஜா பிராட்டியாரிடம் பணிக்கு அமர்த்தப்பட்டார். அவருடைய கூர்த்த மதியைக் கண்ட கதீஜா பிராட்டியார் அவரைச் சிரியா நாட்டிற்குச் சென்று வணிகம் செய்து வர அனுப்பினார். அவருக்கு ஓர் ஒட்டகமும் அதனை நடத்திச் செல்லப் பணியாளும் கொடுத்தார். ஆனால் அந்தப் பணியாள், ‘சிறிய நபிபிரானுக்கு இத்தனைச் சிறப்பா’ எனப் பொறாமை கொண்டான். ஊர் எல்லையைத் தாண்டி வணிகக் குழு வந்ததும் நபிபிரானை ஒட்டகத்தை விட்டு இறங்கி நடந்து வருமாறு செய்தான். ஏற்கெனவே அவருடைய தலைக்கு மேல் நிழலிட்டு வந்த மேகம் இன்னும் அகலப் பரவி நிழலிட்டது. இந்நிகழ்ச்சியை மிகுராசு மாலையார்.
மேகம் கவித்த குடையார் (செய். - 639)என்றும்
செல்லார் குடை நிழல் மீதிடைச் செகமேல் வருபவரே(செய். - 406)என்றும் காட்டுகிறார்.
- நகத்தால் நீர் அழைத்தது
மக்கமா நகரத்தில் நபிகள் பெருமானார் பரப்பி வந்த ஓரிறைக் கோட்பாட்டை அவ்வூரார் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ளாத எதிர்ப்பாளர்களுக்குத் தலைவராக அபுஜகில் என்பார் அமைந்தார். நபிகள் பெருமானாரைக் கொன்று விடக் கருதிய அபுஜகில் நபிபிரானிடம் ஊருக்கு வெளிப்புறம் உள்ள வெட்ட வெளிக்கு வந்தால், தான் இஸ்லாம் சமயத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறினான். நபிபிரானும் ஒப்புக் கொண்டு புறப்பட்டார். இருவரும் நடந்து பெரும் வனாந்தரத்திற்கு வந்தனர். அபுஜகில் தனக்குத் தாகம் எடுப்பதாகவும், இங்கு நீர்ச்சுனை ஒன்றைத் தோற்றுவித்தால் அத்தண்ணீரைக் குடித்தபின், தான் இஸ்லாம் சமயத்தை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினான். அவ்வளவில் நபிகள் பெருமானார் இறைவனின் திருநாமத்தை மனத்தில் நினைத்து கைநகத்தால் தரையைக் கீறினார். உடனே குபுகுபுவென்று இன்சுவை நீர் வெளிப்பட்டது. இதனை,
நகமீது மிக்கபுனலே யழைத்தநபி (செய். - 310)என மிகுராசு மாலையார் காட்டுகின்றார்.
- பிறையைப் பிளந்தது
டமாஸ்கஸ் நகரத்தை ஹபீப் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவ்வரசரின் அதிகார பலத்தைக் கொண்டு நபிபிரான் நவிலும் ஓரிறைக் கோட்பாட்டைக் கைவிடச் செய்துவிடலாம் என எதிரிகள் கருதினர். நல்லதொரு நாளில் ஹபீப் அரசரும் மக்காவிற்கு வந்தார். நபிபிரானை அழைத்து வருமாறு ஏவலர்கள் அனுப்பப்பட்டனர். ஏவலருடன் நபிபிரான் ஹபீபரசரின் முன்வந்தார். அவரைக் கண்டதும் ஹபீப் அரசரின் உள்ளத்தில் ஒருவித பக்திப் பெருவெள்ளம் பாய, தன்னையறியாமல் எழுந்து நின்று நபிபிரானை வரவேற்றார். இவர் இறையருள் பெற்ற நபி என ஹபீபரசரின் உள்ளுணர்வு கூறியது. ஆனால் அதனை மற்றவர்களுக்கும் உணர்த்த விரும்பினார். எனவே நபிகள் பெருமானிடம் கூறினார். ''அமாவாசை இரவில், நீங்கள் வானில் முழுமதியை வரவழைக்க வேண்டும். அது தன்னளவில் குறையாது வானில் எழுந்து பிரகாசிக்க வேண்டும். பின் அம்முழுமதி தரைக்கு இறங்கிக் காபாவை வலம் வந்து உயரே வானிற்குச் செல்ல வேண்டும். பின் உங்கள் விரல் அசைவால் அதனை இருதுண்டாகப் பிளவுபடுத்தி அவற்றைத் தனித்தனியே நிறுத்திக் காட்டிய பின்னர் ஒன்றாக இணைக்க வேண்டும்'' என்றார்.
நபிகள் பெருமானாரும் அதற்கு ஒப்புக் கொண்டு, எல்லாம் வல்ல இறைவனின் அருளால் அவ்வாறு நிகழ்த்திக் காட்டினார். இந்நிகழ்ச்சி மிகுராசு மாலையில்
பிறையைப் பிளவு செய்தோர் (செய் - 410)என அமைந்துள்ளது.
இவ்வகையில் மிகுராசுமாலையில் இஸ்லாம் சமயத்தை நிறுவிய நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.